Wednesday, July 21, 2010

மதனும்,சில ரகசியங்களும்

"அமர் ஒரு பொண்ணு கூடயாவது உனக்கு ஒழுங்கா பேசத் தெரியுமா.." மதன் எல்லார் முன்னாலும் நக்கலடித்து கொண்டிருந்தான். விஷயம் ஒன்றுமில்லை. ப்ளஸ் ஒன் பொண்ணு பக்கத்தில் அமர்ந்து தேர்வு எழுதும் போது அவள் சந்தேகம் அவளை கடித்து குதறியிருந்தேன். அந்த கோபத்தில் என்னை பிட் அடிக்க விடாமல் செய்து விட்டாள்.

"அப்படியே இருந்திட்டு போறேன்..உனக்கு எங்க வலிக்குது.." கோபத்தை குரலில் காட்டினேன்.பொதுவாக கேடித்தனம் செய்யும் போது ஸ்கெட்ச் போடுவது மட்டுமே என் வேலை. இன்னைக்கு பாத்து ஒரு வேலைக்கு ஸ்கெட்ச் போட்டிருந்தோம். செயல்படுத்தப் போவது மதன். அதனால் அவனை அடிக்காமல் விட்டிருந்தேன்.

ஜூவாலஜி லேப்பை இடமாற்றம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். எல்லோரும் கட்டாயம் வர வேண்டும் இல்லை மார்க்கில் கை வைப்பேன் என்று மிரட்டப்பட்டிருந்தோம். மதனும், நானும் போய் லேப் பக்கத்தில் இருந்த அறையில் வெட்டி நியாயம் பேசிக் கொண்டிருந்தோம். பழைய அலுமினி எவனோ அவன் சேர்த்திருந்த தபால் தலைகளை விட்டு விட்டுப் போயிருந்தான். வாத்தி எல்லோருக்கும் கொடுக்க சொல்லியிருந்தாலும் என்னுடைய பென்ச்சில் இருப்பவனே கொடுப்பதாக சொல்லி எல்லாம் அடித்திருந்தான். அவனிடமிருந்து அடிக்க நான் திட்டம் போட்டிருந்தேன். சந்தேகம் வராமலிருக்க வலிய ஒரு சண்டையை நானும்,மதனும் அரங்கேற்றியிருந்தோம்.

ப்ளான் ஏயின் படி மதன் அவனிடம் இல்லாத ஸ்டாம்புகளை எடுத்துக் கொண்டான்.இருவரும் பங்குப் பிரித்துக் கொண்டோம். பிளான் பியின் படி மதனிடமிருந்து நான் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். எப்படியும் மதன் மாட்டுவான் என்று உள்மனதில் ஏதோ சொல்ல நான் எல்லா ஸ்டாம்பையும் பெல்டைக் கிழித்து அதில் வைத்து விட்டேன்.

எதிர்பார்த்தது போலவே மதன் மாட்ட, நாங்கள் சண்டை போட்டிருந்த காரணத்தால் எவனும் என்னை கேட்கவில்லை. மதனை காப்பாத்த சுனா.பானா வடிவேல் மாதிரி பஞ்சாயத்து செய்து சாட்சியைக் கலைத்திருந்தோம். மதன் கொடுத்த ஸ்டாம்பில் பாதி கேட்க நான் முடியாது என்று மறுக்க போட்டும் தர முடியாத சூழ்நிலையில் அவனை கொண்டு நிறுத்தியிருந்தேன்.

தீடிரென விருகம்பாக்கத்தில் ஒரு வேலை. இருவரும் போயிருந்தோம். எனக்கு தெரிந்திருந்த ஆனால் பேசியிராத பெண்ணிடம் பேசி மதன் போட்டிருந்த பழியை நீக்க முடிவு செய்திருந்தேன். சந்தியா - அவளுக்காகவே தெருவில் கிரிக்கெட் ஆடுவோம். நான் அந்த ஏரியாவை விட்டு வந்ததிலிருந்து யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லையாம். அவள் வீட்டுப்பக்கம் போயிருந்தோம்.

"அமர் கிரிக்கெட் விளையாட வர்றீயா..சின்னப் பசங்களுக்குப் போடுவது மாதிரி மெதுவா போடுறேன்.." சந்தியா நக்கலடித்ததும் கூடயிருந்த கும்பலில் நிறைய பல் தெரிந்தது.

"விளையாடுவோம்.." மதன் பேசத் தொடங்கினான்.

"அவ நக்கல் உடுறா..நீ நேரம் காலந்தெரியா சாமியாடுற.." வந்த கோபத்தை அவனிடம் காட்டி விட்டு நேராக சந்தியாவிடம் போய் "போன வருஷத்திலிருந்து உன்னை எனக்கு பிடிக்கும்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கூடயிருந்த காயத்ரியை அனுப்பி தாத்தா பாட்டி யாராவது வருகிறார்களா என்று பார்க்க சொல்லியிருந்தாள்.

"அமர்..போயிரு..யாராவது பாத்தா வம்பு.."

"இன்னைக்கு கூட இங்க வந்ததே உன்னப் பாக்கத்தான்..உன் கூடப் பேச அரை மணி நேரமா இங்கேயே நிற்கிறேன் தெரியுமா.."

"என்ன பேசணும்.." வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு..நான்.." என்று இழுத்துக் கொண்டிருந்தேன்.

"சொல்லித் தொலை.."

"வந்து..எனக்கு.."

"சொல்லப் போறியா இல்லையா.." அடித்தொண்டையில் கத்தினாள்.

"வந்து எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும்..பசங்க யாருமில்லை..அதான் உன் வீட்டுல.."

"அய்யோ தாத்தா பாட்டி இருக்காங்க..அவங்க பாத்தா அவ்வளவு தான்.."

"அதெல்லாம் நான் கதவை மூடிக்கிட்டு தான் போவேன்..அப்புறம் எப்படி பாப்பாங்க.."

"அமர் நீ மாறவேயில்ல.." யாரும் பாக்காத நேரத்தில் லேசாக அடித்தாள்.

"டேய் எனக்கு இன்ட்ரோ கொடுடா.." மதன் கெஞ்சிக் கொண்டிருந்தான். கடைசி கொடுக்காமல் கழுத்தறுத்தேன்."சாவுடா..இது மாதிரி எத்தனை நாள் என்னை விட்டுட்டு கடலை வறுத்திருப்ப.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அது மட்டும் காரணமல்ல மதன் சேட்டுப் பையன் மாதிரியிருப்பதும் கூடுதல் காரணம்.

பஸ்ஸில் வந்துக் கொண்டிருந்தோம். தி.நகர் ஏரியாவில் பசங்களைத் தடவி சந்தோஷப்பட ஒரு கும்பலுண்டு. சுற்றி சாரதா வித்யாலயா,ஹோலி ஏன்சல்ஸ், கர்நாடகா வித்யாலயா,பர்கிட் ரோட் சாரதா வித்யாலயா என்று பெண்களிருந்தாலும் பசங்களை தடவி மகிழும் "அவனா நீயி" கூட்டம் ரொம்ப ஜாஸ்தி.

ஏற்கனவே பத்தாவதில் இது மாதிரி ஒரு அனுபவத்தில் சிக்கவிருந்து ஜஸ்ட் மிஸ் ஆனதாலும், சேலம் சித்த வைத்தியரின் விளம்பரத்தாலும் கலவரப்பட்டு அவனா நீயி பார்ட்டிகளிடம் கொஞ்சம் உஷாராகயிருப்போம். அப்படி ஒருத்தன் பஸ்ஸில் தடவ முயற்சிக்க மதனும் நானும் நடுவில் ஷூக்காலாலே சவட்டிக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் கொஞ்சம் பேர் கேட்கும்படியாக கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டே அடித்தோம்.

மதனிடம் சொல்லியிருந்தேன்.யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியது தான் கேடு. அடுத்த நாள் நான் பள்ளிக்கு போகும் முன் அது பரவியிருந்தது.

ஆனந்த் வந்து கேட்டே விட்டான். "நேத்து ஏதோ நடந்தாமே.."

"யாருடா சொன்னா.." மதனை பார்த்துக் கொண்டே கேட்டேன்.

"அது எப்படிடா மதனை விட்டு விட்டு உன்னை தடவ வந்தான்.."

"அதுக்கு ஆம்பிளைங்களைத் தான் பிடிக்குமாம்..அது எப்படி அதே இனத்தில் உள்ளவனைத் தடவும்.." சொன்னதும் டாபிக் மதனுக்கு மாற்றியிருந்தார்கள்.

ரெண்டு பேரும் பேசிக் கொள்ளாமல் இடத்தை மாற்றிக் கொண்டோம். அடுத்த நாள் கோல்டன் ஸ்பாங்கில்ஸ் டெஸ்ட் செய்ய கெமிஸ்ட்ரி லேப்பில் ஆசிட் மற்றும் சால்டைத் திருடியிருந்தோம்.கூடவே உபரியாக டெஸ்ட் டூப்.

வரும் வழியில் எப்போதும் வீடு வரைக்கும் சேர்ந்து போகும் எங்கள் தெருப் பெண் இருக்க நான் அவளை பார்க்காத மாதிரி மதனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"அந்த பொண்ணு உன்னப் பாக்குதுடா.."

"டேய் சப்ப பிகராயிருந்தா என்னை பாக்கும் என்று சொல்லுவியே..உனக்கு வேணா நீ பாரு.." என்று சொல்லி விட்டு நாளைக்கு பாப்போம் என்று அந்த பெண்ணிடம் கையாட்டி விட்டு மதன் வீட்டிற்கு போய் கோல்டன் ஸ்பாங்கில்ஸ் பார்த்து விட முடிவு செய்து எல்லாம் கலந்து விட்டு அடுப்பில் காட்டி விட்டு தண்ணீரில் முக்க வேண்டும்.அப்படி செய்யும் போது டெஸ்ட் டூப் வெடித்து விட்டது. களவாணி படத்தில் சிகரெட் கேட்கும் வாத்தியிடம் சிகரெட் இல்லை என்று பாக்கெட்டைத் தூக்கிப் போட்டு விட்டு அவர் போனதும் அதை விமல் எடுத்து வைத்து கொள்வார்.அது மாதிரி மதனிருக்கும் போது எந்த பெண்ணிடமும் பேச மாட்டேன்.

அடுத்த நாள் விசாரணை வளையத்தில் எங்களை சேர்த்திருந்தார்கள்.

"யாருடா..ஆசிட் திருடியது.."

"ஏண்டா மதன்..இப்படி பண்றே..சார் எவ்வளவு நல்லவர்..கேக்குறார்ல சொல்லு.."

"ஏண்டா அமர்..இப்படி பண்றே..நான் தான் உங்கூடப் பேசுறதேயில்லையே..ஏன் எம்மேல் பழியப் போடுற.."

"டேய் நடிக்காதீங்கடா..எல்லாம் எனக்குத் தெரியும்.."

"பாருடா சாருக்கே தெரியுமா..அவர் எப்படியும் நம்மள சேர்த்து வைப்பாரு..சேரலைன்னா கெஞ்சுவாரு..அவருக்காக உன்னை மன்னிக்கிறேன்.." மதன் ஆரம்பித்தான்.

"டேய் அடங்க மாட்டீங்களா..இன்னும்  இன்னும் என்ன என்ன திருடுனீங்க.."

"சார் உங்களுக்கு கோல்டன் ஸ்பாங்கில்ஸ் பண்ணத் தெரியலையேன்னு நான் டெஸ்ட் பண்ணினோம்.. உங்களை மிஞ்சிருவோம் சொல்லி எங்க மேல பழியப் போடாதீங்க.." அவரிடம் நான் சொல்ல.போக சொல்லி விட்டார்.

ஆனந்த் தான் போட்டுக் கொடுத்தான் என்று தெரிந்ததும் "இருடா அடுத்து ஆசிட் திருடி உன் மேல அடிக்கிறேன்.." என்று மதன் அவனை மிரட்டவே கொஞ்சம் அடங்கியிருந்தான்.

அடுத்த மாதம் நிஜமாக சண்டையிட்டு பேசாமலிருந்தோம்.கெமிஸ்ட்ரி வந்து "ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க..பேசுங்கடா..சாதீக், சந்தீப்.. நீங்களாவது சொல்லக்கூடாது.."

"அவங்க ரெண்டு பேரும் புதுசா வந்திருக்கிற மேக்ஸ் டீச்சரை யார் செட் அடிக்கிறதுன்னு சண்டப் போட்டிருக்காங்க..நீங்க வேற புரியாம பேசுறீங்க.." சாரிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

"பாருடா..மேக்ஸ் டீச்சர்னு சொன்னதும் சார் முகத்துல பல்ப் எரியுது.." நான் மதனிடம் சொல்ல

"இனிமே சார் கிட்ட நாம போட்டிப் போடக் கூடாது.. மதன் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டோம்.

"டேய் ஆர்கானிக் கெமிஸ்ட்ரில.." என்று கேள்வி கேக்க ஆரம்பிக்க நானும் மதனும் அடுத்த திட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். வழக்கம் போல வெளியே நின்றுக் கொண்டு தான்.அது பிசிக்ஸ் லேப்பில் மெர்க்குரி திருடப் போட்ட திட்டம். ஜூவாலஜி லேப்பில் மட்டும் தான் எதுவும் திருடவில்லை என்று பின்னாளில் மதன் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.

3 comments:

இரும்புத்திரை said...

சந்தீப்,சாதிக்,அமர்,மதன் எல்லாம் இன்று மலேஷியா, சிங்கப்பூர், லண்டன், துபாய் என்று செட்டிலாகி விட, கெமிஸ்ட்ரி சார் வீட்டுக்குப் பக்கத்தில் சாரு வந்து செட்டிலாகி விட்டார்.

நீ தொடு வானம் said...

சாரு இருக்கட்டும்.அந்த வட எப்போ வேணாலும் கவ்விக்கலாம்.இந்த அமர் எங்கே இருக்காக.

கண்ணன்.கா said...

continuity illa better luck next time