Friday, September 24, 2010

இரட்டை கொலை

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சண்டையில் எனக்கு உதடும்,குணாவுக்கு சட்டையும் கிழிந்திருந்தது. எதிர் கோஷ்டியில் அருணின் மூக்கை உடைத்திருந்தோம்.

"நம்ம ஏரியாவுல அடி வாங்குனது நெனச்சா தான் ரொம்ப வலிக்குதுடா மச்சான்.." என்று சொல்லிக் கொண்டே இரத்தத்தைத் துடைத்தேன்.

"புது சட்ட மச்சான்..இனிமே போடவே முடியாது..அவன எதாவது பண்ணனும்.." என்று குணா வன்மத்தோடு சொன்னான்.

"பொண்ணுங்க முன்னாடி இனிமே உதார் உடவே முடியாதுடா.."

"உதட்டுல இன்னும் இரத்தம் வருதுடா.. அவன பழிவாங்க ஒரு வழி இருக்குடா.." என்று துடைத்து விட்டப்படியே குணா எதோ சொல்லி கொண்டியிருந்தான்.

"எப்படி.."

"இனிமே அவன் ஏரியாவுக்குப் போய் விளையாடுவோம்.." என்று குணா சொல்ல

"இப்பத்தான் வாங்கியிருக்கோம்..ஆனந்த் என்ன இந்த கோலத்துல இருக்கிறத மட்டும் பாத்தான்..நீ,நான்,அவன் எல்லாரையும் அடிப்பான்.."

ஆனந்த் எங்களுக்கு ஆதர்ஷம்.அவன் இல்லாத தைரியத்தில் இந்த சண்டையை எங்களிடம் இழுத்து இருந்தார்கள். அவனுக்கு என்னிடம் ஒரு பாசம் உண்டு.எல்லோருமே அவனை "அண்ணா.." என்று கூப்பிடுவார்கள்.(குணா உட்பட.என்னை தவிர..)

"ஆனந்த் ஒரே ஒருநாள் நம்ம கூட வரட்டும்..யாருமே நம்மள ஒன்னும் கேட்க மாட்டாங்க..இனிமே அவன் ஏரியாவுல தான் விளையாடுறோம்..எப்படியாவது நாளைக்கு மட்டும் அவன கூட்டிட்டு வந்துரு.." என்று குணா சொல்ல.எனக்கும் அது பிடித்திருந்தது.

ஆனந்த் தயவுல ஆங்கே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தோம்.

"அவன வேற மாதிரி அடிக்கணும்..அதுக்கு ஒரு ஐடியா பண்ணியிருக்கேன்..அருணுக்கு ரெண்டு மாமா பொண்ணு. அதுல அக்காக்காரி அவன மதிக்கவே மாட்டா..நம்மளையும் தான்..அருணுக்கு ரெண்டாவது பொண்ணத்தான் ரொம்ப பிடிக்கும்..நீ சீதாவுக்கு கை ஆட்டுவியோ இல்ல கால ஆட்டுவியோ.. என்னோமோ பண்ணு..அதப் பாத்து அவன் சாவனும்.." குணாவின் கண்களில் கோபம் தெரிந்தது.

"நீ பண்ண வேண்டியது தானே.." என்று நான் சொல்லவும்.

"என் உதடா கிழிஞ்சுது..இப்போ சொல்லு..நான் சொல்றப்படி மட்டும் செய்..அது போதும்.." அவன் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தேன்.

குணா சொல்லிக் கொடுத்த மாதிரியே சீதா வந்தால் கை காட்டுவது,அவளோட கடைக்கு அருகில் நிற்பது(பீல்டிங் செய்ய),இன்னும் இதர வேலைகளையும் செய்தது வந்தேன்.

குணா இன்னும் ஒருப்படி மேலே போய் அவளைப் பார்ப்பதற்கு தான் நான் வருகிறேன் என்று யார் மூலமோ சீதாவிடம் சொல்லியிருக்கிறான்.

அதற்கு பிறகு நான் கை காட்டுகிறேனோ இல்லையோ அவள் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தையை வைத்து நாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்து கையாட்டி கொண்டிருப்பாள்.

அம்மா வரைக்கும் விஷயம் தெரிந்து போனது.

ஒருநாள் காய்கறி வாங்கிய விட்டு வரும் போது பாரம் தாங்காமல் பை அத்து விழ சீதா உதவியிருக்கிறாள்.

"நல்ல பொண்ணு.." என்று சொன்ன அம்மாவைப் பார்த்து கூட இருந்த பெண் சொல்லிய வார்த்தைகள் "இரண்டு பையன் வைச்சுயிருக்கீங்க..அதான் ஓடி ஓடி உதவி செய்யுது.."

வீட்டில் வந்து விசாரித்தப் போதும் எப்படியோ சமாளித்து விட்டேன்.

அருணும் எங்களுடன் பேச ஆரம்பித்தியிருந்தான்.நானும் நடந்ததை மறந்து இருந்தேன்.ரொம்ப நாள் களைத்து குணா இல்லாத நேரம் வந்து என்னிடம் "சீதாவை நான் லவ் பண்றேன் விட்டுரு மச்சான்.." என்று சொன்னவனிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்து விட்டேன்.

சீதாவை தவிர்க்க தொடங்கினேன்.பீல்டிங் செய்வதை நிறுத்தி விட்டு கீப்பிங் செய்ய ஆரம்பித்தேன்.சீதா வந்து குணாவிடம் அழவே..குணா நியாயம் கேட்டான்.

"அவளுக்கு என்னடா குறைச்சல் அக்கா தங்கச்சியோட பொறந்து இருந்தா தானே உனக்கு ஒரு பொண்ணோட அருமை தெரியும் அவள நடத்துர மாதிரி தான் உங்க அம்மாகிட்டையும் மரியாதை இல்லாம நடப்ப" குணா சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டையை பிடித்து இருந்தேன்.

"கிடைக்கு ரெண்டு ஆடு கிடைச்சா நரி கூட நாட்டாமை பண்ணும் அது மாதிரி அவ கடையில வாங்கி குடிக்கிற ஓசி டீக்கு என்ன அடமானம் வைக்க பாக்குறியா "

"இப்படி எல்லாம் நடக்கும் எனக்கு முன்னாலே தெரியும் " சட்டையை என் பிடியில் விடுவித்து கொண்டே குணா சொன்னான் .

"என்ன தெரியும் உன் சட்டையை பிடிப்பேன்னா ?"

"இல்ல அவள நீ லவ் பண்றத சொன்னேன் " என்று அவன் சட்டையை திரும்ப பிடிக்க முடியாத தூரத்தில் இருந்து சொன்னான் .

"சீதாவை அருண் கல்யாணம் செய்யட்டும்.." என்று சொல்லியவனைப் பார்த்து குணா சிரித்தான்.

"டேய் அவன் நல்லவன் இல்லடா..நல்லவன் மாதிரி நடிக்கிறான்..அவனுக்காக விட்டு கொடுக்காத..அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி.."

குணா சொல்வதை காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

அருணுடன் போன இடத்தில் ஒரு பிரச்சனை வர,வேறு வழியில்லாமல் ஒளிய வேண்டிய சூழ்நிலை.இந்த சந்தர்ப்பத்தில் ஆனந்திடம் அருண் நெருங்கியிருந்தான். அந்த ஊரையையே காலி செய்திருந்தோம்.

பத்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் வழியாக போகும் போது குணாவை சந்தித்தேன்.

சீதாவை பற்றி மட்டும் விசாரிக்கவில்லை.

"ஆனந்தை கொன்று விட்டார்கள்.." என்று சொல்லி அழுதான்.

"எப்படி மச்சான்.." என்றேன் அதிர்ச்சியுடன்

"கூட இருந்தே காட்டி கொடுத்துட்டாங்க..அவன் சாவுக்கு காரணமான ஒருத்தனையும் விடல..போட்டுத் தள்ளிட்டோம்..நீ இருக்க வேண்டிய இடத்துல இப்போ நான்.." என்று சொன்னவனைக் கட்டிப் பிடித்து அழுதேன்.

"மச்சான் ஒரு விஷயம் சொல்லணும்.." என்று குணா ஆரம்பிக்கவும்

"சீதாவைப் பத்தியா..வேணாம் தெரியாமலே இருக்கட்டும்.." என்று கண்களைத் துடைத்தப்படியே சொன்னேன்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம்.

"மச்சான் இப்போ வந்துறேன்.." என்று எங்கோ போய் விட்டான்.அப்போது தான் கவனித்தேன். மொபைலை விட்டு விட்டு போயிருந்தான்.

மொபைலில் ஒரு அழைப்பு வரவும் குணாவைத் தேடி கொண்டிருந்தேன். அவன் வரவேயில்லை.கட் செய்ய மொபைலை எடுத்தால் சீதாவின் படம் போட்டு "வைப்" என்று டிஸ்ப்ளேவில் தெரிந்தது.

குணா வருவது போல தெரியவும் ஒன்றுமே தெரியாதது போய் நடந்து கொண்டேன்.

"மச்சான் என்னை மன்னிச்சிரு..இதுலையும் நீ இருக்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன்..அருண் தாண்டா நம்ம ஆனந்த கொன்னது..சீதா கல்யாணத்து அன்னைக்கு தான் தெரிஞ்சது..புல்லா தண்ணிய ஊத்தி விட்டு தண்ணியிலே முக்கி நாந்தான் அவன கொன்னேன்..சீதாவ ரெண்டு வருசத்து முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டேன்..உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..என்னை மன்னிச்சிரு.." இன்னும் என்னமோ புலம்பி கொண்டே வந்தான்.

"என்ன பார்த்தத சீதா கிட்ட சொல்ல வேண்டாம்..நான் தொலைஞ்சி போனவன்..அப்படியே இருக்கிறேன்.." என்று அவனிடம் அவன் மொபைல் நம்பரைக் கூட வாங்காமல் நடக்கத் தொடங்கினேன் கால்(மனம்) போன போக்கில்.

2 comments:

நீ தொடு வானம் said...

சவால் சிறுகதை வருமா

இரும்புத்திரை said...

இன்னைக்கு ரீலிஸ்