Tuesday, May 31, 2011

ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன்

ஜெயமோகருக்கு இந்த உலகத்தில் தெரியாதது எதுவுமேயில்லை. கேள்வி கேட்டதற்கு பின்னூட்டப் பெட்டியை அடைத்து விட்டு வேர்ட்பிரஸில் இடத்தை அடைக்கிறது என்று பிளாக்கர் உலகத்துக்கே கண்டுப் பிடித்து சொன்னவர் ஜெயமோகன் மட்டும் தான்.

தலித் வந்ததால் கொல்கத்தா சேரி ஆகி விட்டதாம். நைஜீரியப் படுகொலைக்கு படுக்காலித்தனமாக படி மொக்கையான காரணம் சொல்பவருக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம். திருநெல்வேலி,சேலம் மக்கள் மும்பை போனதால் தான் தாராவி ஆசியாவின் மிகப் பெரிய சேரி ஆக்கி விட்டது என்று மும்பை போய் வந்தால் மணிக்கு ஒரு கோடி வார்த்தைகளை அடித்து வினாடியில் ஒரு கட்டுரை தயார் செய்து விடுமளவிற்கு வல்லமை படைத்த ஒரே ஆள் இவராகத்தானிருக்கும்.யாராவது இறந்து விட்டால் போதும் இறந்து போனவரே சொர்க்கத்தில் இருந்தாலும் அந்த சுகம் தெரியாது. நரகத்திற்கு போனால் எண்ணெய் கொப்பரையில் வறுத்தாலும் வலி தெரியாது. அவர்கள் கூட இதைப் பற்றி சிந்திக்கும் அளவிற்கு எழுதும் ஒரே இலக்கிலாவாதி மற்றும் இலக்கியவாதி இவர் தான்.

சினிமாவில் திரைக்கதை எழுத இவரை விட்டால் ஆளே கிடையாது. திரைக்கதைக்கு ஒரே உதாரணம் சிந்து சமவெளி தான். மகாபாரதத்தையே தளபதிக்குள் அடக்கிய மணிரத்னத்திற்கே பொன்னியின் செல்வனை அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் சுஜாதா இலக்கியவாதியே இல்லை என்று ஜெயமோகன் எழுத, அவரையே இதற்கு திரைக்கதை எழுத சொல்லியிருக்கிறார்.

ஒரு பக்க கதைக்கே சினாப்சிஸ் எழுத சொன்னால் ஜெமோ அதற்கு இருபது பக்கம் ஆக்குவார். பொன்னியின் செல்வனுக்கு எழுத சொன்னால் எப்படி இருக்கும். திரைக்கதை எழுதியப்பின் மணிரத்னத்தை பார்க்க சென்ற ஜெயமோகன் மணி மாடியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் கதை சொல்லும் அவசரத்தில் திரைக்கதை எழுதிய ஒரு லட்சம் பக்கத்தை அடுக்கி அதன் மேலே நிற்க ராவணன் உயரத்திற்கு வளர்ந்த அனுமனின் வால் போல திரைக்கதை கட்டுக்கள் அவரை பால்கனிக்கே கொண்டு போய் விட்டதாம்.

மணி ஆச்சர்யத்தில் ஜெமோ எப்படி இது சாத்தியம் என்று கேட்க ஒரு லட்சம் பக்கத்தை காட்ட நடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் திரைக்கதையை கொடுக்க போகிறோமோ என்று பார்வையாலே கேட்க.

உங்களுக்கு தான் மணி.அதுவும் இடைவேளை வரை தான் என்று ஜெமோ சொல்ல.

ஏற்கனவே ராவணன் படத்தால் நொந்து போயிருந்த மணி "ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன்.." என்று காட்டுக்கத்தல் போட அன்றே படம் டிராப்பாகி விட்டதாம்.

இப்படி ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன் என்று தமிழகத்தில் எல்லாரும் கத்தித் தொலைத்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

Friday, April 29, 2011

சம்பேஸ்தானுலு

பொண்ணுங்களுக்கு நேரம் காலமே தெரியாது. நாம யார் கிட்டயாவது வசமா சிக்கியிருப்போம். அப்போ தான் போன் பண்ணுவாங்க. ம், சரி, இல்ல இப்படி ஒரு வார்த்தையிலே பதில் சொன்னா உனக்கு என் மேல பாசமே இல்லன்னு ஆரம்பிச்சிருவாங்க. அப்புறம் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணணும்.

ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு எல்லோரும் வந்துருந்தாங்க.ஏற்கனவே வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்கன்னு கேக்க மாட்டோம்னு எங்க ரெண்டு பேருக்கும் நல்ல பேரு. இப்படி வெளியே போனா சொல்லவே வேணாம். அடுத்து படிச்சி முடிச்சிட்டு என்ன பண்ணப் போறன்னு மாமா கேக்க இது என்னடா கேள்வின்னு நினைச்சிக்கிட்டு எரிச்சலில் கல்யாணம்னு சொன்னேன்.

அப்போ தான் அவ போன்.உன்னை உடனே பாக்கனும்னு வாயேன் என்று எப்போவும் இல்லாத திரு நாளா ஆரம்பிச்சா.

"நாளைக்கு..கண்டிப்பா.."

"இன்னைக்கு வா.அதுவும் உடனே."

எல்லோரும் என்னை பாக்குற மாதிரி ஒரு நினைப்பு." மாமா வந்து இருக்காங்க.நாளைக்கு தான் வர முடியும்."

"மாமாவுக்கு பொண்ணு இருக்கா. அது எப்படி தான் இந்த கேள்வி எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தோணுமோ."

"இருக்கு."

"அதான் வர சொன்னா வர மாட்டேன்னு சொல்ற."

"நேர்ல சொல்றேன்."

"ஒண்ணும் சொல்ல வேண்டாம். சரி விடு இப்போ சொல்லு எண் மேல லவ் இருக்கா இல்லையா."

"இருக்கு.."

"அப்போ ஐ லவ் யூன்னு சொல்லு"

"முடியாது..

"சரி உனக்கு இங்கிலீஸ் வராதுன்னு தெரியும். தமிழ்ல சொல்லு."

"எப்படி.."

"காதலிக்கிறேன்னு சொல்லு"

"றேன். போதுமா.."

"முழுசா சொல்லு.இல்ல நம்ம லவ் புட்டுக்கும்."

"காலிக்கிறேன் கொல்டி.. போதுமா.."

"இது தப்பாட்டம்."

"என்ன தம்பி யார் கிட்ட பேசுற..முகமே சரியில்ல..என்ன காலின்னு கேட்டுச்சி."

"இல்ல ராங் நம்பர்.அதான் காலிப் பண்றேன்னு சொன்னேன்."

ராங் நம்பர் கூட இவ்ளோ நேரம் என்ன பேச்சு. குடு நான் பேசுறேன்னு சொல்லவும் போன் கட்டாயிருச்சி.

போன் அடிக்கும் போதெல்லாம் என்னை பாக்க ஆரம்பிக்க நான் நழுவி வெளியே வந்துட்டேன்.

சரி போன் பண்ணி லவ்,பியார்,காதல் இப்படி எல்லாத்தையும் சொல்லிரலாம்னு வெளியே வந்தேன். வழக்கமா எங்க ஏரியா பொண்ணுங்க யார் கிட்டயாவது கேட்டு (கெஞ்சி கூத்தாடி) அவ வெட்டுக்கு போன் பண்ண சொல்லி போன் அவ கைக்கு போனதும் நான் பேசுவேன்.அவசரம்னா தான் ஆண்டாவுள்ள கை போகாதே. ஒருத்தரையும் காணோம்.

நானே போன் பண்ணினா அவங்க அப்பா போன் எடுக்க.

சார் நாங்க ஏக்நாத் பவுண்டேஷன்ல இருந்து பேசுறோம். நீங்க மாசாமாசம் பணம் கட்டினா ஊட்டில தேக்கு மரம்,பாக்கு மரம் எல்லாம் கிடைக்கும்னு சொல்லி முடிக்கல போன் வச்ச சத்தம் தான் கேட்டது.

பத்து நிமிஷம் கழிச்சி போன் பண்ணினா அவ தம்பி.

சங்கர் வீடா..

என் சலீம் வீடா..சைமன் வீடான்னு கேக்க வேண்டியது தானே.அக்கா கிட்ட கொடுக்கட்டுமா அப்பா கிட்ட கொடுக்கட்டுமா..

டேய் ராஜா அப்பா எல்லாம் வேண்டாம் அக்கா கிட்டே கொடு

அப்பா கிட்டயே தர்றேன்..

சரி கொடு..

ரொம்ப தைரியமோ..அப்பா..அப்பா..

உன் சயின்ஸ் நோட்ல ஒரு லெட்டர் இருந்ததே.அது இப்போ எங்க. உங்க அப்பா வரட்டும். என் தங்கச்சிக்கு லவ் லெட்டர் தர்றான்னு உங்க ரெண்டு பேரையும் கிழிக்கிறேன்.அக்கா கிட்ட கொடு செல்லம்.

அவ கிட்ட போன் போனதும்

கொல்டி இப்போ சொல்றேன். லவ் யூ.காதலிக்கிறேன்..இப்போ வரட்டுமா

வேண்டாம் விடு..நாளைக்கு..

என் மேல உனக்கு லவ்வே இல்ல

இருக்கு

அப்போ லவ் யூ சொல்லு

அப்புறம்

ஆங்.. என்னமோ சொன்னதா ஞாபகம்..உனக்கு இங்கிலீஸ் வராது. உன் கொல்டி மொழியில சொல்லு

என்ன சொல்லணும்

சாலப் பிரேமிஸ்தானுலு..

முடியாது..

நான் அப்போ த சொல்லாம விட்டேன். உனக்கும் ஒரு ஆப்சன் தர்றேன். நீ லுவை விட்டுரு. எங்க சொல்லு சாலப் பிரேமிஸ்தானு..

முடியாது ..

சொல்லு..இல்ல நம்ம லவ் புட்டுக்கும்..

முடியாது..

சரி விடு..அட்லீஸ்ட் சம்பேஸ்தானுலு சொல்லு.. சரி வேணாம் சம்பேஸ்தானு..

சம்பேஸ்தானு.. என்று அவ சொல்லி முடிக்கவும் அவங்க அப்பா வரவும் நான் போனை வைத்து விட்டேன்.

அடுத்த நாள் பாக்கும் போது அவ சொன்னா அவங்கப்பா செம திட்டாம். இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு தான் சென்னைக்கு வந்தோம். இங்க வந்தும் இப்படியான்னு ஒரு மணி நேரம் அட்வைஸ் ஆடை மழையா பெய்ததாம்.

அதுக்கு நான் தான் காரணம்னு சொல்லி எத்தனையோ தடவை சாரி கேக்க சொன்னா.நீ தானே ஆரம்பிச்ச நீ கேளுன்னு சொன்னா நீ எத்தனை சாரி சொன்னியோ அத்தனை சாரின்னு சொல்றா.

அப்போ தான் புரிஞ்சது பொண்ணுங்க கூட பேசினாலும் சம்பேஸ்தானுலு தான். பெசளைனாலும் சம்பேஸ்தானுலு தான். பொண்ணுங்க அரசியல்வாதியோட மோசம். அதான் 33 சதவீதம் கூட தரலைன்னு சொன்னதுக்கு ஒரு மாசம் பேசலை.

அந்த போன் நம்பர் தான் என் பயர்பாக்ஸ் பிரவுசரோட மாஸ்டர் பாஸ்வேர்ட்.

Sunday, April 24, 2011

உலூபியின் நாகமணியும்,காதலும்

அரக்கு மாளிகையில் தங்க செல்லும் பாண்டவர்களை விதுரர் வழியனுப்பி வைக்கிறார். "வயலில் தீப்பிடித்தால் எலிகள் வளையில் பதுங்கி விடும் என்று பூடகமாக சொல்கிறார். அவர் சொன்னபடியே சுரங்கம் வழியாக பாண்டவர்கள் தப்பிச் செல்கிறார்கள். இடும்ப வனத்தில் தங்குகிறார்கள். இடும்பன் தூங்கும் பாண்டவர்களைப் பார்த்து தங்கையிடம் அவர்களை கொன்று சமைத்து வைக்க சொல்கிறான். இடும்பியோ பீமன் மீது காதல் கொள்கிறாள். இடும்பனை வென்று இடும்பியின் காதலை ஏற்கிறான். குழந்தைப் பிறக்கும் வரை உன்னுடனே இருக்கிறேன்.அப்புறம் பிரிந்து விடுவேன் என்று சொல்லி இடும்பியோடு செல்கிறான்.கடோத்கஜன் பிறந்ததும் பாண்டவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். கடோத்கஜன் பிறந்ததும் பெரிதாக வளர்ந்து விடுகிறான். என்னால் உங்களுடன் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தால் எங்கு இருந்தாலும் வருவேன் என்று சொல்லி மறைகிறான்.

பாண்டவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொல்கிறார்கள். திரௌபதியை ஜெயித்து குந்தியிடன் அழைத்து செல்ல உணவு என்று நினைத்து ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று குந்தி சொல்ல ஐவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்திரபிரஸ்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். திரௌபதியுடன் ஆளுக்கு ஒரு வருடம் வாழ்கிறார்கள். அந்த சமயத்தில் வேறு யாராவது அந்தபுரத்தில் நுழைந்தால் அவர்கள் ஒரு வருடம் வனவாசம் போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு .தர்மரோடு திரௌபதி வாழ்ந்து வரும் போது ஒரு அந்தணன் அர்ஜுனனிடம் உதவிக் கேட்டு வர ஆயுதம் எடுக்க அந்தபுரம் வழியாக போக வேண்டும். உதவி செய்ய நிபந்தனையை அர்ஜூனன் மீற வனவாசம் செல்கிறான்.

காட்டில் தவமிருக்கும் நேரத்தில் பலராமன் சுபத்ரையைத் தன்னுடைய சிஷ்யனான துரியோதனனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ய அர்ஜூனன் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறான். கிருஷ்ணன் உதவியோடு முனிவர் வேஷத்தில் போய் சுபத்திரையைத் திருமணம் செய்கிறான். அபிமன்யூ பிறக்கும் முன் வனவாசத்தை முடிக்காதது நினைவுக்கு வர கிருஷ்ணனிடம் சொல்லி விட்டு தேசாந்திரம் செல்கிறான்.மணிப்பூருக்கு செல்லும் போது சித்ராங்கதையுடன் காதல். வாரிசு பிறந்தால் அர்ஜூனன் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று சொல்லி திருமணத்திற்கு நடக்கிறது. பப்ருவாகணன் பிறக்கும் முன் அவளை பிரிந்து தவம் செய்து விட்டு களைப்பில் தடாகத்தில் நீர் அருந்தும் போது மயங்கி விழ முழித்து பார்த்தால் மெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். எதிரே அழகான பெண் வேறு. நாக கன்னிகை உலூபி காதலைச் சொல்ல அர்ஜூனன் ஏற்க மறுக்கிறான். இறந்து விடுவேன் என்று உலோபி சொல்ல அர்ஜூனன் சம்மதம் சொல்கிறான்.அரவான் பிறக்கும் முன் அங்கிருந்து கிளம்புகிறான். நீர் நிலையிருக்குமிடத்தில் யாருடன் சண்டையிட்டாலும் உனக்கு தோல்வி கிடையாது என்று வாழ்த்தி அனுப்புகிறாள் உலூபி.

பாண்டவர்கள் சூதாடி விட்டு தோற்று வனவாசம் செல்கிறார்கள். அபிமன்யூவும்,சுபத்ரையும் விதுரர் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார்கள். ரேவதி - பலராமர் மகள் வத்சலா அபிமன்யூ மீது காதல். பலராமர் துரியோதனின் மகன் லட்சுமனுக்கு வத்சலாவைத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்ய கிருஷ்ணன் அபிமன்யூவிற்கு கொடுப்பது என்ற வாக்கைக் காப்பாற்றுவது தான் சரி என்று சொல்ல பலராமனோ அப்போது பாண்டவர்கள் அரசர்கள் இன்று அபிமன்யூ விதுரர் பாதுகாப்பில் இருக்கிறான் என்று மறுத்து விடுகிறான்.

பபாண்டவர்கள் அந்த சமயத்தில் விடார தேசத்தில் பதுங்கி இருக்கிறார்கள்.வெளிப்பட்டால் திரும்ப வனவாசம் போக வேண்டும். அபிமன்யூ வத்சலாவைத் திருமணம் செய்ய சுபத்ரையோடு கிளம்புகிறான். கடோத்கஜன் இருக்குமிடத்தைத் தாண்டி தான் போக வேண்டும். கடக்கும் போது இருவருக்கும் சண்டை வர அபிம்ன்யூவைக் கடோத்கஜன் கொன்று விடுகிறான்.தேவதைகளின் வரத்தால் உயிர் பெறும் அபிமன்யூ கடோத்கஜனைக் கொன்று விடுகிறான். உலூபி நாகமணியால் கடோத்கஜனுக்கு உயிர் தந்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். துரியோதனன் பின்னாளில் போர் வந்தால் யாதவர் சேனை நமக்காக சண்டையிடும் என்று திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.கடோத்கஜன் மற்றும் அவனது படையினர் மணமகன் வீட்டார்களாக மாறி அவர்கள் அசந்திருக்கும் நேரத்தில் வத்சலாவைக் கடத்தி அபிமன்யூவிர்கு திருமணம் செய்து வைக்கிறான். கோபப்படும் பலராமனை கிருஷ்ணன் சமாதானனப்படுத்துகிறான்.

பாண்டவர்கள் கண்டுப் பிடிக்க முடியாத சோகம், கல்யாணம் நின்று போனது என்று பழ கவலையில் இருக்கும் துரியன் எப்படியும் போர் நடக்கும் என்று ஊகித்து படைத் திரட்ட அவன் மகளான லட்சுமனைக்கு சுயம்வரம் வைக்கிறான். அவளுக்கோ கிருஷ்ணன் மகன் சாம்பன் மீது காதல். சுயம்வரத்தில் தனியாளாக நின்று பெண்ணைக் கடத்தி கொண்டு வரும் சாம்பனை கௌரவப் படை சுற்றி வளைத்து தாக்க தனியனாக எல்லோரையும் சமாளிக்கிறான்.பீஷ்மர்,கர்ணன்,துரோணர் களமிறங்கிய பின்னே சிறைப் பிடிக்கப் படுகிறான். பலராமன் நம் நட்பை இப்படி செய்து கெடுக்காதே என்று ஆயுதத்தை எடுக்க அஸ்தினாபுரம் ஒரு ஆட்டம் ஆடி அடங்கியதாம். துரியனும் ஒன்றும் சொல்ல முடியாமல் சாம்பனை விடுதலை செய்கிறான்.

சமாதானமாக போகலாம் என்று பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது அனுப்ப தூது வந்தவனையே சிறைப் பிடித்து சண்டை தான் என்று சொல்லாமல் சொல்லி அனுப்புகிறான் துரியன். போருக்கு முன்னதாக சாமுத்திரிகா லட்சணமுடைய ஒருவனை பலி கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சகாதேவன் கணித்து சொல்கிறான். பாண்டவர்கள் தரப்பில் எல்லா லட்சணமும் உடையவர்கள் இரண்டே பேர் தான். அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணன். அல்லியின் மகனைக் கேட்க முடியாது. பப்ருவாகணன் நினைவுக்கே வரவில்லை. உலூபி தான் நினைவுக்கு வருகிறாள். அரவானைக் கேட்டு அர்ஜூனன் செல்கிறான். உலூபியால் மறுக்க முடியவில்லை.

அரவானை பலியிட போகும் போது நான் இன்னும் திருமணமே செய்யவில்லை. ஒருநாள் ஒரு பெண்ணுடன் இருந்து விட்டு நாளை பலி கொடுக்கலாமே என்று அரவான் சொல்ல எந்த பெண் வேண்டும் என்று கிருஷ்ணன் கேட்க என் அப்பா மனைவியோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருக்கிறார்.நீயென்ன அப்படி விசேஷம்.நானும் உன்னோடு தான் இருக்க வேண்டும் என்று அரவான் சொல்கிறான். கடைசி ஆசையை மறுக்க முடியாமல் கிருஷ்ணன் பெண்ணாக மாற திருமணம் முடிந்து காலையில் அரவானைப் பலியிட்டதும் கிருஷ்ணன் தாலியை அறுத்துக் கொண்டு மாரில் அடித்துக் கொண்டு கதறி அழுகிறான். உலூபி நாகமணியைத் தவற விடுகிறாள். சூரியன் இன்னும் எத்தனை பேர்களை இவர்கள் இருவரும் கொல்லப் போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டே மங்கிப் போகிறான்.

(தொடரும்.. சற்றே பெரிய சிறுகதை..)

Monday, March 28, 2011

சீதையின் இன்பீனிட்டி காதல்

பஸ்சில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது கூட காதலை அவளிடம் இன்றே சொல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியாது.

நான் டென்த் படிக்கும் போது ஒரு பையன் என் கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னான். அதுல இருந்து அவன் கூட நான் பேசுவதை நிறுத்தி விட்டேன். ரொம்ப நல்ல பையன் தெரியுமா என்று அவள் சொல்லி முடிக்கும் முன் நான் கூட உன்னை லவ் பண்றேன். நானும் நல்ல பையன் தான். என் கூட பேச மாட்டியா என்று அவள் கண்ணுக்குள் பார்க்க முயன்று தோற்று விட்டேன்.

அவள் கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை. என்னை நெருங்கி வருபவர்களை எல்லாம் நெருக்கடியில் தள்ளாமல் நான் இருந்ததேயில்லை. அதற்கு மேல் இருவரும் பேசவில்லை. எழுந்து முன்னாள் போய் விட்டேன். அவள் பார்வை என் முதுகைத் துளைத்துக் கொண்டிருந்தது. நான் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தேன். முதுகில் ஓட்டை எதுவும் விழுந்து விட்டதா என்று அடிக்கடி தடவிக் கொண்டேன். அவ்வளவு கூர்மையாக என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது.

அவளுடைய நிறுத்தம் வருவதற்கு முன்பே இறங்குவதற்கு வாட்டமாக எனக்கு எதிரே வந்து நின்றாள். தூங்குவதாய் நடித்துக் கொண்டிருந்தேன். அவள் கூப்பிடுவதாய் நண்பன் எழுப்பிக் கொண்டிருந்தான். தூங்கும் போது எழுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் என்று அவன் மேல் எரிந்து விழுந்தேன். தூங்குறவனை எழுப்பலாம் அப்படி நடிப்பவனை எழுப்ப முடியாது. அவனை விடுங்க என்று சொல்லி விட்டு விடுவிடுவென இறங்கி போய் விட்டாள்.

"என்னடா போயாச்சா.."

"பின்ன இன்னுமா மானங்கெட்டுப் போய் இங்க நிப்பா..ஒரு பொண்ணு கிட்ட ஒழுங்கா பேச தெரியுதா..எப்ப பாத்தாலும் பெரிய புடுன்கின்னு நினைப்பு..உன்ன கிட்ட இன்னும் பேசுறாலே அவளை சொல்லணும்.."

அவனிடம் எதுவும் சொல்லவில்லை.பஸ் அவள் நிறுத்தத்தைத் தாண்டி அங்கிருக்கும் முட்டு சந்தில் திரும்பி வரும். அவள் இன்னும் அங்கேயே நிற்கலாம் என்று வலது பக்க இருக்கையிலிருந்து இடது பக்கம் போய் அமர்ந்துக் கொண்டேன்.

"இப்போ எதுக்கு அந்த பக்கம் போறே.."

"வெயில் அடிக்குதுடா மச்சி.."

"எங்க உன் மனசுல தானே.."

ஒன்றும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தேன். அவள் அங்கு நிற்கவில்லை.

"மச்சி இந்த பக்கம் இருக்கா.." என்று கத்திக் கொண்டிருந்ததவனை விலக்கி பார்க்க முயற்சித்தேன். அவளும் சாலையைக் கடந்து வலதுபக்கம் நிற்பாள் என்று நான் நினைக்கவேயில்லை.

"இப்போ மனசுல மழை அடிக்குமே.." என்று சீண்டிக் கொண்டிருந்தான். எல்லா மாற்றங்களும் நண்பர்களுக்குத் தான் தெரிகிறது. மழை தூறலாக ஆரம்பித்து பெரு மழையாய் மாறிக் கொண்டிருந்தது.

தொடரும்

Tuesday, March 22, 2011

அன்பென்னும் அதீத வன்முறை

காலனி வீட்டிற்கு குடி போய் ரெண்டு நாள் கழித்து தான் பாரதியைப் பார்த்தேன். தெருவில் விளையாடி கொண்டிருந்தவள் என்னை பார்த்ததும் இங்க வாடா என்று சொன்னதற்கு சும்மா சிரித்து வைத்திருக்கலாம். என் நேரம் சரிதான் போடி என்று சொல்லி விட்டேன். விளையாடுவதை விட்டு விட்டு நேராக வந்து என்னை அடித்து விட்டு போனவள் பின்னாலே போய் தள்ளி விட்ட ஆரம்பித்த சண்டையின் நீட்சியாக எனக்கு முகத்தில் நகக்கீறல்களும்,அவளுக்கு கை முழுவதும் சிராய்ப்புமாய் இருந்தது. வீட்டிலிருந்து அவள் அம்மாவை கூட்டிக்கிட்டு வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பே நகக் கீறல்களின் மீது டிஞ்சர் தடவியது போலிருந்தது. வழக்கமாக செய்யும் எல்லா சேட்டையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன்.

"என்ன புள்ளிக்காரன் இழுத்து மூடியிருக்கான்..என்ன விஷயம்.." என்று அப்பாவின் குரல் கேட்டதும் இன்னும் உதற ஆரம்பித்தது. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து விட்டு "யார் கூட இன்னைக்கு சண்டை.." என்று விசாரணை ஆரம்பித்ததும் "அப்பா பாரதி தான் முதல்ல அடிச்சா..இவன் அப்புறம் தான் அவளை கீழே தள்ளினான்.." என்ற தம்பியின் சாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அடுத்த நாள் தான் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறியது. பாரதியின் குரல் கனவில் கூட கேட்பது போல பிரமை. முழித்து பார்த்தால் கால்மாட்டிலே இருந்தவளைப் பார்த்ததும் வெளியே போடி என்று கத்தலாம் போலிருந்தது. போடி என்றால் அடிப்பாளே என்ற பயத்தை விடவும் அப்படி சொன்னால் வீட்டில் திட்டு விழுமே என்ற காரணத்தினால் வெளியே போடி என்று சைகையில் சொல்ல ஆரம்பித்தேன். அவள் கண்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. தம்பி எந்திரிச்சிட்டான் என்று சொன்னவளைப் பார்த்து கொலைவெறி வந்து போனது.

பாரதி அவள் வீட்டின் கடைக்குட்டி. அவளுக்கு தம்பி வேண்டும் என்ற ஆசை வீட்டில் நிறைவேறாத காரணத்தால் வெளியே புதிதாக பார்க்கும் பசங்களிடம் எல்லாம் சண்டையிழுப்பாளாம். அவளுடன் சண்டையிடும் பையனைத் தான் தம்பி என்று கூப்பிட வேண்டும் என்று சங்கல்பமே வைத்திருந்தாக பின்னாளில் வெளியே விசாரித்து தெரிந்து கொண்டேன். பாரதி உங்கிட்ட வம்பிழுத்தாளா என்று தம்பியிடம் கேட்டதற்கு ஆமாம் என்னையும் யாருடா நீ என்று கேட்டா.நான் ஒண்ணும் சொல்லவில்லை. அவ போயிட்டா என்று சொன்னதும் ஆகா நாம தான் மினியேச்சர் சனியனைப் பனியனுக்குள் போட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அவள் தம்பி என்று பள்ளி முதல் சர்ச் வரைக்கும் சொல்லி வைத்திருக்கிறாள். எந்த பிரச்சனையும் பள்ளியில் செய்ய முடியாது. பாரதி தம்பி தானே நீ.அவ எப்படியிருக்கா.நீ ஏன் இப்படியிருக்க என்று சொல்லி விட்டு தான் அர்ச்சனையை ஆரம்பிப்பார்கள். இதை கூட தாங்கி கொள்ளலாம். என் கூட பேசக்கூடாது என்று வகுப்பு பொண்ணுங்களை எல்லாம் மிரட்டி வைத்திருக்கிறாள். இந்த தொல்லை போதாது என்று மச்சான் மச்சான் என்று தோளில் கையைப் போடும் பாரதியைக் காதலிப்பவர்கள். என் வாழ் நாளில் அவள் தவிர்த்து எந்த பொண்ணுக்கும் இந்த அளவுக்கு பயந்ததேயில்லை. அவ என் அக்காயில்லை என்பதை மட்டும் வன்மத்தோடு சொல்லியிருக்கிறேன்.

அவள் எனக்கு நாலு வருஷ சீனியர் என்பதால் கொஞ்ச நாளிலேயே பள்ளியில் அவள் தொல்லையில்லை. வகுப்பிலிருக்கும் பெண்கள் மட்டும் தான் பேச மாட்டார்கள். அவள் வாசமே இல்லாதயிடத்தில் சகவாசம் வைத்து கொள்ளலாம் என்று மனதை தேற்றிக் கொள்வேன். நான் கல்லூரியில் சேரும் போது வேலைத் தேடிக் கொண்டிருந்தாள். நான் கல்லூரிக்கு போகும் பஸ்ஸில் தான் முதல் முறையாக அந்த பெண் அறிமுகம் ஆனாள். அவளிருக்குமிடத்தைக் கண்டுப்பிடிக்க வேலை அவுட் சோர்சிங் செய்யப்பட்டது. எல்லா விஷயமும் மிக முக்கியமாக பாரதி தெரியாமல் ஒரே நாளில் சேகரிக்கப்பட்டது. பாரதி ஊரில் இல்லாத நாளாக பார்த்து கட்டடித்து விட்டு அவள் கல்லூரி முன்பு நின்றுக் கொண்டிருந்தேன். பாரதி வந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. சிகரெட் பிடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.சிகரெட் பிடிப்பது முதல் முறை. கையில் வைத்தே சிகரெட் கொளுத்திக் கொண்டு திரும்பினால் பாரதி நின்று முறைத்து கொண்டிருக்கிறாள்.

"எத்தனை நாளாடா இந்த பழக்கம்..அம்மாட்ட சொல்லட்டுமா"

"பாரதி இதான் முதல் சிகரெட்..இன்னும் பிடிக்கல.."

"இந்த காலேஜ் என்ன பண்றே..ரெண்டு நாள் ஊர்ல இல்லன்னா என்னயெல்லாம் பண்றே.."

"பாரதி இன்னைக்கு காலேஜ் லீவ்.."

"பொய் வேற.."

"ஆமா எனக்கு அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு..கட்டடிச்சிட்டு தான் வந்தேன்..அதே மாதிரி இன்னைக்கு தான் முதல் தம் பத்த வைச்சேன்..நம்புனா நம்பு..இல்ல நம்பாதே.."

"காலேஜ் வந்துட்டோம்னு திமிரா.."

"சரி உனக்கென்ன என்ன வேவு பாக்குறது தான் வேலையா..நீ இங்க என்ன பண்ற.."

"நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..உனக்கென்ன வயசு..அதுக்குள்ள இதெல்லாம் தேவையா.." என்று ஆரம்பித்து எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும் தான் விட்டாள்.

"சரி உன்னை கேட்டே எல்லாம் பண்றேன்..ஆள விடு தாயீ..இங்க என்ன பண்றே.."

"காலேஜ்ல வேலை கிடைச்சிருக்கு..உன் கிட்ட சொல்லலாம்னு போன் பண்ண வந்தேன்..நீ நிக்குற.." என்று அவளே சமாதானப்படுத்தி பக்கதிலிருந்த பிரியாணி கடைக்கு போய் என்னை எதுவும் கேட்காமல் அவளே ஆர்டர் கொடுத்தது இன்னும் எரிச்சலை அதிகப்படுத்தியது.

"இந்தா இதை சாப்பிடு..பிச்சி சாப்பிடு.." என்று அவள் செய்வதெல்லாம் கோபத்தைக் கிளறிக் கொண்டிருந்தது.

"நல்லவேளை நீ என் அக்காவா பொறக்கல.." என்று முனங்கினேன்.

"என்ன சொன்ன.." அடுத்த சண்டைக்கு தயாராகி கொண்டிருப்பது தெரியாமல் "நல்லவேளை நான் உனக்கு தம்பியா பொறக்கலன்னு சொன்னேன் போதுமா.." சொல்லி வாயை மூடுவதற்குள் அவள் தட்டிலிருந்த பிரியாணி என் சட்டையிலும் முகத்திலும் வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று கண்ணை மூடி அங்கேயே அமர்ந்திருந்தேன். இவ மூஞ்சிலேயே இனி முழிக்கக்கூடாதுன்னு நினைத்து கொண்டு கண்ணைத் திறந்தால் அவள் எதிரில் இல்லை. எப்பவும் இன்னொரு சட்டை கூடவே வைத்திருப்பேன். முகத்தை எல்லாம் துடைத்து விட்டு அந்த சட்டையை அணிந்து கொண்டு கல்லாவில் பணம் கட்ட போனேன்.எல்லா கண்ணும் என்னையே பார்ப்பது போலிருந்தது.

"எவ்வளவு பில்.."

"அந்த லூசுப் பொண்ணு குடுத்திருச்சி.." என்று என்னை சமாதானப்படுத்திய அவரிடம் எரிச்சலோடு கத்தினேன்.

"அவ என் அக்கா.." என்று சொல்லி விட்டு வெளியே வந்தால் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறாள்.

"என்னை மன்னிச்சிரு..வா இன்னொரு பிரியாணி சாப்பிடலாம்.." என்று கண்ணீரோடு சொன்னவளைப் பார்த்து வேண்டாம் என் கிட்ட வேற சட்டையில்ல.இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்று சொன்னதும் என்னை இழுத்துக் கொண்டே நடந்தாள்.

"விடு வர்றேன்.." என்று சொல்லியும் விடவில்லை.

காலேஜ் விடும் நேரம்.எந்த பொண்ணு காட்டு என்று கேட்டுக் கொண்டிருந்தாள். நீயே கண்டுப்பிடி என்று சொல்லி விட்டேன். ரெண்டு நாளில் அவள் படத்தோடு வந்து இவதானே என்று கேட்டாள்.

"ஆமா எப்படி கண்டுப்பிடிச்ச பாரதி.."

"இவளை பார்த்தால் தான் எனக்கு கோபம் வந்தது.." என்று சொன்னவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் சிரிக்கிற.." என்று கேட்டவளிடம்

"இல்ல அவ சொன்னா பாரதி உனக்குத்தான் அக்கா..எனக்கு மாமியார்க்காரி..இப்படி சொன்னதற்கு நான் அவ சண்டைப் போட்டேன்..ஆனா அது உண்மை தான் போல.." என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

"அவளை வர சொல்லு..போய் பிரியாணி சாப்பிடலாம்.."

சரி என்று சொல்லி விட்டு இரண்டு சட்டையை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தேன்.

Monday, March 21, 2011

தலைமுறையாய் தொடரும் கனவு

வெளியாட்களுடன் சேர்ந்து தங்க நேர்ந்தால் தூங்குவதேயில்லை. விடிய விடிய இணையத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தேன். நானில்லாத இணையம் ஆர்டிக்கின் ஆழமில்லாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் கிடைக்காத ஒரு நாளில் இறந்து போன பெங்குயினாய் போய் விடுமோ என்ற பயமும் ஒரு காரணமாயிருக்கலாம். அது தவிர என் பலவீனங்களை வெளியே தெரிய விடுவதேயில்லை.

குர்ரம்,குர்ரம் என்று தூக்கத்தில் புலம்புவது கூட தூங்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். குர்ரம் யார் பாஸ் உங்க ஆளா என்று கேட்பவர்கள் சுற்றியிருக்கும் பட்சத்தில் வலையைக் காய வைத்து விட்டு தூங்கி விடுவேன்.அந்த கனவு என்னை துரத்தும் முன் வரை நானும் குர்ரம் என் பூர்வ ஜென்ம காதலியாகயிருக்குமா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

குர்ரம் என் ஒன்று விட்ட தம்பி. என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்பா சலீமை விட தாத்தாவிற்கு என்னை பிடிக்கும். தாத்தா சாகவே மாட்டாரா என்று அப்பா உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த காலம். தாத்தாவின் அருகாமையிலே இருந்ததால் என்னையும் பிடிக்காமல் போய் விட்டது போல. பட்டத்து யானைகள் மோதிய போட்டியில் என் யானை அப்பாவின் யானையை ஜெயித்திருந்ததின் நீட்சியாக நாங்கள் வாள் கலந்திருந்தோம். தாத்தா சொன்னதால் குர்ரம் வந்து தடுத்து விட்டான்.

தாத்தா இறக்கும் முன் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்த அப்பாவிற்கு தண்டனைகள் எதுவும் கிடைக்காமல் போனதிற்கு அந்தப்புர செல்லத்தினாலும் உயிரோடியிருக்கும் ஒரே பிள்ளை என்பதால் மட்டுமே. போதைப்பொருள் எல்லாம் குறைத்துக் கொண்டார் போல.அதற்கு பிறகு நானில்லாத ஒரு நாளில் தாத்தா இறந்து போகும் முன் உடைவாளை அப்பாவிடம் தந்து விட்டு இறந்து போனாராம். என்னை தேடியதாக பின்னொரு நாள் கிசுகிசுத்தார்கள். அப்பா பாணியில் அதிரடியாக அரியணையைக் கைப்பற்றலாம் என்றால் தாத்தா பாணியில் எளிதாக் முறியடித்து என்னை சிறைப்படுத்தி விட்டார்கள். இன்னொரு தப்பித்து மாட்டியதால் கண்ணைக் குடுடாக்கி விட்டார்கள். எல்லாம் ஒரு நாளில் போனது போலிருந்தது. தம்பியுடன் என்னை அனுப்பியிருந்தார்கள்.குருடனுக்கு வேட்டையாடும் இடத்தில் என்ன வேலை என்ற கேள்வி யாருக்கும் வராமல் போனது ஆச்சர்யமே. கழுத்து நெறிப்பட்டு நான் சாகும் போது குர்ரம் வேட்டைக்குப் போயிருந்தான். அவன் கை நீளம் தான். வேட்டையாடும் இடத்திலிருந்து நீண்டு என் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு நீண்ட கைகளை ஆராய்ச்சியாளர்கள் எதிலும் குறிப்பிடாமல் போனது வருத்தமே. திருத்தி எழுதுவது தான் வரலாறு என்று ஒரு பெண்குரல் கேட்டது. என் ஒரே மனைவியாகயிருக்கலாம். திருத்தி எழுதப்பட்ட வரலாறாகயிருந்தாலும் அவன் மகன் அவனுக்கு செய்த கைமாறை கேள்விப்பட்டப் போது திருப்தியாகயிருந்தது.

அன்று குடிக்குமிடத்திற்கு போயிருக்கக்கூடாது. நான் தங்கியிருக்குமிடத்திலிருந்து ரொம்பவே தூரம். குடித்தவன் அறையிலே தூங்க வேண்டிய நிர்பந்தம். தூங்காத இரவாகத் தொடங்கியது. அவன் தூங்கும் போது அக்பர் அக்பர் என்று சொல்ல ஆரம்பித்தான். அடிக்கடி கண்ணைத் தொட்டு தொட்டுப் பார்த்தான். திரும்ப குடிக்கலாம் என்று சொன்னான். விசாரிக்கும் போது அவன் ஹெமூ என்று சொன்னான். எப்போதிருந்து இந்த கனவு உனக்கு வந்தது என்று கேட்டால் ஒரு கலவரத்தின் போது அவனுடைய ஊரிலிருந்து தான் ஆயுதங்களை அனுப்பினார்கள். அன்றிலிருந்து இந்த கனவு என்று சொன்னான். ஹெமூ ஆரம்பத்தில் ஆயுத வியாபாரி என்று சொன்னதும் மெலிதாக புன்னகை செய்தான்.

அக்பர் இந்த தோல்விக்கு காரணமல்ல எவனோ பெயர் தெரியாதவன் விட்ட அம்பு தான் காரணம் என்று சொன்னதிலிருந்து அவனுக்கு அந்த கனவு வருவதில்லையாம். வந்தாலும் அம்பு எய்தவன் பெயர் தெரியாத காரணத்தால் கலைந்து விடுகிறதாம். எனக்கு கனவு விட்ட பாடில்லை.அவன் நிம்மதியாக தூங்குவதை கண்டு உன் தலையை வெட்டியது பைராம் கான் என்றாவது சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே காய வைத்திருந்த வலையை எடுத்துக் கொண்டு இணையத்தில் மீன் பிடிக்கத் தொடங்கியிருந்தேன்.

Monday, February 28, 2011

இந்தியா உலகப்கோப்பை அடிக்குது

சச்சின் ஓபனிங் இறங்காத உலகப் கோப்பை மூன்று.அதுல பங்களாதேஷ், ஜிம்பாபே,இலங்கை(1992) மாதிரியான கத்துக்குட்டிகள் எல்லாம் இந்தியாவை துவைச்சி எடுத்திருக்கு. சச்சின் ஓபனிங் செய்த உலகப்கோபையில் 1996 அரையிறுதி,2003 இறுதி.2011 முதலிடம். சேவக் மாதிரி டம்மி டீம் கூட அடிக்கிற மேட்ச்சை எல்லாம் நான் பாக்கவே மாட்டேன். பயபுள்ள தேவையில்லாம சச்சினை ரன் அவுட் செய்து விட்டது.

கடந்த ஐந்து உலகப் கோப்பையிலும் ஐந்து முறை ஆசிய அணிகள் தான் இறுதிக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தான் 2,ஸ்ரீலங்கா 2, இந்தியா 1. பாகிஸ்தானும்,இலங்கையும் ஒரு முறை கோப்பையை ஜெயித்திருக்கிறார். அதே போல ஒரு முறை தோல்வி அடைந்தியிருக்கிறார்கள்.ஆதை போல இந்தியா இரண்டாவது முறையாக இந்தியா வரும்.ஏற்கனவே தோற்றுப் போய் போனதால் இந்தியா அதை ஜெயிக்கும்.

1983லில் கிளைவ் லாயிட் தலைமையில் மூன்றாவது முறை ஜெயிக்கவிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை அதை செய்ய விடாமல் தடுத்தது இந்திய அணி தான். இந்த முறை ரிக்கி பாண்டிங் அதை செய்ய காத்திருக்கிறார். இந்தியா அதை தடுக்கும்.

முதல் டிவெண்டி டிவெண்டி உலகப்கோப்பையில் பாகிஸ்தானுடன் மேட்ச் டை செய்தோம். இறுதியாட்டம் இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்.அரையிறுதியில் ஆஸி டவுசரைக் கழற்றி ஓட விட்டோம்.இந்த முறை இங்கிலாந்துடன் டை. ஆஸி இறுதிப் போட்டிக்கு வந்தாலும் திரும்பவும் வேட்டி அவிழ்ப்பு நிகழும் என்று சொன்னால் அது மிகையாகாது. பயிற்சி ஆட்டத்தில் வேற ஜெயித்திருக்கிறோம். சவுத் ஆப்ரிக்கா கூட ஜெயிக்க வாய்ப்பிருப்பு.வெஸ்ட் இண்டீஸ் கூட தான் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி பவுலிங் போட்டா நெதர்லாந்து கூட முன்னூறு சேஸ் பண்ணும்.

Sunday, February 27, 2011

காதல் கசக்குதய்யா

இவ தான் நமக்குன்னு முத தடவையா ஒரு பொண்ணைப் பார்த்ததும் எப்படிடா தோணும்னு பசங்க கூட பேசிக்கிட்டு இருந்தோம்.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க.பல்ப் எரியும்,பாட்டு கேட்டும்,ஷாக் அடிக்கும்னு சொன்னதை எல்லாம் பாக்கும் போது நான் எங்க போய் சொல்லி அழுறதுன்னு தெரியாம நான் என்ன சொல்லி நக்கல் அடிக்கலாம்னு கண்ணை மூடி யோசிக்கிட்டு இருக்கும் போது தான் எனக்கு ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது. வார்த்தைகள் கேக்குறதுக்கு முன்னாடி பாட்டு நின்னுருச்சி.

"மச்சி எனக்கு பாட்டு கேட்டுச்சி..உங்களுக்கு ஏதாவது பாட்டு கேட்டுச்சா.." என்று பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்."இல்லடா..எனக்கு கேக்கலையே.." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

"பஸ் ஏன் இங்க நிக்குது..இப்போ எங்க பொண்ணு ஏறிச்சி.."

"உனக்கு இதுல நம்பிக்கையே இல்லயே..அப்புறம் எவ ஏறினா என்ன.."

"ஒத்துக்கிறேன்..பாட்டு கேக்கும்,ஷாக் அடிக்கும்..வேறன்னடா பல்ப் எரியும் போதுமா..இப்போ சொல்லு.."

"அவ வேற காலேஜ் பொண்ணு..பஸ் மாறி ஏறிட்டா..இறங்கி போயாச்சி.."

"எனக்கு மட்டும் ஏண்டா மச்சி இப்படியெல்லாம் நடக்குது.." எரிச்சலா சொல்லிட்டு அது என்ன பாட்டுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.லிரிக்சை என்னால கண்டுப்பிடிக்கவே முடியல. அது இன்னும் எரிச்சல் வர காரணமாயிருந்தது.

நான் அதை அப்படியே மறந்துட்டேன். நாம காதலிக்கிற பொண்ணை விட நம்மள காதலிக்கிற பொண்ணு அப்படியெல்லாம் பஞ்ச் விடலாம் தான்.ஆனா இந்த வீணாப் போன மனசு ஏத்துக்க மாட்டேங்குதே. அசைண்மெண்ட் எழுத சோம்பேறித்தனம் பட்டப்போ அவ எழுதி தந்தா.

ஏன் எனக்கு எழுதி தர்றன்னு கேட்டதுக்கு எல்லாம் என் தலையெழுத்துன்னு சலிச்சிக்கிட்ட.அப்போ நீ அழகாயிருக்கேன்னு சொன்னேன்.இன்னொரு அசைன்மெண்ட் பாக்கியிருந்தது நினைவுக்கு வரல.

"இன்னொரு அசைன்மெண்ட் இருக்குல..அதுக்குத்தான் அப்படி சொல்றீயா.."

"உண்மையிலே அழகாயிருக்க.."

"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்..என்னை விட்டு ஓடிரலாம்னு பாத்த கொன்னே போட்டுருவேன்.."

இப்படி எந்த கவலையில்லாம திரிஞ்ச நேரத்துல தான் ஒருத்தன் ஓடி வந்து "மச்சி உனக்கு வேவ்ஸ் ஒர்க் அவுட் ஆகுதுடா..உனக்கு பாட்டு கேட்டுச்சே..அந்த பொண்ணு நம்ம காலேஜ்ல சேர்ந்திருக்கா.."

"எந்த கிளாஸ்.."

"இ.சி.ஈ.."

அப்புறம் பாத்துக்கலாம்னு வழக்கம் போல கிளாஸ்ல தூங்கிட்டேன். "டேய் எழுந்திரு வேவ்ஸ் நம்ம கிளாஸ்கே வந்தாச்சி.."

"ஏன் அவளுக்கு வேலையே இல்லையா..ஒண்ணு பஸ் மாறி ஏறுறா..இல்ல கிளாஸ் மாறி போறா.." என்று
சலித்துக் கொண்டேன்.

வந்ததும் நான் உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினீரிங் எடுக்கிறேன்.அந்த லாஸ்ட் பெஞ் பசங்க அப்படியே பர்ஸ்ட் பெஞ்சுல உக்காருங்க.

"டேய் நம்மள தான் சொல்றாங்க.."

"முடியாது.."

"அவுட்.."

வெளியே போகும் போது கேட்டேன். "அந்த பொண்ணு இதானா.."

"ஆமாண்டா.."

"அப்புறம் ஏன் பாட்டு கேக்கல.."

"அது முத தடவை மட்டும் தான் கேக்கும்.."

"நீ வேணா ஒரு ரொமாண்டிக் லுக் விட்டு பாரேன்.."

"எப்படி கவுண்டமணி மாதிரியா.."

அன்னைக்கு ஆரம்பிச்சது.அதுக்கு அப்புறம் எல்லா கிளாஸ்லையும் வெளியே தான்.அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் ஆகிட்டேன். ஒருநாள் பொறுமையை இழந்து என்னை எல்.கே.ஜி பையன் மாதிரி நடத்தாதீங்கன்னு அவுட் ஸ்டாண்டிங்ல அவுட் டேக் மட்டும் போய் ஸ்டாண்டிங் மட்டும் இருந்தது. கிளாஸ்ல உள்ள நிக்க ஆரம்பிச்சிட்டேன்.

"ஒரு வேளை அந்த பாட்டு காதல் கசக்குதய்யா பாட்டாயிருக்குமோ.." எங்க குரூப் உள்ள நிக்கும் போது ஒருத்தன் கேட்டான்.

"இருக்கும் இருக்கும்.." கோரஸாய் எல்லோரும் சொல்ல

"ஏண்டா வெந்தப்புண்ல விரலை விடுறீங்க..ஏம்பா என்னை பாத்தா இவங்களுக்கு எப்படி தெரியுது.." சொல்லிக்கிட்டே மேல பாத்தேன்.

"என்ன உனக்கும் அவங்களை முன்னாடியே தெரியுமா..உங்க அஞ்சு பேரை மட்டும் இந்த வாட்டு வாட்டுது.."

"முத தடவையா ஒரு நாள் பஸ் மாறி நம்ம பஸ்ல ஏறிச்சே..அப்போ தான் நாங்க பாத்தோம்..வேற எதுவும் எனக்கு தெரியாது.." நல்லபடியா அந்த பாட்டு விஷயத்தை எடிட் பண்ணிட்டு சொன்னேன்.

"ஆமா அப்போ நான் கூட அவங்க பின்னாடியே ஏறினேன்..அப்புறம் இவங்களுக்காக இறங்க வேண்டியதா போச்சி.."

ஒருவேளை இவளை பாத்து பாட்டு கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம். கேட்டா உதை விழுமே. "என்னை முத தடவை பாக்கும் போது உனக்கு ஏதாவது பாட்டு கேட்டிச்சா.." கேட்டுட்டு அவளையே பாத்தேன்.

"காதல் கசக்குதய்யா பாட்டு கேட்டுச்சி.."

அது எப்படிடா என்னை மட்டும் ஊர்ல ஒருத்தன் விடாம லந்தைக் கொடுக்கிறான்களோன்னு தெரியலைன்னு நினைச்சிக்கிட்டேன்.

பாட்டுக்கான பொண்ணை கண்டுப்பிடிச்சாச்சி.பாட்டு தான் தெரியல. அப்புறம் எல்லாம் இல்லாம போன ஒருநாளில் தம்பி வந்து சொன்னான்."கண்ட நாள் முதலாய்னு ஒரு படம்..உனக்கு ரொம்ப பிடிக்கும்..பாரு"

படம் பார்த்துட்டு வரும் போது தான் அந்த பாட்டு கண்ட நாள் முதலாய் இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா படத்துல லைலா பிரசன்னாவும் மாற்றி மாற்றி அடித்து கொள்வார்கள்.லைலா அப்பா ஒரு பேக்கு. என்னை விட்டுரு பிரசன்னா கெஞ்சுவார். இப்படி எல்லாம் முரணாயிருந்தால காதல் கசக்குதய்யா பாட்டு தான் கேட்டுக்குணும்னு இப்போ நான் நம்புறேன்.

Saturday, February 26, 2011

காதலால் அழிந்த ட்ராய்

நமக்கு இரட்டை இதிகாசங்களாக மகாபாரதம்,ராமாயணம் இருப்பது போல கிரேக்கர்களுக்கு இலியாத் மற்றும் ஒடிசியஸ் இரட்டை இதிகாசங்களாக இருக்கிறது.

ப்ரியமின் தங்கை ஹெசயொனை கிரேக்கர்கள் கடத்தியதில் ஆரம்பிக்கிறது கதை. தங்கையை அனுப்ப சொல்லி ப்ரியம் கேட்டும் அவர்கள் மறுக்கிறார்கள். இது டிரோஜன்களின் முறை.ஹெலனைத் தூக்கி வருகிறான்.கிரேக்கர்கள் ஹெலனைஅனுப்பி விடுமாறு கேட்கிறார்கள். இது பிரியமின் முறை.மறுக்கிறான்.போர் நடக்கிறது.ட்ராய் எரிகிறது.

பாரீஸ் பிறக்கும் போது அவனுக்கு அம்மாவுக்கு கொள்ளிக்கட்டைகள் பறப்பது போல கனவு வருகிறது. மகாபாரதத்தில் துரியோதனன் பிறக்கும் போது சகுனம் சரியிருக்காது. கர்ணனைத் தண்ணீரில் விட்டது போல பாரீஸை கொல்ல சொல்லி பிரியம் ஒருவனிடம் கொடுக்கிறான். கொல்ல மனமில்லாமல் அவன் இதா மலையில் மிருங்கள் சாப்பிடும் என்று நினைத்து பாரீஸை அங்கு போட்டு விடுகிறான். பெண் கரடி அவனுக்கு பால் கொடுத்து காப்பாற்றுகிறது.வீட்டிற்கு தூக்கி வந்து வளர்க்கிறான்.

ப்ரியத்தின் போட்டிகள் வைக்கிறான். பாரீஸ் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். இவன் யார் கீழ்ஜாதி பையன் என்று இளவரசர்கள் சண்டைக்கு போக ப்ரியத்திற்கு உண்மை தெரிய வருகிறது. பாரீஸ் இளவரசனாகிறான். கர்ணன் அங்க தேசத்து மன்னன் ஆகிறான்.

இப்படி நிறைய ஒற்றுமைகள். சரி கதைக்கு வருவோம். ஹெலனைக் கடத்தியப்பின் கிரேக்கர்கள் படைத் திரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். அக்கீலிஸ் மற்றும் ஒடிசியஸ் இருந்தால் தான் ட்ராய் நகரத்தை அழிக்க முடியும் என்று. அக்கீலிஸின் தாய்க்கு தெரியும். அவன் ட்ராய் போனால் திரும்ப மாட்டான் என்று. ஒடிசியஸின் பிரச்சனை வேறு.அவன் ட்ராய் போனால் அவன் இதாகா திரும்பி வர இருபத்தியொரு வருடங்கள் ஆகும். இருவருக்குமே(இருவரின் குடும்பத்துக்குமே) போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை.

அர்ஜூனன்,கிருஷ்ணன் மாதிரி இரண்டும் கதாபாத்திரங்களும் கோல்மால் செய்வதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை. இருவரும் இல்லாத போரில் என்ன சுவாரஸ்யத்தை கண்டு விட முடியும். ஒடிசியஸ் பைத்தியம் போல நடிக்கிறான்.அவர்கள் வரும் போது ஏரில் கழுதையையும்,காளையையும் பூட்டிக் கொண்டு நிலத்தில் உழுது கொண்டிருக்கிறான்.உப்பை தூவுகிறான். வந்ததில் ஒருவன் ஒடிசியஸின் மகனை ஏரின் முன்னால் போடுகிறான்.இவன் ஏர் ஓட்டுவதை நிறுத்துகிறான். பைத்தியமில்லை என்று ஒடிசியஸைக் கண்டுப்பிடித்தவனுக்கு ட்ராய் போர் நடக்கும் போது ஒரு பெரிய ஆப்பாக வைக்கிறான்.

அக்கீலிஸைத் தேடி வருகிறார்கள்.அவனுடைய அம்மா அந்தப்புரத்தில் மகனை ஒளித்து வைத்து விடுகிறாள். எங்கு தேடியும் அக்கீலிஸ் கிடைக்கவில்லை.அந்தப்புரத்தில் உள்ள பெண்களுக்கு பரிசு கொடுத்து விட்டுப் போகிறோம் என்று சொல்லி அந்தப்புரத்தில் நுழைகிறார்கள். வாள்,வில்,ஈட்டி, திரவியங்கள் என்று பொதுவாக வைத்து எடுத்து கொள்ள சொல்கிறார்கள். அக்கீலிஸ் வாள்,வில், ஈட்டியையும்,பெண்கள் திரவியத்தையும் எடுக்க அக்கீலிஸை ஒரே அமுக்காக அமுக்குகிறார்கள்.
அர்ஜூனன் கொஞ்ச காலம் பேடியாக நடித்தது நினைவுக்கு வரலாம். கிருஷ்ணனுக்கு பாதத்தில் அடிப்பட்டால் தான் சாவு வரும் என்பது போல அக்கீலிஸிற்கு அங்கு அடித்தால் தான் சாவு வரும். துர்வாசருக்கு பாதம் தவிர எல்லா இடத்திலும் பாயாச அபிஷேகம் கிருஷ்ணன் செய்த காரணத்தால் இந்த சாபம்.அக்கீலிஸின் தாய் காலைப் பிடித்து கொண்டு நதியில் அவனை முக்குகிறாள்.கைக்குள் இருக்கும் பாதம் நனையவில்லை. இருவரும்(அ மற்றும் கி) பாதத்தில் அம்பு பாய்ந்து இறக்கிறார்கள்.

திருமணம் ஆன பெண் இரண்டு கதையிலும் கடத்தப்படுகிறாள். கிரேக்க கதையில் விருப்பத்துடன்(கிரேக்கர்கள் பொறுத்தவரை அது கடத்தல் தான்). ட்ராய், இலங்கை இரண்டும் தீப்பிடித்து எரிகிறது. குறிப்பிட மறந்த ராமாயண, இலியாத் ஒற்றுமைகள். ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்ச மாதிரி ஒரு பீலிங்.

பிறப்பில் பாரிஸ் கர்ண,துரியோதன கலவையாக இருந்தால் அக்கீலிஸ் இறப்பில் அர்ஜூன,கிருஷ்ண கலவையாக இருப்பது தான் நகைமுரண். அக்கிலீஸ் இறந்தப்பின் நம்ம கிரேக்க கிருஷ்ணன் ஒடிசியஸ் கடமையை செவ்வனே செய்கிறார். மகாபாரதப் போர் முடிந்தப்பின் துவாரகை எப்படி அடித்துக் கொண்டு அழிந்ததோ அதே போல் இதாகாவிலும் மக்கள்ஸ் அடித்து கொண்டு சாகிறார்கள்.

மாய யதார்த்த புனைவு

சின்ன வயசுல நிறைய தடவை அப்பாகிட்ட அடி வாங்கியிருக்கிறேன். நல்லா விவரம் தெரிஞ்சு அடி வாங்கினதுன்னா காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும் போதுன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் பாலகுமாரன் என்று இன்னைக்கு நினைக்கும் போது சிரிப்பு வருது. என் வாழ்வின் சிக்கலான கட்டத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.சரியா சாப்பாடு இல்ல.சரியா தூக்கம் இல்ல.வீட்ல பேசுறது இல்ல.சிரிக்கிறது இல்ல. சரியா சாப்பிடாம இருந்ததால அடிக்கடி வயிற்று வலி வேற. இனி என் குடும்பத்துல எவனும் இன்ஜினியரிங் படிக்கக் கூடாதுன்னு நினைச்சிக்கிட்டேன். அப்போ தான் அந்த பாலகுமாரன் நாவல் படிக்க கிடைச்சுது.கதையில வர்ற கதையின் நாயகியையும் அவள் அக்காவையும் என்னால் ரொம்ப நாளைக்கு மறக்க முடியல. அக்கா வாயிற்று வழியால் துடிச்சி கேன்சர் வந்து செத்து போவா. எனக்கும் அப்படி ஏதாவது இருக்குமோன்னு நேர்ல சொல்ல முடியாம அம்மா நான் செத்துருவேன்னு பயமாயிருக்கு.என்ன நடந்தாலும் என்னை காப்பாத்திருங்கன்னு எங்கையோ ஒரு பப்ளிக் பூத்ல இருந்து போன் பண்ணி சொல்லிட்டேன்.

வீட்டுக்கு போனா வரவேற்க என் குடும்பமே இருக்கு.யாரும் எதுவும் பேசல.அப்பா வந்து பளார்னு ஒரு அறையை விட்டுட்டு ஒண்ணுமே பேசாம போயிட்டார். அடுத்த நாள் எண்டோஸ்கோப்பி.இதுக்கு கேன்சரே பராவயில்லன்னு நினைச்சிக்கிட்டேன். டாக்டர் அப்பா கிட்ட நீங்க வேணா வெளிய இருங்க.நான் உங்க பையன் கிட்ட தனியா பேசணும்னு ஒரே அடம் பிடிச்சார். நான் தான் அவர் இருக்கட்டும் நீங்க கேளுங்க.சிகரெட்,தண்ணி பழக்கம் உண்டான்னு கேட்டார். இல்ல நானும் வேற எதோ கேக்கப் போறீங்கன்னு பயந்துட்டேன்னு சிரிச்சேன். அது ஆரம்ப நிலையில் இருக்கிற அல்சர்னு தெரிஞ்சது.

மியூசிக் அகடமிக்கு எதிர்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.அப்பா பெதுவா சொன்னார்."நீ மாய யதார்த்த உலகத்துல வாழாத..அது எங்களுக்கு நல்லதில்லை." புரியாத மாதிரி பாத்தேன். "பாலகுமரான் நாவல் எல்லாமே மாய யதார்த்த புனைவு தான்..எல்லோருக்கும் அது யதார்த்தமா தெரியும்.ஆனா அது மாயாஜாலம்..எவனாவது ஒருத்தனுக்கு தான் நடக்கும்..அந்த ஒருத்தன் நீயில்ல.." என்று சொல்லிட்டு புரிஞ்சுதா என்று கேட்டார்.தலையைக் குறுக்கு வெட்டாக வெட்டினேன். "கதையில அக்காவுக்கு கேன்சர்..உனக்கு வந்துருமோன்னு பயப்படுற..தங்கை என்ன பண்ணினா இந்த பாசம்,பந்தம் எல்லாம் தவிர்க்க லீவிங் டூகெதர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறா. அப்படி வாழ முடிவு எடுத்திட்டு முதல் முதலா தனியறையில் பாக்கும் போது தாயம் விளையாடுறாங்க.. உனக்கு அதுவும் நடக்காது.இதுவும் நடக்காது.இது தான் மாய யதார்த்தம்" சொல்லிட்டு புரியுதான்னு அவர் கேக்கல.நானும் புரிஞ்சதுன்னு சொல்லல.அப்புறம் ரெண்டு பெரும் ஒண்ணுமே பேசிக்கல.அது தான் பாலகுமாரனை கடைசியா படிச்சது.

2004 செல்லமே ரீலிசாகியிருந்த நேரம்.முதல் நாள் முதல் ஷோ. விஷாலும்,ரீமா சென்னும் மும்பை போகும் முன்னாடி செஸ் ஆடுவார்கள். அப்பா சொன்னது காதுல கேட்டுது."இது மாய யதார்த்த புனைவு.. உனக்கெல்லாம் நடக்காது..". நான் பலமா சிரிச்சிட்டேன். எவ்வளவு சீரியஸா பேசுறாங்க இந்த பக்கி மட்டும் பல்லைக் காட்டுதுன்னு ரெண்டு ரோ என்னை திரும்பி பாக்குது. மாய யதார்த்த புனைவின் நீட்சியா தம்பி விஸ்காம் சேர்ந்திருந்தான்.எல்லா திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தியேட்டர் வாசலில் நின்றுக் கொண்டிருப்பான்.

Thursday, February 24, 2011

கண்ணில் தெறிக்கும் வானம்

விடியகாலை ஆறு மணிக்கே மொபைல் அடித்து தள்ளியது.ஆறு முறை எடுக்காமல் அமர்த்தி விட்டேன். இது இடைவெளி குறைகின்ற தருணம் என்ற ரிங்டோனிற்கு ஏற்ப ஒரு வழியாக இடைவெளியை குறைத்து கண்ணைத் திறக்காமலே எடுத்து பேசி விட்டேன்.

"காலங்காத்தாலே எதுக்குடா என் உயிரை வாங்குறீங்க.." கத்தினால் "உன்னை உடனே பாக்கணும் வா.. கோவிலுக்கு வா.." பதிலுக்கு ஒரு கத்தல்.

செமஸ்டர் ரிசல்ட் எதுவும் வந்து விட்டதா அரியர் எதுவும் விழுந்து விட்டதா என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

யாருக்கும் தெரியாமல் தொண்ணூறுகளின் மிச்சமான டிவிஎஸ் சுசூகியை நகர்த்தினால் "என்ன ஆறு மணிக்கே வண்டி எடுக்கிற..ரிசல்ட் வந்துரிச்சா.." உள்ளே இருந்து குரல் வருகிறது.

"இல்ல பால் வாங்கிட்டு வர்றேன்.." என்று பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியை எடுத்தால் "அரியர் வைச்சிட்டு ரீ வால்யூவேஷன் காசு வாங்க எங்கிட்ட வராதே.."

"அட ராமா..சும்மாயிருங்க..நேத்து தான் எக்சாம் எழுதியிருக்கிறேன்..அதுக்குள்ள ரிசல்ட் வந்துரப் போகுது.."

அங்கே போய் கோவில் வாசலில் பிங்க் கலர் சுடிதாரில் நிற்கும் பிகரை சைட் அடித்து கொண்டிருந்தால் "கூப்பிட்டது நான்..பாக்குறது அங்கேயா.." குரல் கேட்டது.

"அதெல்லாம் இல்லயே.." மேலும்கீழுமாய் ஒரு மாதிரி தலையை ஆட்டி சைட் அடித்ததை உறுதி படுத்தினேன்.

"சரி இன்னைக்கு என்ன நாள்.."

"சனிக்கிழமை..இது கேக்கத்தான் வர சொன்னியா.."

"வேற ஒரு நாளும் இல்லையா.."

"இல்லையே..என்ன நாள்.."

"என் பிறந்த நாள்..ஒரு கிப்ட் தான் தரல..போன் பண்ணி சொன்னாத்தான் என்ன கேடு.." கோவில் அர்ச்சனையும் மீறி இவ அர்ச்சனை தான் காதில் நிரம்பி வழிந்தது.

"சொல்லவேயில்ல.."

"சரி வர சொன்னா..நேத்து போட்ட ஷாட்ஸ்,சட்டையில பட்டன் இல்ல..குளிக்கல சரி அட்லீஸ்ட் மூஞ்சு கழுவிட்டு வந்தா தான் என்ன.."

"நீ தானே அவசரமா வர சொன்ன.."

"இதெல்லாம் நல்லா சமாளி..பிறந்தநாள்னு சொன்னப்பின்னாடியும் வாயைத் திறந்து பதில் ஹேப்பி பர்த்டேன்னு சொல்ல மாட்டியா..எல்லாம் கேட்டு வாங்கணுமா.."

"பல்லு தேய்க்கலையேன்னு பாத்தேன்.."

"நீ எல்லாம் வேஸ்ட்..என் ஸ்கூல் பிரண்டு பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி சொன்னான் தெரியுமா.."

"சரி நான் வேஸ்ட் தான் விடு.."

"கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்..அவன் கிப்ட் எல்லாம் தந்தான் தெரியுமா.."

சும்மாவே நாக்குல சனி புட் போர்ட்ல டிராவல் பண்ணும்.பல்லு வேற தேய்க்கலையா சம்மணம் போட்டு உட்கார

"போய் அவனையே கல்யாணம் பண்ணு..என்னை ஆளை விடு.."

கோபத்துல இந்த பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இங்கீலிஸ் வருமோ தெரியல.என்ன என்னமோ திட்டிட்டு கடைசியா மூணு வார்த்தை சொன்னா.

"என் மூஞ்சிலே முழிக்காதே.."

"சரி.." என்று சொன்னதும் கோபித்து கொண்டே போனவளிடம் குடுக்க வைத்திருந்த கிப்டை தேடினால் காணவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இது இடைவெளி குறைகின்ற தருணம் என்று மொலைல் சிணுங்க வண்டியோட்டிக் கொண்டே எடுத்தால் "ஐ ஹேட் யூ.." என்று போனில் கத்துகிறாள்.

Wednesday, February 23, 2011

பிச்சைக்காரப் பாத்திரம்

திடீரென போன் செய்த இப்போ எந்த டெக்னாலஜி வேலை செய்கிறாய் என்று கேட்டான்.

ஏ.எஸ்.பி .நெட் என்று பதில் சொன்னால் போன வாரம் கோல்ட் பியூசன் என்று சொன்னாயே என்று கேட்டான். ஆமா மச்சி அதுக்கு முந்தைய வாரம் ஏ.எஸ்.பி.அதுக்கும் முன்னாடி ஆரக்கிள் என்று சொன்னேன்.

ஏண்டா உன் கரியரை நீ தொலைக்கிற..எதுலையாவது ஒரு டெக்னாலஜில வேலை பாருடா என்று கோபத்தில் திட்டினான்.

மச்சான் நீ எதுல வேலை பாக்குற.

அவன் பதில் சொன்னவுடன் நீ வேலை செய்ற அதே டெக்னாலஜில உனக்கு டேமஜரா நான் வருவேன் மச்சி என்று சொல்ல.

நீ ஒரு பிச்சைக்கார பாத்திரம்டா என்று சொல்லி விட்டான். அவனிடம் சொன்னது மாதிரியே அவன் டெக்னாலஜியில் வேலை பாக்குறேன்.

ராஜா வீட்டின் தங்கத்தட்டாக இருப்பதை விட பிச்சைக்கார பாத்திரமாக இருப்பதில் தான் அதிக சுவாரஸ்யமாகயிருக்கிறது.

பழைய மேலாளர் ஒரு நாள் சொன்னார் - "வி ஆர் ஜாக் ஆப் ஆல் மாஸ்டர் ஆப் நன்" என்று சொன்னதோடு இல்லாமல் "நான் என்னை மாதிரியே உன்னையும் ஆக்கிட்டேன்..". "ஐ மிஸ் யூ.." என்று மெயில் செய்திருந்தார். என்னையும் பிடிக்கும் ஜீவன்கள் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள்.

அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது.

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly.”

அதில் fight efficiently இதை மட்டும் மிக சரியாக கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். வாழ்வோடு போராடுகிறேன்.அவ்வளவு எளிதாக எதையும் என்னை ஜெயிக்க விடுவதில்லை. இதை சொன்னதற்கு முட்டாள் என்று நண்பன் திட்டுகிறான். உன் வேலையை மட்டுமல்ல வாழ்க்கையே தொலைக்காதே.சென்னை வந்துரு.நீ ஏன் சென்னைக்கு வர மறுக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.மறந்துரு.எங்களோடு இரு என்று அடிக்கடி சொல்பவனை திட்ட தமிழ் அகராதியில் கெட்ட வார்த்தைகளைச் சலித்து கொண்டிருக்கிறேன். வன்முறையாய் அன்பைத் திணிப்பவனைத் திட்டுவதற்கு இன்னும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

Thursday, February 10, 2011

ஜெகன் மோகினி

ஜெகன் - அவன் பெயர் மட்டும் அல்ல அவன் தான் ஜெகத்தை ஆள வேண்டும் என்று நினைப்போடு வாழ்பவன். திறமைசாலி ,அழகன் , இன்னும் சொல்ல போனால் என்னுடைய நண்பன்(இதை விட ஒரு தகுதி வேண்டுமா சொல்லுங்கள்).

சிறுவயதில் இருந்தே ஏதாவது ஆராய்ந்து கொண்டே இருப்பான். வெற்றி பெறுகிறதோ இல்லையோ விஞ்ஞானத்தோடு வியாக்கியானம் பேசுபவன்.

பெரும் பணக்காரரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள மேலே கூறிய தகுதிகளே போதுமானதாக இருந்தது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கிடைக்கும் பெரும் ஆதாயத்தை நினைத்தே அவர் இவனுக்கு பெண் கொடுத்து இருந்தார்.சொல்ல மறந்துட்டேன்.அவன் மனைவி பேர் மோகினி.

தொடர்ந்து நடந்த முயற்சியில் அவரது பணம் மட்டும் தான் கரைந்து இருந்தது.அவன் மனம் கரையவில்லை.மனைவியின் வெகுளிதனத்தைப் பயன்படுத்தி பணம் தேவைபடும் அளவு வாங்கி கொள்வான்.அவன் நோக்கம் எல்லா பேர் தெரியாத நோய்களையும் தடுக்கும் மருந்தைக் கண்டுப்பிடிப்பது.குறிப்பாக எய்ட்ஸ்.இதை சொன்னவுடன் தான் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.(ஒருவேளை அவருக்கு இருக்குமோ..அடப்பாவி இது தான் கேரக்டர் அஸாசினேஷன்..)

இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.வாய் தகராறு விரைவில் அடித்து கொள்ளும் கட்டத்தை எட்டும் என்று மட்டும் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு

ஜெகன் தொலைபேசியில் அழைத்து பதற்றமாக பேசினான்."மச்சான்..சீக்கிரம் லேப்புக்கு வா..ஒரு சிக்கல்.."

போய் பார்த்தால் லேப் முழுவதும் அலங்கோலமாக கிடந்தது.இருவரும் சேர்ந்து சரி பண்ணா ஆரம்பித்தோம்.தூரத்தில் ஒரு மனிதகுரங்கு மயங்கி கிடந்தது.

"ஜெகன் என்ன ஆச்சு.."

"எல்லாம் அந்த குரங்கு பண்ண வேலை..அட்டகாசம் செய்து இப்படி அலங்கோலம் ஆகி விட்டது.."

"உங்க மாமனாருக்கு தெரிஞ்சா என்ன பண்றது.." என்று சொன்ன என்னை அவன் சட்டை செய்யவில்லை.

கொஞ்ச நாள் கழித்து அந்த குரங்கை எடுபிடி வேலைக்கு பழக்கியிருந்தான்.அதுவும் கூடமாட வேலை செய்தது.

"மச்சான் காபி வேணுமா.."

அந்த குரங்கே தயார் செய்து கொண்டு வந்தது.காபி குடித்தால் சக்கரை இல்லை..

"ஜெகன் சக்கரை இல்லை.."

கோபத்தில் அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்தான்.தடுக்க சென்றவன் அவன் சொன்னதைக் கேட்டு நின்று விட்டேன்.காரணம் அவன் அந்த குரங்கை அடிக்கும் போது அதை அவன் மாமனார் பெயரை சொல்லி சொல்லி அடித்து நொறுக்கி விட்டான்.எனக்கு இருந்த சந்தேகம் வலுத்தது.

"ஜெகன் இது உங்க மாமாவா.."

"ஆமாடா..உனக்கும் உண்மை தெரிந்து விட்டது..உன்னையும் மாத்தி விட வேண்டியது தான்..வேலை செய்ய இன்னும் ஒரு குரங்கு கூடியிரும்.."

"ஜெகன் வேணாண்டா..இது சரியில்ல.." என்று ஓட முயற்சிக்கும் போது பிடித்து விட்டான்.

"மோகினி அந்த ஊசியை எடுத்துட்டு வா.." என்று கத்த ஊசி கொண்டு வந்த மோகினியும் குரங்காக மாறியிருந்தாள்.அவளையும் மாற்றியிருக்கிறான்

ஆனால் அவனிடம் ஊசியை கொடுக்காமல் அவனை அந்த பெண்குரங்கு குத்தி விட்டது.ஜெகன் என் கண் முன்னாலே ஒரு குரங்காக மாறியிருந்தான் இல்லை மாறியிருந்தது.(மட்டமான கிராபிக்ஸ் படம் பார்த்தது போல் ஒரு உணர்வு)

ஒரு மாதம் கழித்து.. வண்டலூர் ஜூவில்..

அந்த ஊழியர் என்னிடம் சொல்லி கொண்டு இருந்தார்."நீங்க போன் பண்ணி சொன்னாதாலே நாங்க எல்லாத்தையும் பிடிச்சி இங்க கொண்டு வந்துட்டோம்..அந்த சின்ன ஆண் குரங்கு எப்போ பார்த்தாலும் எதையாவது நோண்டுது..பெரிய ஆண் குரங்கு கிட்ட ஏதோ கேக்குது..உடனே இரண்டும் சண்டை போடுது..அந்த பெண் குரங்கு யார் பக்கம் போறதுன்னு தெரியாம முழிக்குது.."

"சரி இங்க வந்தப்பிறகும் பணம் கேக்குறத நிறுத்தல போல.." என்று நினைத்து கொண்டு "ஒரு குட்டி குரங்கு வந்தா எல்லாம் சரியாயிடும்.." என்று அவரிடம் சொன்னேன்.

"சார் நீங்ககளே ஒரு பெயர் வைங்க.." அவர் சொல்ல..

"ஜெகன்.." என்று என் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.

"ரொம்ப நல்ல பெயர்..இந்த ஜூவையே இது ஆளும் சார்.." என்று சொல்லி கொண்டு நகர்ந்தார்.

ஜெகன் என்னை பார்த்து கொண்டேயிருந்தது. நான் திரும்பி பார்த்தேன்."இது நீ இருக்க வேண்டிய இடம்.." என்று சொல்வது போல் இருந்தது.

Wednesday, February 9, 2011

வாசகர் கடுதாசி - அதி தீவிர இலக்கியவாதி ஆவதற்கான முயற்சி

காலேஜ்ல படிக்கும் போது மாப்பிள்ளை பெஞ்ச்ல இருக்கிறதுல ஒரு சௌகர்யம் இருக்கத்தான் செய்யுது. தூங்கலாம்,சாப்பிடலாம்,பேப்பர் பட்டாசு வெடிக்கலாம்,ராக்கெட் விடலாம் இப்படி பல லாம். தண்ணி தெளிச்சி விட்டிருந்த கோஷ்டியை அடக்குறதுக்காகவே புதுசா ஒருத்தங்க வந்து இருக்கிறதா காலேஜ் முழுக்க ஒரே பேச்சு. எங்களுக்கு அந்த குடுப்பினை இல்ல போலிருக்கேன்னு நினைச்ச உடனே ஜாவா எடுக்கிறதுக்கு அவங்க வந்தாங்க.வந்ததுல இருந்து ஒரே மோதல்.அன்னைக்கு ஆரம்பிச்ச ஜாவா வெறுப்பு இன்னும் விட்ட மாதிரி தெரியல. அந்த செம் முழுக்க நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட். வெளியவே நிப்போம்.என்னை எல்லாம் எப்படி புதுசா புதுசா சாத்துறதுன்னு நினைப்போடவே வருவாங்க போல.

அன்னைக்கு அதிசயமா என்னை வெளியே போக சொல்லலை.புதுசா ஏதோ ப்ளான் இருக்குன்னு சுதாரிப்போட நான் தயாராயிருந்தேன்." இன்னைக்கு நம்ம அவுட்ஸ்டாண்டிங் அரவிந்த் கிளாஸ் எடுப்பார்.." இப்படி சொல்லிட்டு ரியாக்சனேயில்லாம என்னை பாக்க.

"நீங்க பாடம் எடுத்து தானே நான் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா திரியிறேன்..நான் எடுத்தா எல்லோரும் அப்படி ஆயிருவாங்க..உலகத்துலையே பெரிய தப்பு என்னை மாதிரியே மத்தவங்களை மாத்துறது தான்.." அவங்க போட்ட பீமரை அசால்டா தட்டி விட்ட திருப்தி எனக்கு.

"மச்சான் எப்படிடா இப்படி எல்லாம் பேசுற.." இன்னொரு மாப்பிள்ளை

"சும்மாயிருடா..சாமி சாமகொடைக்கு தயாரா நிக்குது..நேத்து உதிரி பூக்கள் படம் பாத்தேன்..விஜயன் பேசுற வசனம் அது.."

ஸ்டேஜ்ல ஏறினாலே எனக்குன்னு இல்ல எங்க பசங்களுக்கே பில்டிங் ஸ்ட்ராங்கு.பேஸ்மெண்ட் வீக்கு கதை தான். ஒரு கிளாஸ் எடுக்க முடியல.நீ எல்லாம் என்னை கேள்வி கேக்குற முதல்வன் அர்ஜூன் ரேஞ்சுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு பாத்தாங்க.

ஒரு நாள் முதல்வராயிருந்தப் பிறகு பெட்ரோல் ஊத்தி கொளுத்தி ஜட்டியோட நிக்க விடுற சீன் கண்ணு முன்னால வந்து போச்சு. நான் முடியவே முடியாதுன்னு சொல்ல.

"ஸ்டேஜ்ல ஏறினப்பிறகு நீ சொல்றது தான் சரின்னு நினைச்சிக்கோ..கீழே இருக்கிறவன் எல்லோரையும் முட்டாளா நினைச்சுக்கோ..நான் கூட அப்படித்தான் நினைச்சுப்பேன்..குறிப்பா உன்னை முட்டாளா நினைச்சிப்பேன்.."

"முட்டாள் மத்தவனையும் முட்டாளா தான் பாப்பான்..நான் உங்களை இது நாள் வரைக்கும் புத்திசாலியா நினைச்சது தப்பாயிருக்கும் போல.." அடுத்த பீமரை அவுட் ஆப் ஸ்டேடியத்துக்கு தூக்குன திருப்தி எனக்கு.

"மச்சான் இதுவும் உதிரி பூக்கள் வசனமா.."

"டேய் நீயே கொளுத்த பந்தம் கொடுப்ப போல..சும்மாயிருடா.."

"அவுட்.." என்று விரல் கதவு பக்கமாக நீண்டது.அப்பவாவது சும்மா போயிருக்கலாம். அவுட்டுக்கு கையை மேல தூக்கணும்னு சொல்ல அடுத்த செமஸ்டர்லையும் அவுட் ஸ்டேண்டிங்கு ஸ்டூடண்டாவே வாழ்ந்தேன்.

அப்படியே வருஷம் தவ்வி ஓடியது.எத்தனை நாளைக்கு தான் உருண்டோடியதுன்னு எழுத. பழைய அராஜகத்தை எல்லாம் காட்ட வழியில்லாம நானும் அலைய ஆரம்பிச்சேன்.பதிவுலகம் தான் அராஜகம் அக்கப்போருக்கு வழின்னு தெரிய வர இங்கேயும் அவுட் ஸ்டேண்டிங் தொடர்கிறது.

இங்க அந்த லேடி லெக்சுரர் மாதிரி இங்க எழுத்தாள,இலக்கியவியாதிங்க தொல்லை. தெரியுதோ தெரியலையோ அடிச்சி விடுறது. அப்புறம் கேள்வி கேட்டா பின்னூட்டப் பெட்டியை மூடுறது. என்ன சொன்னாலும் நம்ம ஆளுங்க எதிர்வினை வைக்கிறேன்னு நிஜமாவே வினையை வைக்க "என்னை மாதிரி எழுத முடியுமா..இல்ல அவரை மாதிரி எழுத முடியுமான்னு அனானிஸ் வந்து சவுண்ட கொடுக்கும். அவரை மாதிரி நான் ஏன் எழுதணும் அதான் அவர் இருக்காரேன்னு சொல்லிக்கிட்டு விட்டுரணும்.

நாம எதிர்வினை மட்டும் தான் வைக்கணும். அதை அவர் படிக்க மாட்டாரேன்னு நினைச்சி வாசகர் கடிதமா எழுதினோம். ஒரு எழுத்துப்பிழை,கருத்துப்பிழை இல்லாம எழுத முடியல.நீ எல்லாம் பேச வந்துட்டன்னு உள்ள வைச்சி அடிச்சி அனுப்புவாங்க.அப்புறம் போனை போட்டு.

அதனால நான் என்ன சொல்றேன்னா நீங்க எழுதுறது மட்டும் தான் எழுத்து. விமர்சனத்துக்கு எல்லாம் மாறிக்கிட்டேயிருந்தா ஒரு நாளும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்டா மாற முடியாது.எங்க லெக்சுரர் சொன்னது தான் உங்களைத் தவிர எல்லோரும் முட்டாள் தான். அதனால வாசகர் கடிதம் எல்லாம் உங்களுக்கு நீங்களே எழுதிக்கோங்க.

அப்பரசன் டிப்பரசன் சப்பரசன் ஒன் டே தே வில் ஸ்ட்ரைக்.

Tuesday, February 8, 2011

கனவு தொழிற்சாலை

"ஆனந்தா..இந்த உதவிகள் போதுமா..தேவை எதுவும் இருந்தால் கேள்..செய்ய காத்திருக்கிறேன்.."

"வேண்டாம் இளவரசே..தற்போது எதுவும் தேவையில்லை.."

"இளவரசர் என்பதேல்லாம் அரண்மனையில்..இங்கு அதுவும் உன் வீட்டில் நான் உன் நண்பன்.."

"சரி இளவரசே.."

"மறுபடியும் இளவரசா.."

இளவரசர் கையோடு கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரிக்க முயல..

"என்ன ஓலை..நல்ல செய்தி எதுவும் உண்டா இளவரசே.."

"நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருக்கிறது..அவள் அங்கத நாட்டின் இளவரசி குந்தவை.."

"பயிற்சி செய்து கை அழுக்காக இருக்கிறது..அங்கே வையுங்கள் பார்க்கிறேன்.."

"ஆனந்தா மறக்காமல் பார்..அவளை பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் போல உள்ளது.."

நான் இளவரசரை துரத்துவதிலே குறியாக இருந்தேன்.என் காதலி சேடிப்பெண் வரும் நேரம்.இளவரசரை அனுப்பி விட்டு அவளுக்காக காத்திருந்தேன்.அரை நாள் ஊடலையும் அரை நிமிடத்தில் கரைத்து விடுவதில் நிபுணி.வரும் போதே கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.

"என்ன இவ்வளவு நேரம்.." ஆரம்பமே கோபம் தான்.

"நாம் இந்த ஊரை விட்டே சென்று விடலாம்..எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.."

"பிச்சி மாதிரி பேசாதே..நாம் எதுக்கு ஓட வேண்டும்..அதுவும் ஊரை விட்டு.."

"எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.."

"அதனால் என்ன நான் உன் வீட்டில் பேசுகிறேன் நாச்சியார்.."

"நான் யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.."

நான் அவளுடைய பதற்றதை ரசித்து கொண்டிருந்தேன்.மேல் மூச்சு வாங்கும் போது அவள் அழகாக தெரிந்தாள் அல்லது தெரிந்தது.

"நீங்கள் யார் இளவரசி..சொல்லுங்கள்.."

"நேரம் காலம் தெரியாமல் விளையாடாதீர்கள்..கந்தர்வ மணமாவது புரிந்து கொள்வோம்..புரிந்து கொள்ளுங்கள்.."

"மனங்கள் கலந்த பின் என்ன கந்தர்வ மணம் வேண்டி கிடக்கிறது..இனி ஏகாந்த வாழ்வு தான்.." என் கை அவள் மார்புக் கச்சையின் மூடிச்சில் இருந்தது.

"தற்போது இது வேண்டாம்.." அவள் குரல் எனக்கு தூரத்தில் ஒலிப்பது போல் இருந்தது.அவள் மூச்சின் வெப்பத்தால் எனக்கு வேர்வை வழிந்தது.

மார்புக்கச்சை முழுதாக என் கையில் வரவும் குடிலின் முன் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.வந்தது இளவரசர்.நாங்கள் இருந்த கோலமோ அலங்கோலம்.

"குந்தவை..என்ன செய்கிறாய் இங்கு..துரோகி ஓலையைப் பார்க்க கொடுத்தால் அவளையே முழுதாக ரசிக்கிறாயா.."

"இளவரசே இது நாச்சியார்.."

"ஆம் குந்தவை நாச்சியார்..அங்கத நாட்டின் இளவரசி.." என்று இளவரசர் பேசுவது எனக்கு உறுமுவது போல் இருந்தது.

"இளவரசே..நான் சொல்வதை தயவு செய்து.."

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் தொரோகி..என் முகத்தில் இனி இருவரும் விழிக்க வேண்டாம்.." என்று தெற்கு நோக்கி ஓட ஆரம்பித்தார் இளவரசர்.

"இளவரசே..அங்கு போகாதீர்கள்..அங்கு பள்ளம் இருக்கிறது.." என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி ஓடவும்..அவர் பள்ளத்தில் விழவும் சரியாக இருந்தது.

பின்னால் வந்த காவலாளிகள் நிலைமையை ஒருவாராக ஊகித்து மன்னரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் சாராம்சம் இதுதான் - "நான் இளவரசி குந்தவை நாச்சியாரை கெடுக்க முயன்றதாகவும்..தடுக்க வந்த இளவரசரை பள்ளத்தில் தள்ளி கொலை செய்த்தாகவும்..அதனால் எனக்கு தண்டனை சிரச்சேதம்.."

சாட்சி - குந்தவை நாச்சியார்.

எனக்கு தண்டனை தர கத்தியோடு கொலையாளிகள் வர..அலறி கொண்டே விழித்து விட்டேன்.தலையைத் தொட்டு பார்த்து கொண்டேன்.பயங்கர காய்ச்சல்.வாந்தி வருவது போல் உணர்வு.ஆனால் வரவில்லை.இதுவரை எடுத்த மாதிரி நினைவும் இல்லை.

ஆபிஸ் மீட்டிங்க்.போய் தான் தீர வேண்டும்.அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி மனமும்,உடலும் சோர்ந்து கிடந்தது.

பக்கத்தில் இருந்த அந்த பெண் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்பது மாதிரி இருந்தது.

அவளை பார்க்க முயற்சி செய்தேன்.முடியவில்லை.கிளிவேஜ் வழியாக வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

"குந்தவை..ஆடையை சரியாக அணிந்து கொள்.." என்று உளரத் தொடங்கினேன்.

"ஐம் வீணா..ஹூ இஸ் குந்தவை..அரவிந்த் ஆர் யூ ஒ.கே.." என்னை தொட்டு பார்த்து விட்டு அதிர்ந்து போனாள்.

ஆபிஸ் காரில் ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு போனார்கள்.

அங்கு இருந்து நடக்க முயற்சித்தேன்.

"அரவிந்த்..எப்படிடா இருக்க.." என்று ஒரு குரல் கேட்டது.

"நீங்க..யாலு.." குரல் கம்ம தொடங்கியது.

"நான் வினோத்..பத்து வருசம் முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா பத்தாவது படிச்சோமே..நீ கூட பிட் கொடுத்தியே.."

"வினோத்..வீடு தெரியும் இல்ல வா பேசலாம்..உடம்புக்கு முடியவில்லை.." சொல்லி விட்டு அவனை விட்டு விலகி நடந்தேன்.

அவன் ஏமாற்றமாக எதையும் கவனிக்காமல் நடப்பது தெரிந்தது.அவனை நோக்கி ஒரு லாரி..

"இளவரசே..போக வேண்டாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.." மயங்கி விழுந்து விட்டேன்.

Monday, January 31, 2011

இளையராஜாவின் உருவல்

சொல்வனத்தில் பி.எஸ்.சுரேஷ்குமார் எழுதிய நந்தலாலாவின் பிண்ணனி இசைக்கு ஒரு எதிர்வினை.ஏற்கனவே சொன்னது மாதிரி ராமராஜன் படத்தில் கூட ராஜாவின் பிண்ணனி இசை நந்தலாலாவை விட அருமையாக இருக்கும். நந்தலாலாவே கிகுஜிரோவின் காப்பி என்று ஆகி விட்டப்பின் இசை மட்டும் டீயாகவா இருக்கும்.அதுவும் காப்பி தான். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல மிஷ்கினோடு சேர்ந்த இளையராஜாவும் ஆத்துகிறார்.

படத்தின் தொடக்கத்தின் வரும் பிண்ணனி இசை.



டாம் ஹேங்க்ஸ் படத்தின் முடிவில் வரும் பிண்ணனி இசை. (1.15லிருந்து - 2 வரை கேளுங்கள்). இதுக்குப்பேர் தான் திருப்பி போடுறது.

Saturday, January 29, 2011

மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

வரப்போற மூணு நாலு மாசத்துல ஒரு மீனவர் இறந்தாலும் எங்க குடும்பத்துல இருந்து ஒரு ஓட்டு கூட விழாது,யாருக்கும் ஓட்டுப்போட மாட்டேன்னு எல்லோரும் சொல்லுங்க. அது தான் சாத்தியமான வழி.மீனவர்களுக்காக டிவிட்டர்ல இத்தனை பேர் எழுதுறது சந்தோஷமா இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு இந்த கேள்வி தான் முன்னால வந்து நிக்குது. இன்னொரு சாவு வந்தா தான் அடுத்த கட்ட போராட்டம்னு நினைக்கக்கூடாது.

உங்களுக்கு ஓட்டு இல்லன்னா எதிர்ப்பைக் காட்ட வேறு வழியே இல்லையா.உங்க பேச்சைக் கேக்குற நாலு பேர் இருப்பாங்க. அவங்களுக்கு ஓட்டு இருந்தா கூட நீங்க சொல்லி எதிர்ப்பைக் காட்டலாம். அடிமடியில கை வைக்கணும்.அப்ப தான் கொஞ்சமாவது பயம் வரும்.

நாலு மாசம் கழிச்சி மீனவர் இறந்தா என்ன செய்யணும்னு கேட்டா அதுக்கு பதில் இது தான்.எந்த கட்சிக்கும் இல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு,49 ஓ,சுயேட்ச்சைக்கு ஓட்டு இப்படி ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்தால் கூட முடியும். இவன் இல்லன்னா அவன் ஆட்சிக்கு வரட்டும் இந்த நினைப்பை இப்படித்தான் அடிக்கணும். நாம போடுற அந்த நாலு ஓட்டால ஏதாவது சுயேட்ச்சைக்கு டெபாஸிட் போகாம இருந்தா கூட அது ஒரு பெரிய வெற்றி தான்.இப்போ நிருபமா எதுக்கு இலங்கைக்கு போயிருக்காங்க. தேர்தல் முடியிற வரைக்கும் ஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொல்வாங்க.அப்புறம் பழைய குருடி கதவைத் திறக்குற கதை தான். அதனால நாம முந்தணும். வைகோ ஆறாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லியிருக்கார்.அதுக்கு பதிலா ஒரு தடவை கடல்ல போய் ஒரு சவுண்டு விட்டு மீனவர்கள் வாழ்க்கையைத் தெரிஞ்சிக்கிட்டா புண்ணியமா போகும்.

புறக்கணிப்பு நிச்சயம் நடக்கக்கூடியது தான்.எதுவுமே சாத்தியம் இல்லன்னு நினைச்சா சாத்தியம் இல்ல தான்.

Thursday, January 27, 2011

பா.ம.க எப்பவுமே க.மா.பா தானா ?

இந்த தலைப்பைக் கண்டவுடன் அவர்கள் சங்கீதம் படிக்கிறார்கள் என்று யாரும் நினைத்து, எச்சில் தெறிக்க சிரித்து யாரையும் நனைத்து விட வேண்டாம்.க.மா.பா - அதன் விரிவாக்கம் இது தான் கட்சி மாறும் பாட்டாளிகள்.இந்த பதிவைப் படித்து விட்டு யாரும் பெட்டியைத் தூக்க வர வேண்டாம்.என் அறையில் இருப்பது ஒரே ஒரு அட்டைப்பெட்டி தான்.அதுவும் என்னுடையது இல்லை.

நீங்கள் கூட்டணி மாறும் செய்தியைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும் கேரக்டர் மனோரமா.சம்சாரம் அது மின்சாரம் படத்தில் யார் பேச்சையும் கேட்காமல் நீ கம்முன்னு கிட டைவர்ஸ் டைவர்ஸ் தான் என்று வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்ய வைப்பார்.அப்படித்தான் ஒவ்வொரு முறையும் சின்னப் பிள்ளைகள் மாதிரி "மிஸ் இவன் என்னை நுள்ளிட்டான்..,என்னை கிள்ளிட்டான்..,என்னை தள்ளிட்டான்.." என்று ஏதாவது காரணம் காட்டி கூட்டணியை ரத்து செய்கிறீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் சி.வி.சண்முகம் என்ற அ.தி.மு.க உறுப்பினர் ஏதோ ஒரு கொலைவழக்கில் பா.ம.க கட்சி உறுப்பினர்கள் பெயரைச் சேர்த்து விடுகிறார்.அதை கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் அந்த கட்சியின் தலைவி தட்டிக் கேட்கவில்லை என்பது தான் உங்களின் குற்றம்.மக்கள் பிரச்சனையே இரண்டாம் பட்சமாக இருக்கும் போது இது என்ன அவர்களுக்கு பெரிய சிக்கலா."டீச்சர் என் பையனை அந்த பையன் நுள்ளி,கிள்ளி,தள்ளி இருக்கான்..உங்க கிட்ட புகார் குடுத்தும் நீங்க ஒண்ணுமே கேட்கவில்லை..நாங்கள் இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறோம்.." என்று சொல்லும் பெற்றோர்கள் போல் உள்ளது உங்கள் வாதம்.உடனே அந்த ஆசிரியர் சொல்கிறார் "ஏப்ரல் மாசம் தான் அந்த ஸ்கூல் சரியில்லன்னு இங்க வந்தீங்க..இப்போ இது சரியில்ல சொல்லிட்டு வெளியே போறீங்க..அப்போ நீங்க தான் சரியில்லை.." என்று சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்."எங்கேயும் சேர்க்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்ன.

வாய்சவடால் தான் பா.ம.க கட்சி அழிய காரணம்.கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்.அது வரலாறு,புவியியல் என்று சொன்ன வரலாறு நோட்டு புத்தகம் என்ன இன்று பூகம்பத்தில் தொலைந்து விட்டதா.இல்லை மக்கள் உங்கள் கூட்டணியைத் துவைத்து விட்டார்களா?(அழுக்கு போயிருச்சா..போயிருச்சா அப்புறம் ஏன் இன்னும் தேய்க்கிறீங்க..)வரலாறு என்றுமே மாறுவதில்லை அது சொல்லும் பாடம் உங்களால் எங்கும் இருக்க முடியாது நிரந்தரமாக.

உங்களுக்கு ஏழு இடம் தந்தேன் ஒரு பலனும் இல்லை.ஆனால் ம.தி.மு.க கூட ஒரு இடத்தில் வென்று இருக்கிறது என்று அவர்கள் கேட்டால் என்ன செய்ய முடியும் (அட இதுவும் வரலாறு தான்).ஜெயித்தால் மக்கள் சக்தி காரணம்.தோற்று போனால் மக்கள் பணம் வாங்கி விட்டார்களா இல்லை வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லையா ?

தி.மு.க கூட்டணி உடைந்த போது ஒரு தி.மு.க உடன்பிறப்பு சொன்ன காரணம் இதை நினைத்தால் இன்று கூட சிரிப்பு வருகிறது."மானாட மயிலாட" - இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சித்த விதம் தான் காரணம் என்று சொன்னார்.அப்படி என்ன சொன்னார் என்று கேட்டதற்கு வந்த பதில் "மானாட மயிலாட மார்பாட" என்று சொல்லி விட்டார்.கூட்டணி உடைந்து விட்டது.அதெல்லாம் இருக்காது என்று நான் சொன்னேன்.இன்று நீங்கள் சொல்லும் காரணத்தைப் பார்த்தால் அது உண்மையா என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியே கூட்டணி மாறி கொண்டே இருந்தால் வரும் சட்டசபை தேர்தலிலும் உங்களுக்கு தோல்வி தான்.விஜயகாந்த் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் தான் தெரியும் என்று சொல்லும் போது கேட்காத நீங்கள் இன்று யாருமே சேர்க்கவில்லை என்றதும் அதே கருத்தைச் சொல்கிறீர்கள்.யாராவது சேர்த்து கொண்டால் மறுபடியும் கூட்டணியாக தான் போட்டி இல்லை யாருமே கூட்டணி வைக்க கூடாது.(என்ன கொடுமையான கொள்கை பா.ம.க இது)

"நானோ ஏன் பிள்ளையோ கட்சியில் ஏதாவது பொறுப்பையோ இல்லை பதவி கிடைத்தாலும் வகிக்க மாட்டோம்" - இந்த வார்த்தைகள் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா.சரி நானே ஞாபகப்படுத்துகிறேன்.இது ஆரம்ப கால பா.ம.க நிறுவனரின் கொள்கை முழக்கம்.அப்பொழுது அவர் மூன்று ரூபாய்க்கு ஊசி போடும் மருத்துவர்.இன்று அப்படியா.ஆட்சிக்கு ஆட்சி கொள்கையும் மாறும் கூட்டணியும் மாறும்.

யாருமே சேர்க்கவில்லை என்றால் அவர்களின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்துடன் கூட்டணி வைப்பார்கள்.பிறகு ரத்து செய்து வருகாலத்தில் விசை கட்சி ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள்.முடியவில்லை என்றால் வேறு கூட்டணி.

இனி வரும் ஒரு தேர்தலில் மட்டுமாவது அவர்களை எந்த கூட்டணியிலும் சேர்க்காதீர்கள். தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள்.

Wednesday, January 26, 2011

பாணா காத்தாடியும் ஒரு காதலும்

இன்று வரை என் லட்சியங்களில் ஒன்றாகயிருப்பது வெறும் ஓட்டைக் காத்தாடியாவது விடுவது தான். கிராமத்தில் அந்த கனவு நிறைவேறாத சோகத்தில் இருந்த நான் சென்னை சி.ஐ.டி நகருக்கு வந்த பின் தான் லட்சியத்தில் பாதியை கடந்தது போலிருந்தது. மூன்றாவது மாடி டேங்கில் ஏறி கண்ணாம்மா பேட்டையில் இருந்து விடும் காத்தாடியை டீல் போடுவார்கள். யாருக்காவது லுங்கி அவிழ்ந்து விடாதா என்னையும் பிடிக்க சொல்ல மாட்டார்களா ஏக்கத்தோடு நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருவருக்கும் அவிழாது.அப்படியே லுங்கி இறங்கினாலும் உள்ளே கொஞ்சம் பெரிதான டிராயரோடு இருப்பார்கள். இப்படியாக தொடர்ந்த ஒரு நாளில் ஏதோ காயப் போட வந்த பெண்மணி டிராயரோடு நின்ற பசங்களைப் பார்த்து எல்லார் வீட்டிலும் புகார் கொடுக்க எனக்கு மட்டும் ஸ்பெஷல் அர்ச்சனை. இனி எதையும் தொட மாட்டேன் என்று வாக்குறுதியோடு தான் என்னை அனுமதித்தார்கள். அதற்குப்பின் தான் என் மேல் பாசம் பீறிட்டு அடித்ததோ என்னவோ எனக்கு காத்தாடி விட சொல்லித் தர நிறைய குருமார்கள் முன்னுக்கு வர செய்த சத்தியத்தால் அதை தொடாமல் நின்றுக் கொள்வேன். எதிர்க்காற்றில் டீல் போட அது நாங்கள் விட்ட காத்தாடிக்கே பாதகமாக முடிந்தது. என்னை எவ்வளவோ கெஞ்சியும் பிடிக்காத காரணத்தால் நிறைய நூலோடு காத்தாடி போய் விட்டது.ஸ்ரீனிவாசா தியேட்டரில் பிடித்திருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் கெட்ட வார்த்தைகளோடு சரளமாக சென்னை பாஷையும் பேசத் தொடங்கியிருந்தேன். திருநெல்வேலி நடையில் பேசி விட்டு புட்டுக்கிட்டான் நட்டுக்கிட்டான் என்று பேச இங்கேயிருந்தால் இன்னும் சோவாரியாக மாறி விடுவான் என்று சொல்லி காலம் என்று எதிரே வந்த காத்தாடி எங்களில் நூலை வெட்ட விருகம்பாக்கத்தில் போய் விழுந்தோம். சுற்றி கொஞ்சம் சொந்தங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக திருநெல்வேலி தலையைக் காட்ட நான் சி.ஐ.டி நகர் நண்பர்களை மறக்க தொடங்கியிருந்தேன்.என் சுயநலத்திற்காக அதே மாதிரி ஏதோ ஒரு பிரச்சனையில் பெரம்பூரில் இருந்து விருகம்பாக்கம் வந்தவனிடம் நான் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு மழைநாளில் சோம்பேறித்தனப்பட்டு 12 பியில் வராமல் இறங்காமல் வீடு வந்து சேர ஆசைப்பட்டு 12 சியில் பயணம். மழையோடு பேசிக் கொண்டிருந்தவளை மீள்பார்வையில்லாமல் முதல் பார்வையிலே பிடித்து தொலைத்தது. அவளை பார்க்கவே 12 சியில் பயணம். ஒரு நாளாவது பார்த்து விட மாட்டாளா என்று நப்பாசை தான் அவள் பின்னால் அலைய வைத்தது. ஒரு நாளும் நடக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் கவனித்தேன் அவள் கையிலிருக்கும் புத்தகம் வித்தியாசமாக தெரிய தொடர்ந்து கவனித்ததில் அவள் தாவணியும் வித்தியாசமாக இருந்தது. விசாரித்தால் அவள் ப்ளஸ் டூவாம். பள்ளியில் மாணவிகளின் தலைவியாம். பஸ்ஸில் ரவுடியாம். எவ்வளவு வித்தியாசம் நான் ரெண்டு வருடம் ஜூனியர் மற்றும் நெற்றியில் விபூதியோடு இருக்கும் பையனை அந்த வயதில் எவளுக்குத் தான் பிடித்திருக்கிறது. அவளிடம் பேச எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பதிற்காகவே அவனிடம் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.அவன் அக்காவும் அவளும் ஒரே வகுப்பு.நட்பு என்றால் அப்படி ஒரு நட்பு.பள்ளியில் சாம்பியன் அணியான எங்கள் அணிக்கு எதிராக அவன் வகுப்பின் சார்பாக களமிறங்கும் அளவிற்கு நட்பு.

எங்கள் பள்ளியையும் பெண்கள் பள்ளியையும் ஒரே நேரத்தில் தான் விடுவார்கள். ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி மாதிரி சரித்திரத்தில் இடம் பிடிக்க நிறைய பேர் முயல அது தெரிந்து பெண்கள் பள்ளி எங்களுக்கு முக்கால் மணிநேரம் முன்னால் விட கடைசி வகுப்பை புறக்கணித்தால் மட்டுமே அவளை அல்ல எல்லோரையும் பார்க்க முடியும் என்ற நிலை. சுவர் குதிக்க ஆரம்பித்திருந்தோம். துரைசாமி சப்வேவில் காத்திருப்போம்.பர்கிட் ரோடு வழியாக பஸ் துரைசாமி சப்வேவிற்கு வரும். அடிக்கடி மாட்டிக் கொள்வோம்.ஆசிரியர்கள் பிடித்தாலும் பாதி நாள் அப்செண்ட் தான் தண்டனை.அடி எல்லாம் கிடையாது என்பதால் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் வேதாளத்தைப் பார்க்க காத்திருப்போம்.பழம் என்று சொல்லி விடுவாளோ தம்பி என்று சொல்லி விடுவாளோ என்று பயத்தில் வீட்டிலிருந்து வரும் போதே விபூதியை அழித்து விட்டு இன்சர்ட்டை வெளியே எடுத்து விட்டு வருவது வழக்கம். அன்று ஆரம்பித்த பழக்கம் இன்றும் விபூதி பூசிய ஐந்து நிமிடத்தில் அழித்து விடுகிறேன். அவளும் என்னை லேசாக கவனிக்க ஆரம்பித்தது தெரிந்தது. காரணம் கூடவே வருபவன் தோழியின் தம்பி. பிறகு வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே விஷயத்தை அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாள். தெரிந்தப்பிறகும் யாரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.நான் மட்டும் பேக்கு மாதிரி பேக்கை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பேன்.

அவளை பார்த்துக் கொண்டே இறங்கியதில் பஸ்சில் இருந்த தகரம் கிழிக்க சுண்டு விரல் முழுவதும் வொய் ஷேப்பில் கிழித்து விட அவள் பதற்றப்பட்டாளா என்று பார்க்கும் முன் வெளியேறிய ரத்தத்தில் தலையை சுற்ற ஆரம்பித்து. தம்பியைப் பிடித்து கொண்டு காயத்தைக் கழுவி ஆள் மாற்றி ஆள் விரலில் கைக்குட்டையைஸ் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நீலக்கலர் பேண்ட் கருநீலமாக மாறத் தொடங்கியிருந்தது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள டாக்டரிடன் போன முதல் பேஷண்டே நான் என்பதால் அளவுக்கு மீறி பணமும்,பேண்ட் எய்டும் காதில் சுற்றத் தொடங்கியிருந்தார். பள்ளியில் நிறைய பசங்க செய்வது அடிபடாமல் கட்டுப் போட்டுக் கொண்டு பெண்களிடம் உதார் விடுவார்கள். என்னையும் அப்படி நினைத்து விடப் போகிறாள் என்று மறைத்துக் கொண்டே பயணிப்பேன். நண்பனுக்கு விஷயம் தெரிந்து உன் தம்பிக்கு கொஞ்சம் ஊட்டி விடேன் என்று கேலி செய்வானாம். காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் அவள் ஏறும் பஸ்சில் மட்டம் போட அவள் இவனிடம் கேட்டாளாம். உன் தம்பியா வீட்டுக்குப் போயிருப்பான் என்று கேலி செய்ய அவன் ஒண்ணும் என் தம்பியில்லை.இனி சொல்லாதே என்று சிடுசிடுத்தாளாம். அதை அவன் என்னிடம் சொன்னதும் மழை நாளில் அவள் பார்த்தாலே சாரலடிக்கும்.இப்படி சிடுசிடுத்தது காதல் சொல்லி விட்டு முத்தமிடாமல் கன்னத்தில் உரசி சென்றது போலிருந்தது.


கைகாயம் ஆறியிருந்தது.காதலா ஏதோ ஒரு ஏழவோ பெருகிப் பெருகி வழிந்தது. அணையப் போகும் விளக்கு போல அன்றைய தினமே பிரகாசமாயிருந்தது.கடைசி ஸ்டாப்பிங் கொஞ்சம் பெருசு. ரங்கராஜபுரத்தில் ஆரம்பித்து பனகல் பார்க்கில் முடியும்.கோடம்பாக்கத்தில் பஸ் நுழைந்தவுடன் கூட்டம் அம்ம ஆரம்பித்திருந்தது.அவளை பார்க்க முடியாமல் கடைசி ஸ்டாப்பிங் மட்டும் தொங்க முடிவெடுத்து முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.

இரவு ஒரு மணிக்கு பாணா காத்தாடி பார்க்க ஆரம்பித்திருந்தேன்.படம் போக போக வெளியில் அடை மழை.இப்படி ஒரு மழையை நான் பார்த்ததேயில்லை.எனக்காகவே யாரோ அழுதது போலிருந்தது. படம் முடிந்தும் மடிக்கணினியைக் கூட அணைக்காமல் சுருண்டிருந்தேன்.அன்று சொல்லாமல் விட்ட ரகசியம். எனக்கு பயம் ஏற்படும் போது மட்டும் பாட்டியை நினைத்து கொள்வேன்.அன்றும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். "என்னை எப்படியாவது காப்பாத்து..நான் அவப் பின்னாடி போறதை விடுறேன்.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் கீழே விழும் போதெல்லாம் யாரோ என்னை தாங்கிப் பிடிக்க என்னுடனே இருக்கிறார்கள்.

Tuesday, January 25, 2011

பாலுமகேந்திராவின் பள்ளி

பத்தாவது படிக்கும் போது தசரதபுரத்தில் கிரிக்கெட் விளையாட செல்லும் போது பாலு மகேந்திராவின் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக தான் செல்வோம்.வீடு படத்திற்காக கட்டிய வீடு என்று பின்னர் தான் தெரிந்தது.பிறகு ஒரு நாள் அந்த படம் பார்க்க நேர்ந்த போது அதன் யதார்த்ததில் சற்று உறைந்து தான் போனேன்.வீடு படத்தில் அர்ச்சனாவும்,பானுசந்தரும் அந்த வீட்டை கட்டி முடிக்கப் போராடுவார்கள்.இறுதி வரை முடிக்கவே முடியாது.மைதானத்தில் ஒழுங்காக விளையாடுவனை கலாய்ப்பது,ஜெயிக்க வேண்டிய மாட்ச்சைத் தோற்றுக் கொடுப்பது - இதனால் கடுப்பாகி எங்களை அடுத்த மேட்ச்சில் சேர்க்க மாட்டார்கள்.மறுபடியும் பாலுமகேந்திராவின் வீடு வழியாக மெதுவாக நடந்து செல்வோம்.அந்த வீடு தான் பாலு மகேந்திராவின் பள்ளியாக உருவாகியிருக்கிறது.

பாலு மகேந்திரா - புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம்.(சினிமா மேல் உள்ள ஆசையால் தம்பியை இந்த கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கல்லூரியின் கட்டணத்தைப் பார்த்து பின் வாங்கியிருந்தோம்.பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.சினிமா கனவு அடுத்த தலைமுறைக்குத் தள்ளி வைக்கப்பட்டது).முதல் படம் மலையாளத்தில் அதற்கு மா நில அரசு விருது.படம் பெயர் நெல்லு.(இந்த பெயரில் நாம் இப்போது தான் படம் எடுக்கிறோம்.அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொன்னப் பிறகு.பெயர் வைப்பதில் கூட நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கு இது தான் நிதர்சனம்.அப்ப கதையில் - ?????)

ரவி.கே.சந்திரன் ஒரு முறை பாலு மகேந்திரா கேமிரா வைத்த இடத்தில் வைத்த கோணத்தில் நாங்கள் சின்னப் பிள்ளைகள் மாதிரி கேமிரா வைத்து சந்தோஷப்படுவோம் என்று சொன்னார்.காரணம் ஷோபாவை பாலு மகேந்திராவின் கேமராவைத் தவிர யாருடைய கேமிராவும் அவ்வளவு அழகாக காட்டவில்லை.உதாரணம் முள்ளும் மலரும் - செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.அழியாத கோலங்கள்,மூடுபனி.காரணம் கேட்டப் போது பாலு மகேந்திரா சொன்னாராம் - "நான் ஷோபாவை காதலோடு பார்த்தேன்.."

தமிழில் முள்ளும் மலரும் படத்திற்கு பிறகு அவர் பிற இயக்குனர்களின் படங்களில் ஒளிப்பதிவு செய்யவில்லை.அவர் ஒளிப்பதிவு மட்டும் செய்ய ஆசைப்பட்ட இயக்குனர்கள் இருவர் தான் - மணிரத்னம்,கற்றது தமிழ் ராம்.

இயக்கிய முதல் படம் - கோகிலா.கன்னடத்தில் கமல்,ஷோபா,மோகன் நடித்தது.கமல் நடிப்பை விமர்சனம் செய்த மதனுக்கு கமல் இந்தப் படத்தை சிபாரிசு செய்தாராம்.கமல் நடிப்பின் உச்சம் தொட்ட படம் என்று சொல்லலாம்.காரணம் பாலு மகேந்திரா மற்றும் யதார்த்தம்.

இன்று அவர் சினிமா கற்றுக் கொடுத்த இயக்குனர்கள் வழியாக அந்த யதார்த்தம் தமிழ் சினிமாவில் தொலையாமல் இருக்கிறது.

இன்று பெரிதாக பேசப்படும் இயக்குனர்கள் பாலா,ராம்,வெற்றிமாறன் எல்லாரும் குறைந்தப் பட்சம் அவருடன் எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள்.

இளையராஜாவை விட்டு எல்லோரும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றாலும் விதிவிலக்கு பாலு மகேந்திரா,கமல் (அவர் இயக்கும் படத்தில் இளையராஜா இருப்பார்.அவர் இயக்க நினைத்த மர்மயோகியில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைய நினைத்தாலும் விதி அவரை செய்ய விடவில்லை.)

அவுட் ஹவுஸில் பாலா தங்க வைத்து காலையில் எழுப்பி ஆங்கில நாளிதழ்கள் படிக்க சொல்வாராம்.சத்தம் வீடு வரை கேட்க வேண்டும் என்று சொல்வாராம். பாலா தனியாக முதல் படம் செய்யும் போது பாலு மகேந்திராவின் குரு குடுத்த வியூ வைண்டரை குடுத்தாராம்.பாலா அதை அமீருக்கு பருத்தி வீரன் வந்த பிறகு கழுத்தில் மாலையாக போட்டாராம்.அந்த பரிசை எட்டி உதைக்கும் விதமாக யோகி வந்து விட்டது.

குருகுல வாசம் போல் அவர் அருகில் இருந்து பிள்ளைகள் போல் வளர்ந்து சினிமா கற்றுக் கொண்டதன் பயன் தான் யதார்த்தம் - பாலாவின் சீடர்களிடமும் கொஞ்சம் இருக்கிறது.அதற்கு பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்(எனக்கு இந்த இரண்டு படங்களும் பிடிக்கவில்லை அது வேறு விஷயம்).

பொல்லாதவன் - வில்லனை கூட கம்பீரமாக சித்தரித்த படம்.கற்றது தமிழ் - சில் காட்சிகளும் பாடல்களும் எனக்கு பிடித்து இருந்தது.

பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களிடன் குடுத்து நடனம் அமைக்காமல்,காட்சிகள் மூலமாகவே நகர்த்த தெரிந்த இயக்குனர்கள் தான் முழுமையானவர்கள்.பிண்ணனியில் பாடல்கள் ஒலிக்கும் (சேது,பிதாமகன்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்,பொல்லாதவன்,கற்றது தமிழ் - இப்படி எல்லாமே பாலு மகேந்திராவின் வாரிசுகள் தான் அல்லது அவரின் வாரிசுகளுக்கு வாரிசுகள்)

நிறைய வெளிபடங்களைத் தழுவி இருந்தாலும் அதில் நேடிவிட்டி இருக்கும்.ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் சைக்கோ பார்த்துக் கொண்டிருக்கும் பாதியிலேயே அதை கண்டுப்பிடித்து விட்டேன் அதை தமிழில் மூடுபனியாக பார்த்து இருக்கிறேன் என்று.அதனால் பாதியிலேயே படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.மூடுபனி பாடல்கள் படத்தில் தவிர எதுவும் உருப்படி இல்லை.

1993ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதிற்காக தேவர் மகனும்,ரோஜாவும் மோதிக் கொண்டது.அதை முடிவு செய்யப் போவது பாலு மகேந்திராவின் ஒரு ஓட்டு.கமலும்,இளையராஜாவும் பாலு மகேந்திராவுக்கு நெருங்கிய நண்பர்கள்.ஆனால் அவர் ஓட்டுப் போட்டது ரோஜாவுக்கு. காரணம் முதல் படத்திலேயே சாதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் கொடுத்த அங்கீகாரம்.மோதிர கைக்குட்டு.

கட்டணம் செலுத்தி அவரிடம் மாணவர்கள் படித்தாலும் இனி ஒரு பாலா உருவாவது கஷ்டம் தான்.முதலிலேயே குரு தட்சிணை குடுத்து படிப்பவர்களிலிருந்து யாரும் அவ்வாறு உருவாவது கிடையாது.

வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல அவர் மகன் ஷங்கி பெரிய அளவு சாதிக்கவில்லை.ஷங்கியின் மகன் இன்னொரு பாலு மகேந்திராவாக வர வாழ்த்துக்கள். நிச்சயம் வருவார் என்று பாலு மகேந்திராவின் சந்தோஷத்தில் தெரிகிறது.

Monday, January 24, 2011

கண்ணம்மா.. கம்முனு கிட..

திரும்பவும் அவள். கனவு மாதிரியும் தெரியவில்லை.அதுவும் குறிப்பாக சலனமற்ற அவளின் ஒரு பக்க முகம் கோபத்தை விட வேறு எதையோ தூண்டுவதாகயிருந்தது.அவள் பார்வையில் இருந்து விலகி என்னில்,என்னுள் அவள் விலகாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் அழகாகியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

யாருக்காக காத்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு எரிச்சல் காரணம் வெயிலாக இருக்குமோ என்று சூரியனை முறைத்தால் அதிகம் சுட்டது.காற்றில் கூட அனல் வீசியது.கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் தெளித்து கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருப்பது தெரிந்தது காரணம் வந்தவனுடன் ஒரு பெண்ணுமிருந்தாள்.அவள் கண்களில் என் முகம் தெரியுமளவிற்கு பார்வைகள் பரிவர்த்தனை நடத்தாதே என்று அவள் கவனிக்காத சமயம் காதில் அவன் சொன்னான்.

ரேகா என்று யாரோ என் பின்னால் இருந்தபடி கூப்பிட திரும்பியவள் கண்களில் கண நேர அதிர்ச்சி தெரிந்தது.எப்படி மறைவது என்று தெரியாமல் சிலையாகிருந்தேன்.

ரேகா....................அவன் சொன்ன குட்டிப் புராணத்தில் பெயர் தவிர ஒன்றும் கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து போயிருந்தேன்.காரணம் தெரிந்த புராணத்தைத் தெரிந்து என்ன பிரயோஜனம்.

ரேகாவும் நடுத்தரமும் கதை பேச தொடங்க,அவள் காதையும் வாயையும் அவளுக்கு கொடுத்து விட்டு கண்களால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள்."போ..போ.." என்று கெஞ்சுவது போலிருந்ததால் இன்னும் கெஞ்சட்டுமே என்று போக மனமில்லாமல் நின்றேன்.

ரேகாவை பார்த்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டேயிருந்தோம்.சாலையின் அடர்த்தி அதிகமாக தொடங்கியது.அறுவை தாங்க முடியாமல் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் அவளை பார்க்க, கண்கள் விரிய "இன்னும் கொஞ்ச நேரம்.." கண்களால் கொஞ்சினாள். இன்னொரு முறை கொஞ்சலுக்கு இடம் கொடுக்காமல் கதற கதற அவன் அறுவையை பொறுத்துக் கொண்டேன்.

"முகமே சரியில்லையே..யாரு தெரிந்தவனா.." என்று நடுத்தரம் கேட்க முதலில் திடுக்கிட்டாலும் "இல்ல..தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது.." சமாளித்து விட்டாள்.நடுத்தரம் தான் நம்பியது போல் தெரியவில்லை.மாமியார்காரியாக இருக்கும்.அவர்களின் மாமியாரும் இதே கேள்வியை கேட்டிருக்கலாம்.

"ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா.." அவன் கேள்வியில் ஏமாற்றம் தெரிந்தது."பரவாயில்ல..அறிமுகம் செய்ய வேண்டியது மிச்சம்..ரொம்ப ராவிட்ட மாதிரி தெரியுது.." கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.இப்போ ரேகா முறை எப்படி சந்தித்தோம்.எப்படி எல்லாம் காதல் சொன்னேன் என்று அவள் பங்கிற்கு பழிக்கு பழியாக அறுக்க தொடங்கினாள்.அவனுக்கு தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை.எப்படி வரும்.எனக்கு இப்படி ஒரு தேவதையா என்ற சந்தேகமாகயிருக்கும்.

போன் பண்ணியிருப்பாள் போல .பத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்.சாப்பிடாமல் தண்ணியடித்தது மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இன்னும் ஞாபகபிருக்கிறதா யோசிப்பதற்குள் திரும்ப அழைத்து விட்டாள்."இன்னும் நம்பர் மாத்தலையா.." முதலில் கேள்வி சம்பிரதாயமாக ஆரம்பித்தது."நீ வாங்கி கொடுத்தது தானே..அதான் மாத்தல" அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்."டோன்ட் மீ சில்லி..அண்ட் டோன்ட் எவர் ட்ரை டூ கிரியேட் சீன்.." கோபம் கூட இங்கீலிஸ் பேசுனா தான் வரும் போல என்று நினைத்து கொண்டேன்.பிறகு அவளே சமாதானாமாகி "இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா என் மாமி கிட்ட மாட்டியிருப்பேன்..நான் வர்றேன்..".சமாதானம் தமிழில் செய்தாள். என்னோடு சேர்த்து தமிழும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

ஏர்டெல் ஜோடி கார்ட் வாங்கி தந்தாள்."கூட்டுத் தொகை உன் சைஸ் சொல்லுது.." என்று சொன்னவுடம் "இப்படி கூட்டி கழித்து பார் செருப்பு சைஸ் வரும்.." சொல்லி விட்டு அவளே சிரித்தாள்.அவள் கோபம் கானல் நீர் போல மறைந்தது.எல்லா செலவும் அவளே செய்வாள்."நீ கொடுத்து வைச்சவன்.." யாராவது சொல்லும் போது கடைவாய் வரை நீண்ட சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருந்தது.

அதே கடைவாய் சிரிப்பு பட்டம் தான் மாறி விட்டது."இளிச்சவாயன்.." என்று.வந்தவளை முழுதாக பார்த்தேன்.மூக்குத்தி குத்தியிருந்தாள்.இன்னும் அழகாகத் தெரிந்தது அழுக்கு அறை.எடுத்தவுடம் மூக்குத்தியைப் பற்றி அவளே சொன்னாள்.அவனுக்கு பிடிக்குமாம்."பெரிய பெண்ணாகி விட்டாய்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"மூக்குத்தி போட்டுக் கொள்..அழகாகயிருக்கும்.." வற்புறுத்தினாள் கூட மறுத்து விடுவாள்."பெரிய பெண் மாதிரி தெரிவேன்.." காரணம் கூட மெலிதாகயிருக்கும்.

கொஞ்சம் அதிகமாகவே பதற்றப்பட்டாள்.போனில் அவனாகயிருக்கும்.கொஞ்ச நேரத்தையும் யாராவது இப்படி கெடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்."சரி கண்ணம்மா.." என்பது மட்டும் கேட்டது.பிடிக்காத வார்த்தைகள் மட்டும் காதில் விழுவதேன்.பாரதி போல அவளுடைய அவனும் செத்து போனால் எப்படி இருக்கும் யோசிக்கும் போதே மனது இனித்தது.

"கண்ணம்மா.." கூப்பிட்டால் போச்சு கோபத்தில் பொறிவாள்."கால் மீ ரேகா.." காரணம் அப்படி கூப்பிட்ட பாரதி முப்பதுகளின் தொடக்கத்திலே இறந்து விட்டானாம்.

மடியில் படுத்திருந்தேன்.முத்தம் கொடுக்க முகத்தை நோக்கி முன்னேறினேன்.முகத்தை திருப்பி கொண்டாள் வலுக்கட்டாயமாகத் திருப்பியவுடன் உதட்டை மடித்திருந்தாள்."நான் இப்போ வேறொருத்தன் பொண்டாட்டி..தே... இல்ல..".எனக்கு எப்படி தெரியும் அடுத்தவன் பொண்டாட்டியோ தே...யோ இப்படித்தான் இருப்பாள் என.

உதட்டை குவித்து வைத்து கொண்டு "முத்தமிடேன் முட்டாளே.." சொல்லும் போதே உள்ளுக்குள் ஏதோ கிறங்கும்.அது தாங்க முடியாமல் "ஐட்டம் மாதிரி செய்யாதே.." தெரியாமல் வந்து விட்டது."அங்க எல்லாம் நீ போவியா.." என்று சண்டை.சமாதானம் செய்யவே கொஞ்ச நேரம் ஆனது.முத்தமிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

"இனிமே நான் இங்க வர மாட்டேன்..ஏதோ என்னால் தான் இப்படி இருக்கிறாய் என்று வந்தேன்..இது தான் கடைசி..என்னை தொல்லை பண்ணாதே..ப்ளீஸ்..இனிமே என்ன பாக்க வராதே.." அழுதவளை அணைத்து கைகளை சற்றே மேய விட்டேன்."ஆடைகளை அவிழ்க்காமல் என்ன வேண்டுமானாலும் செய்.." சொன்னதும் அசிங்கத்தை மிதித்தவனாய் அவள் நிர்வாண முகத்தில் கை வைத்து தள்ளினேன்.

எல்லாம் முடிந்திருந்த காலம்.அவ்வளவு நெருக்கம்.ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது.ஒருநாள் அப்பா,அம்மா,நாய்க்குட்டி கதை.அழுத்தி கேட்டேன்."நான் காதலிக்க தான் லாயக்காம்..கல்யாணத்திற்கு இல்லையாம்.." எங்கே கை வைத்தேன் என்று தெரியவில்லை.கோபத்தில் கண் மண் தெரியவில்லை.

அவள் இருக்கும் போதே ஏமாற்றத்தில் கையை அறுத்து கொண்டேன்."செத்து தொலை..ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்.." என்று கத்தினாள்.முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..

வேகமாக பைக் ஓட்டி லாரியில் மோதி இரத்தமிழந்து சில பல எலும்புகள் உடைந்து ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தேன்.வந்தவள் நிறைய அழுதாள்.எனக்காக ஒருத்தி அழும் போது சந்தோஷமாகயிருந்தது."வீணை அறுந்த உணர்வு.." என்றாள்.இன்னொரு முறை இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.எந்திரிக்க முடியவில்லை பின் எங்கிருந்து இறக்க முடியாமல் மடங்கினேன்.

பிழைத்தால் அவளை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.வீணை,அறுந்த தந்தி,பாரதி,கண்ணம்மா,தே..முத்தம்.ஐட்டம், ஸ்கார்ப் என்று கண்டபடி நினைவு ஓடி அறுந்து விடும் போலிருந்தது.

நாலாவது நாள் கல்யாணப் பத்திரிக்கை வைத்து கருணை கொலை செய்தாள்.வேறு வீணை கிடைத்து விட்டது போலும் நினைத்தவுடன் மயங்கி போனேன்.

பிழைத்தால் அவளை கொன்ற கதை சொல்கிறேன்

மயக்கத்தில் இருந்த மீண்டால் புது வீணை எப்படியிருந்தது என்று சொல்லவும்.

Thursday, January 20, 2011

இஃப் எல்ஸ் காதல் கல்யாணம்

பத்தாவது பொதுத் தேர்வின் போது ஏதோ ஒரு பரிட்சையை முடித்து விட்டு தேறுமா தேறாதா என்று எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தோம்.நண்பன் ஒருவன் மட்டும் சோகமாக இருந்தான்."என்னடா சிவகுமார் பேப்பர் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டானா..அவனுக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு..இதையே காரணமா வைச்சு அடிச்சிரலாம்..பாஸ் மார்க் வந்துரும் தானே.." என்று ஆறுதல் படுத்தினேன்."அது இல்லடா..இது வேற.." இன்னும் சோகமாக சொன்னான்.

"என்ன அக்கா அடிச்சிட்டாளா..அவள எல்லாம் நீ தாண்டா சமாளிக்கணும்..அவள் அடிக்க எல்லாம் ஆள் செட் பண்ண முடியாது.." நிலைமையை மாற்ற அவனை கடித்து கொண்டிருந்தேன்.

"அதுவும் இல்ல..இது வேற.."

"_____ சொல்லித் தொலடா _____..நானும் பாக்குறேன்..அது இல்ல..இது இல்லன்னு உயிர வாங்காத.."

கெட்ட வார்த்தை வேலை செய்தது."சொன்னா அடிக்க கூடாது.." சொல்லும் போதே சட்டையை மடித்து விட்டு கொண்டேன்."எங்க வீட்டுக்கு ஒரு ஜோசியக்காரன் வருவான்..அவன் சொன்னான்.."

"என்னடா சொன்னான்..உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆயிரும்னு சொன்னானா..நல்ல விஷயம் தானே..நீயும் உன் பையனும் இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சி ஒண்ணா பிட்டடிச்சி டென்த் பாஸ் பண்ணலாம்.."

"இல்லடா டெண்டுல்கர் செத்துப் போயிருவான்னு சொன்னான்டா.."

"இந்த வருஷம் இங்கிலாந்துல வேர்ல்ட் கப் இருக்கு..அதெல்லாம் எப்படிடா நடக்கும்..அவன் சொன்னான்னு நீயும் ஏண்டா.." எனக்கு பரிட்சை பயம் போய் இந்த விஷயம் என்னை ஆக்ரமித்திருந்தது.

"நீ நம்பலையா..அவன் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு.."

"என்ன அவன் சொல்லி தான் ஆடு மாடு எல்லாம் நடக்குதா..ஒன்பதாம் தேதி படையப்பா ரீலிஸ்..பதிமூணு சோசியல்..இரண்டரை மணி ஷோ ஒகேவா.." பேச்சு படையப்பாவிற்கு மாறியிருந்தது.நானும் டெண்டுல்கர் விஷயத்தையும் மறந்து விட்டேன்.

முதல் போட்டி சவுத் ஆப்ரிக்காவிடம் மவுத் ஆகி விட்டோம்.காலையில் தூங்கி கொண்டிருக்கும் போதே போன்."அவன் சொன்ன மாதிரியே நடந்திரிச்சி..டெண்டுல்கர் இறந்துட்டானாம்..வயசுல மட்டும் தான் இடிக்குது.."

விசாரித்த போது தான் தெரிந்தது.அது ரமேஷ் டெண்டுல்கர் என்று.சச்சின் இந்தியா வந்து விட்டார்.ஜிம்பாபேயுடனான மேட்ச்சில் சச்சின் இல்லாத காரணத்தால் மூன்று ரன்னில் காலி.இப்படியே போனால் அடுத்த போட்டியிலும் கென்யாவுடன் தோற்று விடுவோம் என்ற நிலைமை.சச்சின் வந்து அடித்தவுடன் தான் வெற்றி.ஜிம்பாபேவுடன் தோற்றதால் சூப்பர் சிக்ஸில் எல்லா போட்டியையும் ஜெயிக்க வேண்டிய நிலைமை.அதோடு வெளியே வந்து விட்டோம்.

அதிலிருந்து ஜோசியம் பார்ப்பதென்றால் ஒரு அலாதி பிரியம் தான்.என்னைக்கு என் வேலை விஷயத்தில் குறி சொன்னார்களோ அதில் இருந்து ஒரு பயம் கலந்த வெறுப்பு.நல்லதாக சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனதிற்கு கெட்டதாக சொன்னால் ஏற்க கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது.பல வருடங்கள்,பல நாட்கள் ஆன நிலையில் என் கையை பார்ப்பேன் என்று அடம் பிடித்து சொன்னவை இங்கே.போல்ட் பாண்டில் அவர் சொன்னது.

"நீ ஒரு புத்திசாலி..ஆனால் அதை வெளியே சொன்னால் அது மற்றவர்களுக்கு தெரியும்.. ஏன் வெளியே சொல்வதேயில்லை.."

"நான் ஒரு புத்திசாலின்னு நானே சொன்னா மட்டும் தான் உண்டு.என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே.." - வெளியே சொல்லவில்லை.

"நீ இன்னும் ஐம்பது வருஷம் உயிரோடு இருப்ப.."

"இன்னும் அத்தனை நாள் பதிவு படிக்கிறவன் நிலைமை தான் மோசம் இல்ல மோஷன்.."

"உன் கையில பணம் தங்காது.."

"தங்கிட்டாலும்..சின்ன வயசிலேயே தெரியும் என் கை ஓட்டக்கை என்று.கையை குமித்து தண்ணீரை அள்ள சொல்வார்கள்.தண்ணீர் உள்ளங்கையில் தேங்கி நின்றால் பணம் நிற்கும் என்றும் இல்லை என்றால் நிற்காது என்றும் சொல்வார்கள்.."

"உன் இதயத்தை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ.."

"உண்மை தான்..அடிக்கடி துடிக்குது.." என் எண்ணம் அவருக்கு தெரிந்து விட்டது என்று நினைக்கிறேன்.உடனே

"உனக்கு இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் ஆயிரும்.."

"விளங்கும்..குழந்தை திருமணம் தப்பில்ல.." என்று நினைத்து கொண்டேன்.

"உனக்கு ஒரு காதல் இருந்தது.அதுவும் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுகளில்..சற்றே யோசித்து விட்டு தீவிரமான காதல் நீயில்லாமல் நானில்லை என்று உருகி இருப்பீர்களே.."

சொல்லும் போது நான் இடைமறித்தேன்."அதி தீவிரமான காதல்.." என்று சொல்லி விட்டு நினைத்து கொண்டேன்."நான் அந்த சமயத்தில் மூன்று பெயரை காதலித்தேன்.ஜோசியத்துல எந்த பொண்ணு என்று சொல்ல முடிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூணு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் ஆகவில்லை.என்னை விட அதிக சம்பளம் வேற வாங்குறாளாம்.மனதிற்குள் இஃப் எல்ஸ் ஓடிக்கொண்டிருந்தது."

இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால்) தென்

இஃப் (அவள் கணவனிடம் கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (அவள் தொல்லை பொறுக்காமல் சரி என்றால்) தென்

சும்மா சொன்னேன் என்று சமாளிக்கலாம்

எல்ஸ் இஃப் (என்ன கொழுப்பா என்றால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எல்ஸ் இப் (அவளிடமே கேட்டுப் பாக்கலாம்) தென்

இஃப் (என் புருஷன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எல்ஸ் இஃப் (சரி என்று சொன்னால்) தென்

சும்மா சொன்னேன் என்று சிரிக்கலாம்.இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு இல்லையா என்று கேட்கலாம்

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

எல்ஸ் இஃப் (நான் காதலித்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகாமலிருந்தால்) தென்

இஃப் (அவளுக்கும் விருப்பமிருந்தால்) தென்

கிவ் மீ எ சான்ஸ் என்று சொல்லாம்.

எல்ஸ் இஃப் (திரும்பவும் நீயா என்று சொன்னால்) தென்

வீட்டில் பெண் பார்க்க சொல்லலாம்.

எண்ட் இஃப்

எண்ட் இஃப்

இதை அம்மாவிடம் சொன்னால் திட்டு விழும்."ஆமா எந்த வேலையை தான் ஒழுங்கா செஞ்சிருக்க..சாப்பிடும் போது படிச்சுக்கிட்டே டிவி பாக்குறது.எதுலையும் உருப்படி இல்ல.." அதே பதினெட்டு வயதில் அம்மா கத்தியது ஏனோ நினைவுக்கு வந்தது.

திரும்பவும் சோசியம் மீது லேசாக நம்பிக்கை வந்தது.

Tuesday, January 18, 2011

ஆடுகளம் அயூப் பேசுறேன்

நான் அயூப்.பேட்டைக்காரனுக்கு தெரிஞ்சது எல்லாம் சேவல் சண்டை மட்டும் தான். இந்த நாப்பது வருசத்துல எனக்கு தெரிஞ்சது பேட்டைக்காரனும், சேவலுக்கு போடுற நரம்புத்தையலும் தான். பேட்டைக்காரனுக்கு சேவல்களைக் கணிக்கத் தெரியும்.எனக்கு மனுஷங்களை. சேவல் சண்டையே ஒரு போர் தான். காதலுக்காவும்,போருக்காவும் என்ன செய்தாலும் தப்பேயில்ல. காதல்னு சொன்னதும் தான் இது ஞாபகத்துக்கு வருது.பேட்டைக்காரனைக் சேவல் சண்டையில பாத்த ஒரு சின்ன வயசுப் பொண்ணு அவரையே கல்யாணம் பண்ணிக்கிச்சி. கொஞ்சம் கொஞ்சமா சின்ன வயசுப்பசங்களும் எங்களுக்கு அடுத்து வர ஆரம்பிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா இரண்டு பேரு.

ஒருத்தன் கருப்பு. சேவலைக் கணிக்க தெரிஞ்ச அளவுக்கு மனுஷங்களைக் கணிக்க தெரியாதவன். இல்லன்னா காதலிக்கிறேன்னு சும்மா சொன்ன பொண்ணை நம்பி ரோட்டுல டப்பாக்கட்டையும் அவுத்துட்டு ஆடுவானா. ஆனா எங்க தட்டுனா யார் விழுங்காங்கன்னு பயலுக்குத் தெரியும். அவனையே நம்பியிருக்கிற அவன் ஆத்தா.

இன்னொருத்தன் துரை. கொஞ்ச வசதியுள்ளவன். இவனுக்கும் ஆளுங்களைக் கணிக்கத் தெரியாது. ஆனா துரோகம்னு தெரிஞ்சா கொல்லாம விட மாட்டான். உதவி செஞ்சா எதிராளினாலும் நட்பு பாராட்டுவான்.

எங்களுக்கு எதிரா ரத்தினம்.லோக்கல் இன்ஸ். சேவல் சண்டையில என்னைக்காவது எங்களை ஜெயிக்கலாம்னு எண்ணத்தை அவனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே சொல்லி வளத்த அவன் ஆத்தா. அவன் அப்பன் அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் நேர்மையானவன்.

துரையால ரத்தினம் கிடா வெட்டுற இடத்துக்கு நான் போனேன். தண்ணியடிச்சேன். ஒரு பாட்டிலும் வாங்கிட்டுப் புறப்படலாம்னு பாத்தா பொண்ணு கல்யாணத்துக்கு வண்டி வாங்கித் தர்றேன்னு சொன்னதும் பாட்டில எறிஞ்சிட்டு வந்துட்டேன்.

வீட்டுக்கு சைக்கிள்ல வரும் போது லாரி இடிக்குறாப்ல வந்துச்சி. இடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி தான் நினைச்சிக்கிட்டேன். பேட்டைக்காரனை நான் விட்டுட்டு வந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். ஆனா வேற மாதிரி.காரணம் ரத்தினம் எங்களுக்கு எதிரி. பேட்டைக்காரனை சொன்னதுக்கு எதிரா நடந்தாலே அவன் துரோகியா மாறிடுவான்.

டொப்னு ஒரு சத்தம்.அப்புறம் எனக்கு நினைவேயில்ல. என் பொண்டாட்டி பிள்ளைங்களை துரை,கருப்பு ரெண்டும் பேரும் பாத்துப்பாங்கன்னு நினைப்பே என்னை கொன்னுப் போட்டுரிச்சி.

லாரி நிக்கவேயில்ல.

Wednesday, January 5, 2011

2009 - சாரு புத்தக விழா

முதலில் விழாவைத் தொகுத்து வழங்க வருகிறார் நிர்மலா பெரியசாமி.

கீழிருந்து "ஒஜாரி ஒயே.." அப்படி சத்தம் வருகிறது.யார் என்று பார்த்தால் மதன்பாப் முதல் முறையாக புத்தகம் வெளியீடுவதால் அசத்தப் போவது யார் நிகழ்ச்சியில் இருந்து ஒரு குரூப் கோய் சூட்டோடு முதல் வரிசையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

"வணக்கம்ம்ம்ம்ம்ம்.." என்று நிர்மலா பெரியசாமி ஆரம்பித்தவுடன் சுதாரித்து கடைசி வரிசையில் பம்மி விடுகிறார்கள்.

"அது உஷா இல்லடா.." கோவை குணா சோகத்துடன் சொல்ல அதை கவனிக்காமல் கோட் பட்டனை சரி செய்து கொண்டு இருக்கிறார் மதுரை முத்து.

"வழக்கம் போல நான் தான் முதல்ல..ஆனா என்ன ஒரே ஒரு குறை சிட்டி பாபு சார் தான் வரலை..அவருக்கு பதிலா பத்து ஜட்ஜ்.."

"வந்துட்டாலும்..சனிக்கிழமை ஆனாலே இப்படி கிறுக்குப் பிடிச்சி திரியிறானே.." குணா சோகத்துடன் மேலே பார்க்கிறார்.

"முதலில் விழாவைத் தொகுத்து வழங்குபவர் மனுஷ்யபுத்திரன்.." நிர்மலா பெரியசாமி அறிவிக்கிறார்.

"என்ன அண்ணே என்ன கூப்பிடவே இல்ல..இவரு என்ன விட நல்லா காமெடி பண்ணுவாரா.." இப்படி முத்து புலம்பியது நின்று கொண்டு விழாவைப் பார்க்கும் நர்சிம் காதில் விழுகிறது.

"என்ணங்கள் எழுத வேண்டிய கையால அடிச்சேன் கன்னம் பழுத்துரும்..ஒரே ஊர்காரனா போயிட்ட..அதனாலா சும்மா விடுறேன்.." நர்சிம் கோபத்தில் திட்டுகிறார்.

"இங்கேயும் ஊர்பாசமா..இதே திண்டிவனம் காரன் சொல்லியிருந்தா சும்மா விடுவீங்களா.." என்று ஒரு வளரும் பதிவர் கேட்கிறார்.

"இப்படி சொன்ன உடனே பாம்பேயில இருக்கிறவனுக்கு மூக்கு வேர்த்துரும்..சும்மாவே பாய்ந்து வருவான்.." நர்சிம் சமாதானமாக சொல்கிறார்.

குஜராத் மண்ணின் மோடி மஸ்தான் கேபிளுக்கு போன் போடுகிறார்.சரியாக எஸ்.ராமகிருஷ்ணன் பேச வருகிறார்.கேபிள் ஸ்பீக்கரில் போடுகிறார்.

எஸ்.ராவின் குரல் கேட்கிறது - "மலாவி தேசத்திற்கு போகாமலே அதை விவரித்த பாங்கு அருமையானது.."

குஜராத் மோடி மஸ்தான் கத்துகிறார் - "இது என்ன பிரமாதம்..அவரு சிஷ்யன் இல்ல இப்படி சொன்னா தான் சரியா இருக்கும் அடியாள் ஒருத்தன் ட்ரெயிலர் பாத்தே விமர்சனம் பண்ணுவான்.."

வளரும் பதிவர் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.("இவங்க ஊர்காரர் அமீரை அடிச்ச கோபம்..அதனாலத் தான் இந்த விமர்சனம் வெப்பம்..இல்லன்னா ஒண்ணா தான் திரிவாணுங்க..வெளியில என்னமா நடிக்கிறாங்க..உலக நடிப்புடா சாமி..பாசத்துல மதுரை நெல்லையை விண் பண்ணிரும் போல..")

நர்சிம் மனதுக்குள் நினைத்து சிரிக்கிறார்.("மைன்ட் வாய்ஸ் இங்க வரை கேக்குது..விஜய்யை விட நல்லா நடிக்க முடியுமா..")

கேபிள் - "ஆமா நான் கூட சாருவின் சிஷ்யனா சேரப் போறேன்..அப்பத்தான் நானும் இந்த வாரம் அப்படி தான் விமர்சனம் எழுதணும்.வேட்டைக்காரன் படத்தை வேற பாக்கணுமா..இப்பவே கண்ணக் கட்டுதே.."

மோடி மஸ்தான் - "இங்க வரைக்கும் விஷயம் தெரியும் போல..இன்"ஷூ"ரன்ஸ் கூட தர மாட்டேன் சொல்லிட்டாங்க.."

கேபிள் - "இதுல போலீஸ்காரங்களை எல்லாம் அடிக்கிறாரு..நடக்கிற விஷயமா..ஆனா போக்கிரியில் இவர் போலீஸா நடிச்சா ஒரு அடி கூடப் படாது.."

வளரும் பதிவர் - "ஹலோ..அவர் தமிழன் படத்துல கூட போலீஸை அடித்து இருக்கார்..அப்பவே கேக்க வேண்டியது.."

கேபிள் - "இப்போ நான் ஐ.பி.எஸ்.காந்தி கொலை கேஸ் எல்லாம் நான் தான் விசாரிக்கிறேன்..இந்த பதிவை எழுதியவன் தான் எனக்கும் அந்த பட்டம் குடுத்தான்.."

இரும்புத்திரை - "அண்ணா உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா..பதிவை எழுதியது நைனா தான்னு.."

நைனா - "ரைட் விடு.."

நிர்மலா பெரியசாமி - "இப்பொழுது மதன்பாப் பேசுவார்.."

மதன்பாப் - "ஹி..ஹி..இவரு ரொம்ப நல்ல எழுத்தாளர்..ஹி..ஹி..வேரைட்டி தான் இவரோட ஸ்பெஷல்..ஹி..ஹி..எப்பவும் அப்டூ டேட்டா இருப்பார்.. ஹி..ஹி..அதுலையும் ஸ்டாண்டப்..ஹி..ஹி.."

நர்சிம் - "பாப்பூ வைக்காதீங்க ஆப்பு.."

மதன்பாப் - "சாரு தான் நாலு வரி பேச சொன்னாரு.."

மதுரை முத்து - "என்னை மட்டும் திட்டுனீங்களே..எங்க ஜட்ஜ் கூட சனிக்கிழமை ஞாபகத்தில் தான் இருக்குறாரு.."

ஒரு வழியாக வந்து உக்காருகிறார்.

மிஷ்கினிடம் மதன்பாப் - "எப்படி சார் என் பெர்ஃபார்மன்ஸ்.."

வண்டு முருகன் வடிவேலுவை ஜட்ஜ் ஒரு பார்வை பார்ப்பாரே.அது மாதிரி மிஷ்கின் பார்க்கிறார்.மதன் பாப் திரும்பி கொள்கிறார்.

கடைசியாக சாரு பேச வருகிறார்.

சாரு - "யோகி படத்தில் மதுமிதா லுங்கி அணிந்து இருந்தார்..மூலப்படத்திலும் அது மாதிரி தான் இருந்தது.அது அப்பட்டமான காப்பி..ஆனால் நந்தலாலா அப்படி இல்லை..அங்கு நாயகன் சாதாரண உடையில் இருந்தார்.இங்கு மிஷ்கின் காவலாளி உடையில் இருக்கிறார்.."

மதன்பாப் - "நான் அப்பவே சொன்னேன்..நீங்க தான் கவனிக்கல..அங்கப் பாருங்க..ஸ்டாண்டப் காமெடி எப்படி பிச்சி உதறுறாரு.."

மிஷ்கின் அதை கவனிக்காமல் - "இங்கிட்டு மிஷ்கின்..அங்கிட்டு கமல் சாரா.."

மதன்பாப் - "இது கெஸ்ட் அசத்துற நேரம்..உங்க முதல் ரெண்டு படத்தில் உள்ள குத்துப்பாட்டு தான் பேசப்பட்டதுன்னு நீங்களே சொன்னீங்க..என்ன பண்ணப் போறீங்க..ஆடப் போறீங்களா..இல்ல பாடப் போறீங்களா..இல்ல நடிச்சி அசத்தப் போறீங்களா.."

மிஷ்கின் - "நடிச்சு தான் அசத்தப் போறேன்.." சொல்லி விட்டு அஞ்சாதே படத்தில் வருவது மாதிரி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்.

கடைசி வரிசையில் இருந்து "ஒஜாரி ஒயே.." என்று சத்தம் வருகிறது.பதிவர்கள் குரூப் பாய்ந்து வந்து அசத்தப் போவது யார் அணியை அள்ளிச் சென்று நன்றாக "கவனிக்கிறார்கள்".

பார்ட்டியில் ஒருவர் சாருவிடம் வந்து "நீங்க இதுக்கு வடிவேலுவையோ இல்ல கவுண்டமணியையோ கூப்பிட்டுக் கொண்டு வந்து இருக்கலாம்.."

கேபிள் ஓடி வருகிறார் - "அப்ப நீங்க தான் _வுச்சியா.."

கேள்வி கேட்டவர் இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து விடுகிறார்.

கேபிள் - "உங்களை விமர்சனம் செய்த _வுச்சி கூட உங்களுக்கு நல்லது செய்கிறார்..உங்க ஜால்ரா என்று சொல்லிக்கிட்டு மும்பையில் இருக்கிறவன் அது அவரு விழாவுக்கு வடிவேலு வரட்டும் என்று பதிவு போடுகிறான்..அவனை நம்பாதீங்க.."

தெலுங்கானா பிரிவை கேள்விப்பட்டு நைனாவிற்கு போன் செய்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "நீங்க நெல்லைக்கு முதல்வரா..எனக்கு துணை முதல்வர் பதவியாவது குடுங்க.."

நைனா - "நீ சென்னை கேளு..புரியுதா வெண்ணை.."

இரும்புத்திரை - "சென்னை என் தல சாருவுக்கு.."

நைனா - "உனக்கு சென்னை வேணுமா..நான் சொல்ற மாதிரி கேளு..சாரு கிட்டப் போய் அடுத்த ஆண்டு புத்தக வெளியீடு விழாவுக்கு குமரிமுத்து தான் வரணும்னு அடம் பிடி.."

இரும்புத்திரை - "ஏன் என் குரு நாதருக்கு கூட்டம் சேர்ந்தா உனக்குப் பொறுக்காதே.."

நைனா - "நான் இதை வச்சு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்..உன் ப்ளாக்குல நீயே போட்டுக்கோ.."

இரும்புத்திரை - "எப்படியோ ஹிட்ஸ் ஏறினா சரி.."

பதிவுப் போட்டப் பிறகு அதை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்."யோவ் நைனா நீங்க அனுப்புறேன்னு சொன்ன வைரஸ் இது தானா..". பதிவை அழிக்க மறந்து மயங்கி விழுகிறார்.

நைனா - "வழக்கமா டிஸ்கி போடுவானே..நாம போடலையே..இத வைச்சே கண்டுப்பிடிச்சுருவாங்களே.."

மயங்கி கிடக்கும் இரும்புத்திரையை இழுத்து செல்கிறார் நைனா.எதுக்கு தெரியுமா பதுங்குக் குழியில் ஒரு மாமாங்கம் தங்கி ஒளிந்துக் கொள்ளத் தான்.

Tuesday, January 4, 2011

முத்தத்தின் விலை முப்பது டாலர்

இந்தியாவை விட்டு வந்த இருபதாவது நாளில் அவளுடைய பிறந்த நாள்.நான்கு வருடங்களாக நினைவுக்கு வராதது இந்த வருடம் நினைவுக்கு வந்தது ஆச்சர்யமாக தெரியவில்லை.நியூசிலாந்தில் இன்னும் பக்கத்தில் அவளிருப்பதால் கூட நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.பழைய நினைவுகளால் கடும் தலைவலி. இந்திய உணவகத்திற்கு இன்னும் நடக்க வேண்டும் என்ற நினைப்பே கூடுதல் தலைவலியை உண்டாக்கியது. ஜப்பானிய ரெஸ்டாரண்டைக் கடந்து சீன ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தேன்.நான் என்ன சொன்னேனோ அவன் என்ன புரிந்து கொண்டானோ தெரியவில்லை.எதையோ கொண்டு வந்தான்.பிடிக்கவில்லை என்றாலும் சாப்பிட்டு தொலைத்தேன் காரணம் இந்திய மதிப்பில் அது தொன்னூறு ரூபாய்.வாந்தி வருவது போலிருந்தது.என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டு ஏற்கனவே இங்கிருந்த நண்பனுக்கு தகவல் அனுப்பினேன்.

"டேய் பீர் அடி சரியாகி விடும்.." பதிலுக்கு தகவலனுப்பி விட்டு போனை அமர்த்தி விட்டான்.அந்த நாய் தான் என்கிரிப்ட் முறையைக் கண்டுப்பிடித்தது யார் என்று வகுப்பில் கேள்வி கேட்ட போது ஏதோ பீர் பெயரை சொல்ல அதை நானும் வாந்தியெடுக்க பின் வந்த அவள் வகுப்புகளில் நான் மொத்தமாக வெளியேற்றப்பட்டிருந்தேன்.உண்மையா என்று கேட்க முடிவு செய்து காலடித்து காலடித்து நான் ஒய்ந்து விட்டேன்.இனி நாளை தான் பேசுவான் என்று தெரிந்து விட்டது.

"வாட் யூ வான்ட் சார்.." என்று சத்தம் கேட்டது.அட என்னைக் கூட சார் என்று சொல்ல ஆளிருக்கிறதே என்பது தலைவலியைத் தாண்டி இனித்தது.

"பீர்.." சொல்லி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆரவாரமில்லாத அழகு அவளிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.தமிழ்ப்பெண்ணாக இருக்குமோ என்று அவளை இன்னும் உற்றுப் பார்க்கத் தொடங்கிருந்தேன்.

"ஒன் ஆபர் இஸ் தேர் வார் ஹாட்..பை ஒன் கெட் ஒன் ப்ரீ.." அவளுக்காகவே அதை வாங்கலாம் போலிருந்தது.சரி என்று தலையாட்டி வைத்தேன்.காலையில் தான் நண்பர் சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது."இங்கே கொஞ்சம் உஷாரா இரு இல்ல..சூ அடிச்சி சுண்ணாம்பு தடவுவாங்க.." காதில் ஒலித்த வார்த்தைகளால் இருக்கும் சூழ்நிலை தெரிந்தாலும் அவள் பிறந்த நாளென்பதால் யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.அவள் பேச்சைக் கேட்பதில்லை என்று சொல்லித் தான் பிரிந்தாள்.அதனால் இன்று யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.

கொண்டு வரப் போனவளிடம் "தமிழா.." என்று கேட்டு வைத்தேன்.பதிலை எதிர்பார்த்து உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொன்னவுடன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் அவள் கண்களில் லேசான சிரிப்பு தெரிவது போல் ஒரு உணர்வு.

கொண்டு வந்ததை எதுவும் கலக்காமல் கல்ப் கல்ப்பாக அடித்தேன்.எல்லோரும் என்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாலும் அவள் எந்த மேஜையில் இருந்தாலும் என்னைக் கவனிப்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

இந்தியா மாதிரி இல்லை இங்கு ஜக் அல்லது மக் தான்.அந்த ஜக்கை முடித்து விட்டு "ஹேய்.." அவளை அழைத்து "ஒன் மோர்.." என்று சொன்னேன்.கொண்டு பக்கத்தில் வைத்து விட்டு "என்ன லவ் பெயிலியரா..ஏன் இப்படி அடிக்கிறீங்க..உடம்பு.." என்று அவள் முடிப்பதற்குள் "தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொல்லும் போது என் கண்களால் சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.கண்ணைத் திறக்கவே முடியவில்லை எங்கு சிரிக்க.

"சரி தப்பு செய்துட்டேன்..தமிழ் தான்.. அடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா இல்லையா.."

"தமிழ் செம்மொழியாக மாறினாலும் மாறிச்சி..இங்கே அது சரக்காக மாறி விட்டதா..தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." சொல்லி விட்டு பலமாக சிரித்தேன்.

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்.."

"ப்ரீன்னு சொன்னீங்களே..அதை எடுத்துட்டு வாங்க..அடிக்கணும்.."

"நீங்க பாதி காசு தந்தா போதும்..சரக்கெல்லாம் தர முடியாது.."

"இல்ல அது தான் வேணும்.."

"அதில்ல..நீங்க காசே தர வேண்டாம் .வீட்டுக்குப் போங்க முதல்ல.."

"டேய் மானேஜர்..இங்க வாடா.." கத்தத் தொடங்கியிருந்தேன்.எழுந்து கேஷியர் இருந்த இடத்திற்கு போகலாம் என்று நினைப்பதற்குள் கால் தடுக்கி விட்டது.முழுதாக விழுவதற்கு முன் அவள் தாங்கியிருந்தாள். நினைவிழந்து கொண்டிருந்தேன்.

நினைவிருப்பதாக நினைத்துக் கொண்டு "சரி கொண்டு வரேன்..கூட என்ன வேணும்.."

"முத்தம்.."

"என்ன..ஆங்க் தர்ட்டி டாலர்ஸ்.." அங்கு யாருக்கோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனக்கு தான் என்று நினைத்துக் கொண்டு "ஒரு முத்தம் முப்பது டாலர்ஸா..ஜாஸ்தியா இல்ல.." அவள் பதில் சொல்லும் முன் மயங்கிருந்தேன்.

கண் முழித்து பார்த்தால் ஹோட்டல் அறையில் கூடவே யாரோ ஒரு பெண்ணுமிருந்தாள். "வாட் ஆர் யூ டூயிங் ஹியர்.." சொன்னது போலவே இது வேறு ஏரியா போல் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

"என்னமா நடிக்கிற..முப்பது ரிங்கெட் ஒரு முத்தத்திற்கு ஜாஸ்தி என்று சொல்லி அதுவும் அந்த கடை ஒனர் கிட்டேயே முத்தம் கேக்குற.."

பாஸ்போர்ட்,பர்ஸ் எல்லாமிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டேன்.அதுவும் அவளுக்கு தெரிந்து விட்டது.

"என்ன கொழுப்பா..உன்னை எல்லாம் அப்பவே ரோட்ல தூக்கிப் போட்டு இருக்கணும்.. எல்லாம் சரியாதான் இருக்கு..ஒசியில சரக்கடிச்சிட்டுப் பண்ற வேலையெல்லாம் பாரு..என்ன லவ் பெலியரா.."

"இங்க இருந்து நியூசிலாந்து எவ்வளவு தூரம்.."

"நான் என்ன கேக்குறேன்..நீ என்ன சொல்ற.."

"அங்கப் போக விசா வாங்கணுமா.."

"டாக்ஸில போக முடியுமா..எவ்வளவு நேரம் ஆகும்.."

"ஆள விடு சாமி..இப்போ தான் தெரியுது ஏன் லவ் பெயிலியர்னு..சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா எந்தப் பொண்ணு தான் கூட இருப்பா..எதுக்கு நியூசிலாந்து.."

"அவ என்ன காரணம் சொல்லி நிராகரிச்சாளோ அப்படி எல்லாம் இப்ப இல்ல , நானும் இங்கதான் இருக்கேன்னு அவளுக்கு சொல்லணும்.."

"ஆர்குட்,பேஸ்புக் இப்படி எதிலயாவது போட வேண்டியது தானே..அவ பாத்து தெரிஞ்சிட்டுப் போறா.."

"நேர்ல தான் சொல்லணும்..எதுல போனா சீக்கிரம் போகலாம்.."

"நடந்து போ..முதல்ல காசைக் கொடு..அப்புறம் எப்படி வேணாலும் போ.." அவள் பொறுமை இழந்திருந்தாள்.

காசோடு ஒரு துண்டுச் சீட்டில் என் எண்ணையும் கூடவே நியூசிலாந்து எதில் போனால் சீக்கிரம் போகலாம் என்றும் கேட்டு வைத்திருந்தேன்.

மொபைல் அலறியது "என் நெஞ்சிலே ஒரு பூ பூத்தது.." ஏதோ ஒரு புது எண்.

"ப்ளைட்டில் நியூசிலாந்து இங்கிருந்து ஐந்து மணி நேரம்.ப்ளைட் வேண்டாம்..என்னிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது..வருகிறாயா :-).." என்றிருந்தது.

"ஏற்கனவே நீ தர வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது.." பதிலனுப்பினேன்.

"என்ன முத்தமா..நீ தான் காஸ்ட்லி என்று சொல்லி விட்டாயே.." என்று பதில் வந்தது.

"நான் சரக்கை சொன்னேன்..சரி சரக்கு மட்டும் தான் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ப்ரீயா..நான் கேட்ட இன்னொன்று இல்லையா.." அனுப்பியிருந்தேன்

"எது முத்தமா.."

"இல்லை சைட்டிஸ்.." உள் மனது நீ கூடிய விரைவில் அடுத்த பாருக்கு போக வேண்டும் என்று சொன்னாலும் பதிலுக்காக காத்திருந்தேன்.