Monday, August 3, 2009

நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம்

ஒரு சனிகிழமை என் அறையில் இருந்து செம்பூருக்கு செல்கையில் என் அம்மாவுடம் பேசி கொண்டிருந்தேன்.பள்ளிகளில் இருந்து குழந்தைகள் போய் கொண்டு இருந்தார்கள். ஒரே இரைச்சலாக இருந்தது. என்ன என்று எதிர்முனையில் கேட்கவும் "கன்றுக்குட்டிகள் போகிறது" என்று சொன்னேன்.

" பாத்து போ மாடு வந்து விட போகிறது" - இது அம்மா.

"எருமமாடு தான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கே" என்று நான் சொல்லவும்.அம்மா புரியாமல் விழிக்க நான் சின்ன குழந்தைகளை கன்றுக்குட்டிகள் என்று சொன்னதை விளக்கினேன்.

நீ கூட எனக்கு ஒரு கன்றுகுட்டி தான் என்று அம்மா சொல்ல அது வேண்டுமானால் உண்மைதான் ஒரு காலத்தில் என்று நினைத்து கொண்டேன்.

காரணம் நான் கல்லூரி நான்காம் ஆண்டு முடிக்கும் வரை என் அம்மாதான் எனக்கு ஊட்டி விடுவார்கள். நான் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல கல்லூரிக்கு போகும் அவசரத்தில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பேன். என் அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து சாப்பாடு கொடுப்பார்கள். என் தம்பிக்கு கூட கிடைக்காத அன்பு. (அவனுக்கு அவனை பார்த்து கொள்ள தெரியுமாம்).

நான் நண்பர்களிடம் பேசும் பொழுது அடிக்கடி சொல்லும் வார்த்தை."நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் " என்பது தான்.

வேலை,பெண்கள் என்று ஒரு கவலையும் கிடையாது.பணம் பற்றிய பயமோ ,நிர்பந்தமோ எனக்கு 21 வயது வரை கிடையாது.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்ததால் என்ன பிரச்சினை வந்தாலும் முதலில் நிற்பேன்.பல தடவைகள் அடிகளை வாங்கியும் சில சமயம் கொடுத்ததும் இருக்கிறேன். இன்று முன்னால் செல்லும் தைரியத்தை தொலைத்து விட்டேன். (இப்போ சண்டை என்றால் போக்கிரி வடிவேலு ஐயோ சண்டையா என்று முதலில் ஓடி ஒளிகிறேன்)

குழந்தைகளிடம் வன்மங்கள் வளர வாய்ப்பு கம்மி.

என் பள்ளி நண்பர்களின் ஜாதி இன்று வரை எனக்கு தெரியாது. கல்லூரி நண்பர்களின் ஜாதி தெரியும்.(வளர்ந்து தொலைப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது)

இன்று மும்பை ரயில்களில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் கூடவே பயமும் பயணிக்கிறது. இதுவே பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லையில் நடந்த முக்கியப்புள்ளி படுகொலையின் நடந்த கடையடைப்பின் பொழுதும், கலவரத்தின் பொழுதும் சாலையோரம் இருந்த பூக்கடையில் தூங்கினேன் பயம் இல்லாமல்.

சின்ன வயதில் அன்று ஈன்ற ஆட்டுக்குட்டிகளையும், பொறித்த கோழிக்குஞ்சுகளையும் தொட்டு பார்த்து மகிழ்ந்த குழந்தை உள்ளம் இன்று ஆட்டுக்குட்டிகளையும், கோழிக்குஞ்சுகளையும் பார்த்தால் திரும்புமா என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

இந்த பதிவை எழுதிய பிறகும் முணுமுணுக்கிறேன் "நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் " என்று .


"நான் குழந்தை மனதைத் தொலைத்துப் பல வருடங்கள் ஆயிற்று என்று.. என்ன செய்ய விதி வலியது.." என்று போன பதிவில் என் தம்பி எழுதிய பின்னுட்டத்தை பார்த்த பிறகு எழுதிய பதிவு.

5 comments:

PPattian said...

சுவையாக எழுதியுள்ளீர்கள்.. நிஜம்தான்..நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம்

ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்தாக "Financial Freedom" அவ்வளவா இல்லாமல் வளர்ந்தவர்களுக்கும் கண்டிப்பான பெர்றோரிடம் வளர்ந்தவர்களுக்கும் குழந்தைப் பருவம் கொஞ்சம் கசப்பாகவும் இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஒவ்வொரு பருவம் பிடிக்கும்.. சிலருக்கு ஆரம்பப்பள்ளி, சிலருக்கு ஹைஸ்கூல், சிலருக்கு கல்லூரி, சிலருக்கு முதல் வேலை என...

அன்புடன் அருணா said...

குழந்தையாய் இருப்பதில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லைதான்!

வில்லங்கம் said...

மும்பை இரயில் பயணம் என்பது ஒரு சாகச பயணம் என்பது நம்மூரில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.... சாரு கூட சொல்லிருக்காப்டி.... உலகில் மிகவும் மோசமான, கஷ்டமான செயல் மும்பை மின்சார இரயில் பயணம்... பெண்ட நிமித்திடுவாய்ங்க !!!

Unknown said...

குழந்தை மனதுடைய என் தோழியை வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது எனது தந்தை என்னைக் குமுறு குமுறு என்று குமுறினார் .. குழந்தை மனதை எனக்கு முன் தொலைத்தவர் அல்லவா.. என்றும் நீ குழந்தை தான் என்று சொல்லும் என் தந்தைக்கு அன்று நான் குழந்தையாய் தெரியவில்லை ஒரு வயது வந்த வாலிபனாய் தெரிந்தேன் போலும்.. இனி நமக்கு குழந்தையாய் மாற வாய்ப்பில்லை.. முடிந்தவரை குழந்தை மனதுடன் வாழ முயற்சிப்போம்..

இரும்புத்திரை said...

nandri PPattian

nandri aruna

nandri jk

nandri cibi