Monday, July 12, 2010

இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணினா தான் பிரபல பதிவரா

கிராமங்களில் பெயர் வைப்பதற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிதான் இவளுக்கும் பெயர் வைத்தார்கள்.அந்த குடும்பத்திலே மிகவும் வெள்ளையாகப் பிறந்ததால் இந்த பெயர்.நான் பழகியதில் ரொம்ப தைரியமான பெண் என்று தான் நான்கு வருடங்களுக்கு முன் வரை நினைத்து வந்தேன்.

பதினாலு வருடங்களுக்கு முன்..

ஊரில் சின்னப் பசங்களுக்குள் எந்த சண்டை(சண்டை மட்டுமே) நடந்தாலும் குற்றப்பத்திரிகையில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.சாட்சியங்களோடு அந்த இடத்தில் இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே அடுத்த பையன் மீது விசாரணை நகரும்.அப்படி ஊருக்குள் நல்லப் பெயர் எடுத்தவன்.அப்படி இருக்கும் என்னோடு விளையாட பசங்களே யோசிப்பார்கள்.இதில் கண்ணன் என்ற உறவினன் தான் எனக்கு எல்லாமே.அவனும் சேர்ந்தால் விளையாட்டுக்களம் ரணகளம் ஆகும்.
அப்போ ஊரில் பேமஸான விளையாட்டு கிரிக்கெட்டுக்கு முன்னோடி குச்சிக்கம்பு.(சென்னை மொழியில் கில்லிதாண்டா)

நாங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரே அணியில் ஆடினால் பெரியப் பசங்களே அலறுவார்கள்.(அப்படியொரு சர்ப்ரைஸ் காம்போ).அப்புறம் பெண்கள் கேட்கவே வேண்டாம் நாங்கள் இறங்கினால் ஆட்டத்தில் இருந்து விலகுவார்கள்.அதிலும் ஒரு விதிவிலக்கு தான் வெள்ளச்சி எங்களுடன் மோத விரும்புவாள்.

அப்படி ஒருநாள் எங்களை விளையாட்டுக்கு யாரும் சேர்க்காதக் கோவத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு சோகமாக நாங்கள் இருவரும் உக்கார்ந்து இருந்தோம்.

கோவத்தில் ஒருவன் - "டேய் இருங்கடா உங்க மாமா கிட்ட சொல்றேன்.."

கண்ணன் - "ஆமா நீ சொல்லி அஞ்சாறு ம....ச்சி"(அப்போ அந்த வார்த்தையைக் கூட கெட்ட வார்த்தையாக நினைத்தேன்..சென்னை வந்த ஒரே மாதத்தில் அதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையே இல்லை என்று ஆகி விட்டது.ராகத்தோடு ரைமிங்காக பேசுவேன்)

மாமா என்றாலே எனக்கு பயம்.இந்த பசங்களுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு அடி விழும்.பயத்தில் நான்.

"கண்ணா..உன்ன விட்டுருவாரு எனக்கு அடி விழும்..ரொம்ப பயமாயிருக்கு.."

அந்த சமயம் வெள்ளச்சி வந்து சேர்ந்தாள்..

"என்ன நீங்க ரெண்டு பெரும் இங்க உக்கார்ந்து இருக்கீங்க.."

"விளையாட யாருமேயில்லை.." - இது நான்

"சரி நான் வர்றேன்..விளையாடுவோமா.."

"வெள்ளச்சி விளையாடுறதிலப் பிரச்சனை இல்ல..நீ மட்டும் தான் இருக்க..நாங்க இரண்டு பேர்.." - நான் அவளைத் துரத்துவதிலே குறியாக இருந்தேன்.

"இரண்டு ஆட்டமும் நானே ஆடுறேன்.."

"வேண்டாம் வெள்ளச்சி..இன்னொரு நாள் விளையாடலாம்.."

கண்ணன் காதில் கிசுகிசுத்தான் - "கோழியே வந்து என்னை சாப்பிடுன்னு கத்துது..நீ கெடுத்துருவப் போல.."

"சரி எவ்வளவு பாயிண்ட்.." - நான் வெள்ளச்சியிடம் கேட்டேன்.

"ஐந்நூறு.."

டாஸ் போடுவதற்குக் கண்ணன் கல்லைத் தேடிக் கொண்டியிருந்தான்.(அந்த கல் ஒரு பக்கம் வெள்ளையாக இருக்கும்..இன்னொரு பக்கம் வேறு நிறத்தில் இருக்கும்)

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க முதல்ல விளையாடுங்க.." என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டேயிருந்தாள் வெள்ளச்சி

பொதுவாக பெண்கள் தான் முதலில் விளையாடுவார்கள்.அவர்கள் தோற்பது போல் இருந்தால் அசந்து இருக்கும் சமயம் வீட்டைப் பார்த்து ஓடி விடுவார்கள்.துரத்திப் பிடித்து தலையில் கொட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.(அது ஒரு தனி வழக்காக உருவாக்கப்படும்)

குச்சிக்கம்பு நேர்த்தியாக விளையாடுபவர்கள் தோற்றவர்களை முடிவில் அலைக்கழிப்பார்கள்.அது பாவம் பார்த்து விட்டால் தான் உண்டு.ஆட்டம் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.அலைக்கழிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும்.

அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.

கண்ணன் அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவள் புத்தகப்பையை வாங்கிக் கொண்டான்.

முதலில் நான் இறங்கினேன்.முதல் முறையாக டக் அவுட்.அதிர்ச்சி.கண்ணன் அடுத்து விளையாடினான்.பேரதிர்ச்சி.அவனும் டக் அவுட்.

அவளை ரொம்ப அலட்சியமாக எதிர்கொண்டது தான் காரணம்.(அக்தர் அறிமுகப் போட்டியில் டிராவிடையும்,சச்சினையும் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கினார்.)இன்னொரு காரணம் அவளுக்கு எதிராக நாங்கள் விளையாடியது அதுதான் முதல் முறை.

கண்ணன் - "டேய் என்ன அவகிட்ட வம்பு இழுத்திருவோமா..ஆட்டையக் கலச்சுருவோம்.."
"இரு பாக்கலாம்" - அவளையும் டக் அவுட் செய்து விடலாம் என்று நினைத்தேன்.இந்தியாவுக்கு எதிராக மட்டும் நன்றாக விளையாடும் வீரர்களைப் போல அவள் வெளுத்துக் கொண்டியிருந்தாள்.

"இன்னைக்கு நம்ம மானம் போகப் போவது உறுதி.."

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவள் நானூறு எடுத்து இருந்தாள்.இன்னும் நூறு தான்.அப்போது தான் அவள் விளையாடும் முறையை கவனித்தேன்.கம்பைத் தரையில் தேய்த்துக் கொண்டேயிருந்தாள்.லகான் படத்தில் வரும் பவுலரைப் போலக் குச்சியைக் கொஞ்சம் உயரமாக வீசினேன்.அவள் கம்பை அடித்தப் பிறகு குச்சி கீழே விழுந்ததால் அவள் அவுட்.இரண்டாவது நபருக்கு அவள் விளையாடினாள்.இந்த முறையும் அதே பாணியில் அவுட் செய்தேன்.

கண்ணன் அவள் பையைப் பத்திரமாக எடுத்து வைத்து கொண்டான்.நான் இறங்கி ஐநூறு பாயிண்ட் எடுத்து விட்டேன்.

கண்ணன் பையை என்னிடம் கொடுத்து விட்டு அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தான்.அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அழுது விடுவாள் போல இருந்தது.(இதற்கும் ஒரு வழக்கு வருமே என்று பயம் வேறு..)

"கண்ணா அவள விடு வீட்டுக்குப் போகலாம்..இந்தா எடுத்துக்கோ.." என்று பையை அவளிடம் கொடுத்தேன்.

"நீ அலைக்கலையா.." என்றவளிடம் "ரொம்ப நல்லா விளையாடின..அதுக்கு நான் தரும் மரியாதை" என்று சொன்னேன்.

அடுத்த இரண்டு வருடத்தில் நான் சென்னைக்கு வந்து விட்டேன்.சில வருடங்கள் கழித்து ஊருக்கு போனப் போது தாவணி எல்லாம் அணிந்து ஆளே மாறியிருந்தாள்.

அவள் வீட்டிற்கு போனேன்.பணியாரம் கொடுத்தாள்.சாப்பிடத் தொடங்கியவுடன் "இது கூட சரியா சாப்பிடத் தெரியல.." என்று கறுப்பாக இருந்ததை எல்லாம் எடுத்து விட்டு சாப்பிடத் தந்தாள்.

இரண்டு வருடம் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டேன்.காதல் தோல்வியாம்.அந்த பையன் இருக்கிறதிலே கேனை மாதிரி இருப்பான்.

அவள் இறந்தப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போனேன்.வீட்டை விட்டு வெளியே போகவில்லை.அவள் பேயாக அலைகிறாள் என்று வதந்தி வேறு.

மும்பை வந்த பிறகு ஒரு ஊர்காரனைப் பார்த்தேன்.அவள் சாவோடுப் போராடியக் கணங்களை விவரித்தான்.அன்று விளையாடிய ஆட்டம் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று எனக்கு இருந்த கருணை கூட அந்த முட்டாள் கடவுளுக்கு இல்லை.

பின்குறிப்பு :

கண்ணன் குடும்பத் தகராறில் எனக்கு எதிரியாக மாறி இருந்தான்.அவன் அப்பா ஒரு பேராசை பிடித்தவன்.அவன் யாருக்கோ வைத்த மின்சாரத்தில் கண்ணன் மாட்டிக் கொண்டு இறந்து விட்டான்.

13 comments:

இரும்புத்திரை said...

இது ஒரு மீள்ஸ்..இதுவரைக்கும் செய்ததில்லை..செய்யலைன்னா நான் (அந்த கெட்ட வார்த்தையை ஏன் சொல்லணும்) இல்லையாம்

நீ தொடு வானம் said...

முன்னாடி கொஞ்சம் ஒழுங்கா தான் இருந்தீங்களா.சமீப காலமா ஏன் இந்த மாற்றம்

வால்பையன் said...

சம்பவ கோர்வை நல்லாயிருக்கு!

ஆனா இம்மாதிரியான கதைகளில் முடிவும் ஏன் ஒரே மாதிரியா இருக்குன்னு தான் தெரியல!

கிருஷ்ண மூர்த்தி S said...

மீள்பதிவு செய்யாமலேயே இம்சை அரசனாக இருக்க எல்லாத் தகுதியும் இருக்கிறதே அரவிந்த்!

இதிலே அழிச்சாட்டியம் பண்ணினாத்தான் பிரபல பதிவராமா என்ற கேள்வி தனியாக எதற்கு என்பது தான் எனக்குப் புரியவில்லை!

:-)))

இரும்புத்திரை said...

வால் பையன் - புத்திசாலிகள் எல்லாம் முட்டார்களைத் தேடிப் பிடித்து காதலிக்கிறார்கள்.அதனால் தான் ஒரே முடிவு.

கணேஷ் - வால் பையனின் கேளுங்கள்.அவருக்கு தெரியும்.இரண்டாவது பதிவே எதிர்வினை தான்.

கிருஷ்ணமூர்த்தி ஐயா - மீள் பதிவுகளைத் தான் அப்படி சொன்னேன்.இந்த வழக்கத்தைப் பரவலாக ஆரம்பித்து வைத்தது தினமலர் அந்துமணி.படித்தது என்று தெரிந்தால் மேற்கொண்டு படிக்காமல் போய் விடுவோம்.இப்படி மீள்ஸ் எத்தனை முறை போட்டாலும் அலுக்காமல் இருப்பது சுஜாதா எழுத்தும் ஒன்று என்று நினைக்கிறேன்.அதனால் மீள்ஸ் என்றாலே அழிச்சாட்டியம் தான்.

அகல்விளக்கு said...

ரைட்டு....

ஃபுல் பார்ம்ல இருக்கீங்க தல...

அடிச்சு ஆடுங்க...

VJR said...

என்னமாதி மொத முறப்படிக்காதவங்களுக்கு இந்த அழிச்சாட்டியம் நல்லதுக்குத்தான்.

இன்னும் பல அழிச்சாட்டியத்தை எதிர்பார்த்து

கணேஷ்

ILA (a) இளா said...

புனைவுன்னு போட்டாலே எஸ்ஸாகிரனும் போல. கதையோ அனுபவமோ நல்லா இருக்கு. இதுல யாரு யாரு முடிச்சு போட்டிருக்குன்னு தெரியலையே :(

a said...

முதல் முறை பதிவிட்டபோதும் படித்தேன்... இப்போதும்...

ஆர்வா said...

//நாங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரே அணியில் ஆடினால் பெரியப் பசங்களே அலறுவார்கள்//


இப்ப மட்டும் என்ன.. பலபேர் அலறிகிட்டுதான் இருக்காங்க.. நைஸ் அர்விந்த்...

Unknown said...

ஏய் என்னப்பா பூரம் டெரரா இருக்கு! உங்க ஊர்காரவுக பூராம் அப்டித்தான ,suicide, current ஏன் இந்த கொலைவெறி ?

ILA (a) இளா said...

ஆனா ஒன்னுங்க. ரெண்டு வாரமா நீங்கதான் நட்சத்திரம் போல ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு.

மாலோலன் said...

dear Aravind
cool down ...:)- ரொம்ப டென்ஷன்னா ஒரு ஹவ்ட் 5000னையோ இல்ல கிங்க்ஃப்ஷ்ரையோ போட்டு நல்லா ரெஸ்டு எடுத்திட்டு ஃப்ரெஷா வாங்க!
மத்தபடி
""இப்படி மீள்ஸ் எத்தனை முறை போட்டாலும் அலுக்காமல் இருப்பது சுஜாதா எழுத்தும் ஒன்று(தான்) என்று நினைக்கிறேன்."""

இதனுடன் 200% அக்ரீ

சத்தீஷ்