Wednesday, July 14, 2010

திசையன்விளை - பதின்மத்தின் அடியாழத்திலிருந்து

மலேசியாவில் மழை எப்போது பெய்யும் என்று கணிக்க முடியாத அளவிற்கு இங்கு தீடிரென மழை பெய்யும்.அப்படி ஒரு மழை நாளின் ஒதுங்க டைம்ஸ் ஸ்கொயருக்குள் நுழைந்திருந்தோம்.

"பாஸூ..இங்க தான் குருவி ஷூட்டிங் எடுத்தாங்க..விஜய் கூட திரிஷா பிடிச்சிக்கிட்டு மேல இருந்து குதிப்பாரே.."

"அப்ப விஜய் வந்ததில் இருந்து தான் கூட்டமேயில்லையா.." விஜய் ரசிகர் போலிருக்கிறது. நான் சொன்னதை ரசிக்கவில்லை.

இந்தியா மாதிரி வி.ஜி.பி கோல்டன் பீச்சில் நுழைய காசு எல்லாம் குடுக்க வேண்டாம். எங்கு வேண்டுமானாலும் நுழையலாம். ஏதாவது விளையாடினால் மட்டும் பர்ஸை தொட்டால் போதும்.

காலையில் தான் எச்சரித்திருந்தார்கள்.கொஞ்சம் ஏமாந்தால் உருவி விடுவார்கள். புல் தந்தூரி நாலு ரிங்கட் என்று போட்டிருந்தார்கள். பசி எடுக்கவே அதை சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூட வந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"பாஸ் உங்களுக்கு கோழி ரொம்ப பிடிக்குமா.." கேள்விதொணியில் ஒன்றும் வித்தியாசம் தெரியாத காரணத்தால் நானும் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே மதன்பாப் மாதிரி கோழி புராணம் பாடிக் கொண்டிருந்தேன்.அவர் சிரிப்பை அடக்குவது போல் தெரிந்தது.

கடைசியில் விளம்பரத்தில் கோழி சைஸில் படம் போட்டு விட்டு தரும் போது கவுதாரி மாதிரி மினியேச்ச சைஸில் இருந்தது.சின்ன காலாயிருந்தாலும் நல்லாயிருக்குடா அப்படி கூட சொல்ல முடியாத அளவில் அந்த விளம்பரக் கோழி இருந்தது.

வீட்டிற்கு வரும் வழியில்

இன்னொரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் - "பாஸூக்கு கோழின்னா ரொம்ப பிடிக்கும் போல.."

"எந்த நாட்டுக் கோழி பாஸ்.."

அப்போது தான் புரிந்தது.கோழி என்றால் இங்கு கோர்ட் வேர்ட் போல.

இனி பிளாஷ்பேக்..

திசையன்விளையில் நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். சென்னைக்கு சுற்றுலா செல்வதாக ஏக மனதாக முடிவு எடுத்திருந்தார்கள். வழக்கம் போல ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தான் அதில் அதிகம். அந்த வகுப்பில் இருந்த ஒரு டெரர் தான் பிரகாஷ். டாக்டர் பிரகாஷ் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்.நல்ல கலர்.ஆளும் குள்ளமென்பதால் சின்னப் பையன் போலிருப்பான்.

சென்னை போய் சேர்ந்ததும் பள்ளியின் கரஸ் பையனையும் எங்களோடு அனுப்பியிருந்தார்கள். பிரகாஷ் ஏக எரிச்சலில் இருந்தான். எது செய்தாலும் அவன் போய் போட்டுக் கொடுத்து விட்டால் இவன் கதி என்னாவது. அவனை வம்பிழுத்து பயங்கராம வெறுப்பேத்தி அடுத்த நாள் பெண்களோடு போகும் படி செய்து விட்டான்.

"ஏற்கனவே அவன் பையனால ஒரு பொண்ணைக் கூட பாக்க முடியல..ஒரு நாள் போயிருச்சே.." பஸ்ஸில் வரும் போதே புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா அப்பனை மாதிரியே பிள்ளையும் இருக்கான்.." எண்ணெய் ஊத்திக் கொண்டிருந்தோம். காலையில் முதலில் கிஷ்கிந்தா. 3 டி படம் பார்த்து கொண்டிருந்தோம்.படம் பிடிக்கவில்லை. படம் முடிந்ததும் எல்லோருடைய கண்ணாடியையும் வாங்கி பிரகாஷ் உடைத்து போட்டு விட்டான்.

வெளியில் கண்ணாடி கேட்டார்கள்."சீட்டில் வைத்து விட்டோம்.." என்று சொல்லி சமாளித்து விட்டான்.

வெளியே வந்ததும் தான் கவனித்தோம். பிரகாஷ் தனியாக வந்திருந்த மூன்று பெண்களுக்கு கையாட்டிக் கொண்டிருந்தான். யாருக்காவது தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று கோழியைப் பாருங்கடா என்று சொல்ல ஆரம்பித்து விட்டான்.

கொஞ்ச நேரத்தில் அந்த பெண்களுடன் பேசி அவர்கள் அடுத்து வண்டலூர் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டான். அடுத்தது நாங்களும் அங்கு தான் போவதாகயிருந்தது.

வண்டலூர் போகும் வழியில் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறும் போது அந்த பெண்கள் அங்கிருந்ததைப் பார்த்து ஒவராக கத்தி விட்டான்.

"அங்கப் பாருங்கடா அந்த கோழிகளை.." இப்படி அவன் கத்தியது அங்கிருந்த எல்லோர் காதிலும் விழுந்து தொலைத்தது.

"ஏண்டா இப்படி அலையிறீங்க.." அவன் கிளாஸ் பொண்ணு சொல்ல

"நீங்க எல்லாம் அழகாயிருந்தா நான் ஏன் கோழி கோழின்னு அலையிறேன்..ஒழுங்கா உன் வேலையைப் பாரு.."

"மிஸ் இங்க பாருங்க..பிரகாஷ் கோழி கேக்குறான்.." இப்படி போட்டு கொடுத்து விட்டார்கள்.

"என்னடா கோழி..நீ சொல்லு..நீதான் அந்த செட்லையே நல்லவன்.." என்று என்னை கேட்டார்கள்.

"பாரு சாட்சிக்குப் பிடிச்ச ஆளை.." என்று பிரகாஷ் நக்கல் அடித்து கொண்டார்கள்.

"இல்ல..மத்தியானம் சாப்பாட்டுல கோழி இல்லையாம்..அதான் சொன்னான்.." எப்படியோ சமாளித்து விட்டேன்.

வண்டலூரில் திரும்ப அந்த பெண்களுடன் சுத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ஆளையே காணோம். தேடினால் ரொம்ப சோகமாக வந்தான்.

விசாரித்து பார்த்தால் அந்த கும்பலில் இருந்த பெண் யாருமில்லாத இடத்தில் இவன் முதுகைத் தடவி பார்த்து விட்டு "போடா சின்னப் பையா.." என்று திட்டி விட்டாளாம்.

"எப்படி அது முதுகைத் தடவி பார்த்து கண்டுப்பிடிக்க முடியும்.." எங்களுக்கு எல்லாம் சந்தேகம். கடைசியில் பார்த்தால் பிரகாஷ் ரொம்ப கலராயிருந்ததால் பூணூல் போட்டுயிருக்கிறானா என்று தடவிப் பார்த்திருக்கிறார்கள். இல்லை என்றதும் சின்னப் பையன் என்று துரத்தி விட்டார்களாம்.

பசங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் போனதில் கோபத்தில் இருந்தார்கள்."சைவ கோழி.." என்று பிரகாஷைக் கிண்டல் செய்து கொண்டே வர..

கோழி என்பது கோர்ட் வேட் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.உடனே பிரகாஷ் "டேய்..இனி கோழி ராசியில்லை..புலி என்று மாத்தி விடுவோம்.." என்று சொன்னதும் தான் தாமதம்.

"கோழியா இருக்கப் போய் ஒரு கீறல் கூட இல்லாம வந்திருக்க..அதுவே புலியாயிருந்தா.." திருநெல்வேலி வந்து சேரும் வரை ஒரு வழி பண்ணியிருந்தோம்.

அவனை பார்த்தால் கேட்க வேண்டும்..இன்னும் சின்னப் பையன் என்று தான் சொல்கிறார்களா என்று. முதலில் புலி என்றால் ஏதாவது சங்கேத வார்த்தையா என்று இங்கு விசாரிக்க வேண்டும்.

6 comments:

Unknown said...

nice nostalgia

அகல்விளக்கு said...

ஹிஹி...

சூப்பரு தல...

Unknown said...

I want to go to Idiyangudi. I came to know it is near Thisayanvilai. I am travelling from Nagercoil.

Could you tell me how to reach Idiyangudi ?

Kulasaisekar

இரும்புத்திரை said...

நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக திருச்செந்தூர் போகும் வழியில் இட்டமொழி அல்லது சாத்தான்குளத்தில் இறங்கவும்.அங்கிருந்து திசையன்விளை அங்கிருந்து இடையன்குடி.நான் திருநெல்வேலியை காலி செய்து நாள் ஆகி விட்டது.ஆனாலும் இதுதான் எனக்கு தெரிந்த வழி.

Unknown said...

Thank you. I am going there shortly to write about Robert Caldwell, which will soon appear in my blog.

Good wishes.

PaUl IsAcC said...

நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் வழியாக திருச்செந்தூர் போகும் வழியில் மன்னார்புரத்தில் இறங்கவும்.அங்கிருந்து திசையன்விளை அங்கிருந்து இடையன்குடி இதுதான் சரியான வழி.