Tuesday, December 22, 2009

சாணிக்குழி - இரண்டாவது சவாலுக்கு பதில் தொடர்கதையாக

"ஜெயா..சரியா தெரியல..இன்னும் கொஞ்சம் மேலத் தூக்கு.." இப்படி அவளுக்கு கேட்கும்படி காதருகில் குமார் சொன்ன விதம் தான் ஜெயாவை அதிகம் வசீகரித்தது.

"இதுக்கு மேல எப்படி..யாராவது பார்த்துருவாங்க..எத்தன தடவப் படிச்சி படிச்சி சொன்னாலும் உனக்கு புரியாதா.." குரலில் கண்டிப்பு தெரிந்தாலும் அவன் சொன்னதை செய்தாள்.

"ஜெயா அங்க என்னடி நடக்குது..பேப்பரை கீழே வைச்சு ஒழுங்கு மரியாதையா பரிட்சை எழுது.." டீச்சரின் சத்தம் பின்னால் இருந்து கேட்டது.

"இந்த கிழடுக்கு நான் காப்பி அடிக்கும் போது மட்டும் தான் கண்ணு நல்லா தெரியும்.." குமார் மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தான்.

பரிட்சை முடிந்ததும் டீச்சர் மேலிருந்த கோபத்தில் ஜெயாவிடன் முறுக்கிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு போய் விட்டான்.எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், அங்கே குழப்பத்தைத் தீர்க்கும் விதமாக மினி நின்றுக் கொண்டிருந்தாள்.

மினியும்ஜெயாவும் எட்டாம் வகுப்பு ஒரே பெஞ்ச்சில் குப்பைக் கொட்டியவர்கள். குமார் வழக்கம் போல மாப்பிள்ளை பெஞ்சு தான். ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போக வேண்டும் என்பதால் அதோடு மினியின் மேல்படிப்பிற்கு வீட்டில் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

"என்னடி இந்தப்பக்கம்.."

"எப்பவும் வர்றது தான்..ஐயா முத நட கண்ணு அறுத்துக்கிட்டு வருவாரு..இங்கிட்டு இருந்து வீட்டுக்கு நான் தூக்கிட்டுப் போகணும்.." சொன்ன மினியின் பாவாடை சட்டை முழுவதும் வாழைக்கறை இருந்தது.வாழைக்கண்ணை எடுத்து செல்வதற்கே இந்த உடையுடன் வந்திருப்பாள் போல என்று ஜெயா நினைத்து கொண்டாள்.

" சரி போற வழியில குமாரை பாத்தா குளத்தாங்கரைக்கு வர சொல்றியா.." ஜெயா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.இப்படி ஒரு லைன் ஓடுவது தெரிந்த மூன்றாவது ஆள் மினி தான்.

மினியின் ஐயா வந்து வாழைக்கண்ணு கட்ட அவள் தலையில் ஏற்றி விட்டப் பிறகு "ஐயா..ரெண்டாவது நட வரணுமா.." என்று கேட்டதும் "இல்லப் புள்ள நான் கொண்டு வந்துருவேன்.." சொல்லி விட்டு கிளம்ப

"நான் வர்றேன் ஜெயா..குமார் கிட்ட எப்படியும் சொல்லிருவேன்.." சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினாள்.

குமார் வீட்டுக்கு அருகில் வந்ததும் பாரம் தாங்காமல் கட்டை இறக்குவது போய் இறக்கி "குமார் கொஞ்சம் தூக்கி விடேன்.." என்று சொன்னாள் மினி.

"இரு மினி..வர்றேன்.." தூக்கி விடும் போது சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சொன்னாள். "ஜெயா மடையில் காத்திருப்பா..போய் பாரு.."

மினிக்கு கிளம்பும் போது தான் தெரிகிறது சிவா நின்று கொண்டு இருப்பது.சிவா குமாரின் அண்ணன்.

"ஏய்..போஸ்ட் மேன் கொஞ்சம் நில்லு..அதான் தினமும் கட்டு சரியா என் வீட்டுப் பக்கம் சரியுதா.." மினியை வம்புக்கு இழுக்க

"ஆமா..இவரு ரதி தேவி புரியன்..இவரப் பாக்க எங்க கட்டு சரியுதாம்..ம்க்கும்.." தலையை வெட்ட முயற்சி செய்தது தலை பாரத்தால் தோள் பட்டையில் இடிக்காமல் நின்று விட்டது.

"பாத்து..பாத்து..மெதுவா..தல கீழே விழுந்துறப் போகுது.." விடாமல் சிவாவும் வம்புக்கு இழுக்க.

"எங்க ஐயா கிட்ட சொல்லிருவேன்.."

"சும்மாவே உங்கப்பனுக்கு தலையாடும்..இதுல நீ சொல்றது காதுல விழவா போகுது.." விடாமல் கேலி செய்ய திருப்பத்தில் கொன்னுப்புடுவேன் என்று விரலை காட்டி நாக்கைத் துருத்தி வலிச்சம் காட்டினாள்.

"பாத்து நாக்குத் துண்டாகி கீழே விழுந்துறப் போகுது..அப்புறம் போஸ்ட் மேன் வேலை செய்ய முடியாது.." சிவா சொல்லி விட்டு திரும்பி பார்த்தால் குமார் முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

படிக்க போகிறேன் என்று புத்தகத்தை எடுத்துக்கிட்டு போனால் இவன் படிக்கற அழகில் குளம் நெரம்பி ஊரே வெள்ளக்காடா மிதக்கும். அதனால சித்தி வீட்டுக்கு போய் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவது போல குளத்துக்கு போயிரலாம்.

"சித்தி..தம்பி தூங்கிட்டானா.."

"என்னப்பா..தீடிர் பாசம்..சோழியன் குடுமி இப்போ எதுக்கு ஆடுது.."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா இப்படி வந்தேன்..தம்பியை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.."

"உலையில அரிசி போட்டு இருக்கேன்..மூத்தவனையும் இவனையும் வெளியில கூட்டிக்கிட்டு போ.."

வெளியே வந்ததும் மூத்த பையனுக்கு விவரம் தெரியும் என்பதால் கழட்டி விட முடிவு செய்தான்.மிட்டாய் வாங்கி குடுத்தாலும் அவன் குமார் கூடவே வந்துக் கொண்டிருந்தான்.

"டேய் அங்க போய் விளையாடு.."

"நான் உன் கூட தான் வருவேன்.."

"அடி வாங்காம ஓடிப்போயிரு.."

"என் தம்பிய குடு..போறேன்.."

"நான் வாங்கி தந்த மிட்டாய் எனக்கு இப்ப வேணும்..குடுத்துட்டு உன் தம்பிய எடுத்துக்கோ.." குமார் மிரட்ட வேறு வழியில்லாமல் இன்னும் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு வழியை விட்டான்.

குளத்தாங்கரையில் ஜெயா பெண்கள் குளிக்கும் இடத்தில்,குமார் ஆண்கள் குளிக்கும் இடத்தில். ஜெயா கையில் அவளுடைய அண்ணன் குழந்தை.குழந்தைகளை மாற்றி மாற்றி டாட்டா காட்ட சொல்லி மரோ சரித்ரா பாணியில் காதல் வளர்த்தார்கள்.

அது கொஞ்சம் கொஞ்சம் மாறி குழந்தைகள் மூலமாக பறக்கும் முத்தங்களும் பறிமாற்றப்பட்டன.லஞ்சப் பணம் ஒரு ரூபாயில் இருந்து இரண்டாக மாறியிருந்தது.

ஆறு மாதம் கழித்து குமாருக்கு மோசமான நாளில்..பறந்து வந்த முத்தத்தைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் போது

"குமார்..இங்க என்னடா பண்றே.." கோபத்தில் ஒலித்த குரலில் அதிர்ந்து போய் குமார் திரும்ப..

அங்கே..

(தொடரும்..)

டிஸ்கி :

ரொம்ப நாள் கழித்து லேபிளில் மொக்கை என்று போட வைத்த அண்ணன் துபாய் ராஜாவுக்கு இந்த தொடர்கதை சமர்ப்பணம்.நீங்கள் கேட்டவை.

கதை பிடிக்கவில்லை என்று யாரும் என்னை திட்டக் கூடாது.இந்த கொலைவெறிக்கு காரணம் அண்ணன் தான்.அவரை திட்டவும்.

கதை பிடித்திருந்தது என்றாலும் யாரும் என்னை பாராட்ட வேண்டாம்.பாராட்டுகளும் அவருக்கே.

அப்புறம் இந்த கதையில் நான் இருக்கிறேன்.எந்த கேரக்டர் என்று கண்டுப் பிடிப்பவர்களுக்கு அண்ணன் துபாய் ராஜா ஒரு ஒட்டகம் வாங்கி தருவார். அல்லது தம்பி உடைந்த கண்ணாடி இதயத்தை ஒட்ட கம்மாவது வாங்கி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7 comments:

நாடோடி இலக்கியன் said...

//ரதி தேவி புரியன்//

//வலிச்சம் காட்டினாள்.//

நல்லாயிருக்கு.



//நான் வாங்கி தந்த மிட்டாய் எனக்கு இப்ப வேணும்..குடுத்துட்டு உன் தம்பிய எடுத்துக்கோ.." குமார் மிரட்ட வேறு வழியில்லாமல் இன்னும் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு வழியை விட்டான்.//

இந்த பாரா வரைக்கும் இயல்பாய் பயணிக்கும் கதையில் அதற்கு கீழே நகர நாகரிகம் எட்டிப்பார்ப்பதை தவிர்த்திருக்கலாம்.

Unknown said...

கண்டு பிடிச்சுட்டேன்..., அந்த கொழந்த தான நீங்க...,

துபாய் ராஜா said...

தொடர்(மொக்கை)கதைக்கும் டிஸ்கியா... நீ திருந்தமாட்டே...

உன் கதையை நீயே மொக்கைன்னு சொன்னதைத்தான் அடைப்புகுறிக்குள் வழிமொழிஞ்சிருக்கேன்.

வார்த்தைகளை வலிந்து திணிக்காம இயல்பா எழுதணும்கிறது சவாலின் முக்கிய விதி.அதை டிஸ்கி போட்டு தூக்கி எறிஞ்சுட்டே....

இந்த தொடரை குறைந்தது ஒரு பத்து பாகமாவது எழுதிட்டு வர்ற பாராட்டு பின்னூட்டங்களை பார்த்திட்டு முடிக்கும்போது அண்ணண்ட்ட உடைந்த கண்ணாடி இதயத்தை ஒட்ட கம் கேட்டுருக்கலாம்.

உனக்கு டெம்பிளேட் பின்னூட்டம்தான் வேணும்ன்னா 'மாற்றுகருத்துகளுக்கும் இடம் உண்டு'ங்கிறதை எடுத்துட்டு,
'உண்மையான விமர்சனம் விரும்பாத ஆனால் மற்றவரை மட்டும் விமர்சித்து கிழிக்க விரும்பும் கண்ணாடி'ன்னு மாத்திடு ராசா....

இனி நான் 'ஃபோங்கு' ஆட்டத்துக்கு வரமாட்டேன்.

லோகு said...

@ துபாய் ராஜா : ஏன் இப்படி, ஓட ஓட விரட்டறீங்க...
@ அரவிந்த்: நீங்க எழுதுங்க தல.. நல்லா இருக்கு.. கதையோட ஆரம்ப வசனமே அட்டகாசமா இருக்கு.. :)

Beski said...

ஜூப்பர்பா.

இப்படி நல்லா எழுதிட்டு பாராட்டக்கூடாதுன்னா எப்புடி? கத இதுவர நல்லாத்தான் போகுது, பாத்து முடிங்க.

angel said...

shiva neengala

Nathanjagk said...

கதை ஆரம்பத்தில் செம தூக்கு தூக்குது! அப்பால ​தொடரும்-னு சர்னு மூடிட்டீங்க.
நெல்லை வாடை வீசுது உரையாடல்களில்!