Saturday, July 17, 2010

களவாணி - மீண்டும் ஒரு ஆண் பாவம்

போன டிசம்பரில் எழுதிய இரண்டு பதிவுகளுக்கு தான் நான் அதிக எதிர்வினைகளை சம்பாதித்தேன். ராமராஜன் பற்றி எழுதிய பதிவுகள் ஒரே வாரத்தில் ஐம்பது மைனஸ் ஓட்டுகள் விழ காரணமாகயிருந்தது. சில ஃபாலோயர்களையும், சில நட்புக்களையும் இழந்திருந்த காலமது. ராமராஜன் படத்தில் அவர் நல்லவனாகயிருப்பார் (மிக) அழகாயிருந்தால் காதலி இல்லையென்றால் தங்கச்சி, வில்லன் குடிகாரன், பொறுக்கி என்று ராமராஜனுக்கு எதிர்மறையாக இருப்பான். இப்படி தொடர்ந்து ஒரே பாணியில் நடித்த காரணத்தால் தான் அவர் காணாமல் போனார் என்று சொல்லியிருந்தேன். நிறைய பேருக்கு என் மேல் கோபம். அந்த சமயத்தில் சாட்டில் வந்த நண்பர் கேட்டார். உங்களுக்கு எந்த படம் தான் பிடிக்கும். அன்று பதில் சொல்லவில்லை.ஆனால் பதிலாகவே ஒரு படம் அமைந்திருக்கிறது. அது தான் களவாணி. நிச்சயம் ஒரு ஆண் பாவம் படத்திற்கு பிறகு காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்த படம்.  முதல் படத்தில் தான் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் திரைக்கதையில் கொட்டுவார்கள் என்பது நிதர்சனம். அதற்கு உதாரணமாக அறிக்கி எல்.சி 112 என்று ஒரு காட்சி போகும்.

ஆண் பாவம் படத்துடன் இதை நிச்சயம் ஒப்பிட முடியும். ஹீரோ என்றால் யாருமே கிண்டல் செய்ய மாட்டார்கள். இதில் நாயகியைத் திருமணம் செய்ய வரும் பையனிடம் (கதை மதுரை பக்கமிருந்து ஒரத்த நாடு பக்கம் திரும்பியது மாதிரி வெளிநாடு மாப்பிள்ளை என்றாலே அமெரிக்கா என்பதிலிருந்து சிங்கப்பூர் என்று மாறியுள்ளது) வெ.க.கு சூரி சொல்வார் - " எனக்காவது நிறைய பொண்ணுங்க கிடைப்பாங்க.. அவனுக்கு ஒரு பெண்ணும் கிடைக்க மாட்டாங்கன்னு தான் அதை தேத்தி வச்சிருக்கான்..உனக்கு ஒரு சீன்ச்சி கிடைப்பா.." இப்படி சமீபகாலமாக நாயகனை கிண்டலடித்து வந்த படங்களில் இதுவும் ஒன்று.

படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. பென்சில் வாங்கித் தருமாறு தங்கை கேட்க ரப்பர் வச்சதா இல்ல வைக்காததா என்று நக்கல் விடும் காட்சி. கூட வந்த பெண்களை எல்லாம் துரத்தி விட்டு விட்டு நாயகிடம் விமல் பேச முயற்சிக்கும் போது "உன் தோதுக்கு ரெடி பண்ணு.." என்று அதில் ஒரு பெண் சொல்லும் போது லேசாக புன்னகை வந்தது.

விமல், கஞ்சா கருப்பு, சரண்யா (அம்மா கேரக்டருக்கு இனி இவர் தான்), இளவரசு (சென்னை - 28 படத்திற்குப் பின்), ஒவியா , நாயகியின் அண்ணன், நாயகனின் நண்பர்கள் ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் பூக்காரன் முதல் எல்லோருமே இயக்குனர் சொன்னதை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

பாடல்களே இல்லாமல் ஒரு படம் வராதா என்று ஏங்கும் நபர்களின் நானும் ஒருவன். படத்திற்கு தோய்வே பாடல் காட்சிகள் தான். பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. திரைக்கதை சில இடங்களில் நொண்டி அடித்தாலும் அதை பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.(ஏன் படம் பிடித்தது என்று யாரும் காரணம் கேட்க மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.இங்குள்ள பிரச்சனையே இதுதான் எனக்கு பிடித்தது உனக்கு பிடிக்காமல் போய் விட்டதா ஏன் எதற்கு உழைப்பு அது இதுவென சொன்னவர்களை வெளுத்து எடுக்கிறோம்.பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது காரணமே கேட்காமல் நம்முடன் சேர்த்து கொள்கிறோம். அது தவிர யாராவது வெள்ளை காக்கா மேலே பறக்கிறது என்று சொன்னாலும் ஆமாம் என்று சொல்ல பழகியிருக்கிறோம். அது மாதிரி தான் இணையத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கொண்டாடப்பட்டதும் அதை பிடிக்கவில்லை என்று சொன்னவர்களை யூத்தேயில்லை என்று சொன்னதும் நடந்தது.)

புத்திசாலியான கதாநாயகன் எந்த இடத்திலும் எந்த சிக்கலிலும் அலட்டிக் கொள்ளாமல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் (இறுதி காட்சி ஒன்றே போதும் - மச்சான் என்று சொல்லி சமாளிப்பது), அம்மா சொன்ன மாதிரியே ஏதோ ஒரு ஆவணியில் டாப்பாக வருவதும் என்று நிறைய நாம் தினம் தினம் எதிர் கொள்ளும் காட்சிகளும் உண்டு.

அம்மாக்களுக்கு மட்டும் தான் பிள்ளைகள் மேல் எவ்வளவு நம்பிக்கை. அவன் கிரகம் தான் இப்படி செய்ய வைக்கிறது என்று சொல்வதும், கணவனை அடக்க தூக்கு மாட்டுமிடத்திலும் சரண்யா என்ற நடிகை எனக்கு தெரியவில்லை. அவன் காசில் டீ குடிக்கும் நிலை வந்தால் செத்துப் போவேன் என்று சொல்லுமிடத்தில் அப்பாக்களுக்கே உள்ள பொறாமை குணத்தை காட்டும் இடத்தில் இளவரசு என்ற நடிகன் மறைந்து விட்டார்.

சில குறைகள் உண்டு. மாசமா என்று உச்சரிக்குமிடத்தில் மாதம் என்று கொஞ்சம் பேச்சு வழக்குல் ஒட்டாத தமிழ் வருகிறது. எல் சி 11 2 என்பதை ஒவியா மாற்றி எழுதுமிடத்தில் அவருக்கு தமிழ் தெரியாது என்பது இடத்தாலும் புத்திசாதித்தனமாக அதில் படம் வரைவது, கல்யாணம் வெள்ளிக்கிழமை இல்ல நாளைக்கு இதை எப்படியாவது அறிக்கிக்கிட்ட சொல்லிருங்க என்று வேலைக்காரரிடம் கெஞ்சுவதும் அவர் சரி என்று சொல்லி விட்டு வெளியே வந்து கசக்கிப் போடுவதும், ஆனால் அண்ணனிடம் இதை பற்றி சொல்லாமல் மறைக்கும் இடத்தில் இயக்குனர் சற்குணம் டபுள் காட் போட்டு அமர்கிறார்.

இளங்கோவாக வருபவர் சில இடத்தில் முகபாவனைகளை மிஸ் செய்திருந்தாலும் (இறுதி காட்சி அண்ணா என்று ஒவியா சொல்லும் போது) படத்திற்கு பெரிய உறுதுணை. ஒவியா பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். ஆண் பாவம் மாதிரி இறுதி காட்சியில் சாவது போல் நடிப்பது நன்றாக இருந்தாலும் இளங்கோவைப் பார்த்து விட்டு நாயகியுடன் விமல் பஸ்ஸில் சைக்கிளோடு தப்பிப்பது சினிமா சினிமா சினிமா என்று சொல்லியது. திருப்பத்தில் வருபவர்களை விமல் பார்க்கும் போது அங்கிருக்கும் அவர்களும் விமலை பார்க்கலாம்.ஓடும் லாரியில் திருடி விட்டு குதிக்கும் போது விமல் தடுமாறாமல் இருப்பது அதெல்லாம் சினிமாத்தனமாக இருந்தாலும் தொடர்ந்து வரும் கஞ்சா கருப்பு காட்சிகள் நன்றாக இருந்தது.அதை இறுதி காட்சி வரை பயன்படுத்திய இயக்குனரின் உத்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிறைய நாட்களுக்குப் பின் தொடர்ந்து சிரித்துக் கொண்டேயிருந்தேன். களவாணி திருடியது ரசிகர்களின் மனதை என்று தான் நினைக்கிறேன்.

11 comments:

நீ தொடு வானம் said...

உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு சண்டைக்கார பிம்பம் பொருந்தவில்லை. வலிந்து மாட்டிக் கொண்டு திரிவதன் நோக்கம் தான் புரியவில்லை.இது மாதிரி எழுதி தொலைத்தால் தான் என்ன.

மதார் said...

உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு சண்டைக்கார பிம்பம் பொருந்தவில்லை. வலிந்து மாட்டிக் கொண்டு திரிவதன் நோக்கம் தான் புரியவில்லை.இது மாதிரி எழுதி தொலைத்தால் தான் என்ன என்ன என்ன என்ன?

அத்திரி said...

//அது மாதிரி தான் இணையத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கொண்டாடப்பட்டதும் அதை பிடிக்கவில்லை என்று சொன்னவர்களை யூத்தேயில்லை என்று சொன்னதும் நடந்தது.)
//

ஆமா தம்பி யூத்துங்க தொல்லை தாங்க முடியல

அத்திரி said...

அப்பாடா............ இந்தப் அடமாவது புடிச்சிருக்குனு சொன்னியே...........தியேட்டர்லதான போய் பாத்த

அத்திரி said...

ஒரு காட்சி கூட படத்தில் போரடிக்கவில்லை........அதுவும் கிளைமேக்ஸ் சான்ஸே இல்ல தம்பி

Vikram said...

இப்படி எல்லாம் பதிவுகள் வந்தால் நான் படம் பார்த்து விடுவேன்... அடுத்த மாதம் பரிட்சை இருக்கிறது... :) good post...

Anonymous said...

உண்மைதான்.இவ்வளவு நல்ல படத்தை மேலிடத்து இளம் சினிமா தொழில் அதிபர்கள் தங்கள் படத்தை வெளியிட களவாணியய் தூக்கும் படிதியேட்டர்காரர்களை நச்சுகிறார்களாம் கொடுமை

சரவண வடிவேல்.வே said...

கடைசி காட்சிவரை அனைவரையும் சிரிக்கவைத்த படம். நல்ல விமர்சனம்.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்.