Friday, January 29, 2010

நிர்வாண முகம்

திரும்பவும் அவள். கனவு மாதிரியும் தெரியவில்லை.அதுவும் குறிப்பாக சலனமற்ற அவளின் ஒரு பக்க முகம் கோபத்தை விட வேறு எதையோ தூண்டுவதாகயிருந்தது.அவள் பார்வையில் இருந்து விலகி என்னில்,என்னுள் அவள் விலகாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் அழகாகியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

யாருக்காக காத்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு எரிச்சல் காரணம் வெயிலாக இருக்குமோ என்று சூரியனை முறைத்தால் அதிகம் சுட்டது.காற்றில் கூட அனல் வீசியது.கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் தெளித்து கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருப்பது தெரிந்தது காரணம் வந்தவனுடன் ஒரு பெண்ணுமிருந்தாள்.அவள் கண்களில் என் முகம் தெரியுமளவிற்கு பார்வைகள் பரிவர்த்தனை நடத்தாதே என்று அவள் கவனிக்காத சமயம் காதில் அவன் சொன்னான்.

ரேகா என்று யாரோ என் பின்னால் இருந்தபடி கூப்பிட திரும்பியவள் கண்களில் கண நேர அதிர்ச்சி தெரிந்தது.எப்படி மறைவது என்று தெரியாமல் சிலையாகிருந்தேன்.

ரேகா....................அவன் சொன்ன குட்டிப் புராணத்தில் பெயர் தவிர ஒன்றும் கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து போயிருந்தேன்.காரணம் தெரிந்த புராணத்தைத் தெரிந்து என்ன பிரயோஜனம்.

ரேகாவும் நடுத்தரமும் கதை பேச தொடங்க,அவள் காதையும் வாயையும் அவளுக்கு கொடுத்து விட்டு கண்களால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள்."போ..போ.." என்று கெஞ்சுவது போலிருந்ததால் இன்னும் கெஞ்சட்டுமே என்று போக மனமில்லாமல் நின்றேன்.

ரேகாவை பார்த்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டேயிருந்தோம்.சாலையின் அடர்த்தி அதிகமாக தொடங்கியது.அறுவை தாங்க முடியாமல் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் அவளை பார்க்க, கண்கள் விரிய "இன்னும் கொஞ்ச நேரம்.." கண்களால் கொஞ்சினாள். இன்னொரு முறை கொஞ்சலுக்கு இடம் கொடுக்காமல் கதற கதற அவன் அறுவையை பொறுத்துக் கொண்டேன்.

"முகமே சரியில்லையே..யாரு தெரிந்தவனா.." என்று நடுத்தரம் கேட்க முதலில் திடுக்கிட்டாலும் "இல்ல..தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது.." சமாளித்து விட்டாள்.நடுத்தரம் தான் நம்பியது போல் தெரியவில்லை.மாமியார்காரியாக இருக்கும்.அவர்களின் மாமியாரும் இதே கேள்வியை கேட்டிருக்கலாம்.

"ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா.." அவன் கேள்வியில் ஏமாற்றம் தெரிந்தது."பரவாயில்ல..அறிமுகம் செய்ய வேண்டியது மிச்சம்..ரொம்ப ராவிட்ட மாதிரி தெரியுது.." கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.இப்போ ரேகா முறை எப்படி சந்தித்தோம்.எப்படி எல்லாம் காதல் சொன்னேன் என்று அவள் பங்கிற்கு பழிக்கு பழியாக அறுக்க தொடங்கினாள்.அவனுக்கு தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை.எப்படி வரும்.எனக்கு இப்படி ஒரு தேவதையா என்ற சந்தேகமாகயிருக்கும்.

போன் பண்ணியிருப்பாள் போல .பத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்.சாப்பிடாமல் தண்ணியடித்தது மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இன்னும் ஞாபகபிருக்கிறதா யோசிப்பதற்குள் திரும்ப அழைத்து விட்டாள்."இன்னும் நம்பர் மாத்தலையா.." முதலில் கேள்வி சம்பிரதாயமாக ஆரம்பித்தது."நீ வாங்கி கொடுத்தது தானே..அதான் மாத்தல" அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்."டோன்ட் மீ சில்லி..அண்ட் டோன்ட் எவர் ட்ரை டூ கிரியேட் சீன்.." கோபம் கூட இங்கீலிஸ் பேசுனா தான் வரும் போல என்று நினைத்து கொண்டேன்.பிறகு அவளே சமாதானாமாகி "இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா என் மாமி கிட்ட மாட்டியிருப்பேன்..நான் வர்றேன்..".சமாதானம் தமிழில் செய்தாள். என்னோடு சேர்த்து தமிழும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

ஏர்டெல் ஜோடி கார்ட் வாங்கி தந்தாள்."கூட்டுத் தொகை உன் சைஸ் சொல்லுது.." என்று சொன்னவுடம் "இப்படி கூட்டி கழித்து பார் செருப்பு சைஸ் வரும்.." சொல்லி விட்டு அவளே சிரித்தாள்.அவள் கோபம் கானல் நீர் போல மறைந்தது.எல்லா செலவும் அவளே செய்வாள்."நீ கொடுத்து வைச்சவன்.." யாராவது சொல்லும் போது கடைவாய் வரை நீண்ட சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருந்தது.

அதே கடைவாய் சிரிப்பு பட்டம் தான் மாறி விட்டது."இளிச்சவாயன்.." என்று.வந்தவளை முழுதாக பார்த்தேன்.மூக்குத்தி குத்தியிருந்தாள்.இன்னும் அழகாகத் தெரிந்தது அழுக்கு அறை.எடுத்தவுடம் மூக்குத்தியைப் பற்றி அவளே சொன்னாள்.அவனுக்கு பிடிக்குமாம்."பெரிய பெண்ணாகி விட்டாய்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"மூக்குத்தி போட்டுக் கொள்..அழகாகயிருக்கும்.." வற்புறுத்தினாள் கூட மறுத்து விடுவாள்."பெரிய பெண் மாதிரி தெரிவேன்.." காரணம் கூட மெலிதாகயிருக்கும்.

கொஞ்சம் அதிகமாகவே பதற்றப்பட்டாள்.போனில் அவனாகயிருக்கும்.கொஞ்ச நேரத்தையும் யாராவது இப்படி கெடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்."சரி கண்ணம்மா.." என்பது மட்டும் கேட்டது.பிடிக்காத வார்த்தைகள் மட்டும் காதில் விழுவதேன்.பாரதி போல அவளுடைய அவனும் செத்து போனால் எப்படி இருக்கும் யோசிக்கும் போதே மனது இனித்தது.

"கண்ணம்மா.." கூப்பிட்டால் போச்சு கோபத்தில் பொறிவாள்."கால் மீ ரேகா.." காரணம் அப்படி கூப்பிட்ட பாரதி முப்பதுகளின் தொடக்கத்திலே இறந்து விட்டானாம்.

மடியில் படுத்திருந்தேன்.முத்தம் கொடுக்க முகத்தை நோக்கி முன்னேறினேன்.முகத்தை திருப்பி கொண்டாள் வலுக்கட்டாயமாகத் திருப்பியவுடன் உதட்டை மடித்திருந்தாள்."நான் இப்போ வேறொருத்தன் பொண்டாட்டி..தே... இல்ல..".எனக்கு எப்படி தெரியும் அடுத்தவன் பொண்டாட்டியோ தே...யோ இப்படித்தான் இருப்பாள் என.

உதட்டை குவித்து வைத்து கொண்டு "முத்தமிடேன் முட்டாளே.." சொல்லும் போதே உள்ளுக்குள் ஏதோ கிறங்கும்.அது தாங்க முடியாமல் "ஐட்டம் மாதிரி செய்யாதே.." தெரியாமல் வந்து விட்டது."அங்க எல்லாம் நீ போவியா.." என்று சண்டை.சமாதானம் செய்யவே கொஞ்ச நேரம் ஆனது.முத்தமிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

"இனிமே நான் இங்க வர மாட்டேன்..ஏதோ என்னால் தான் இப்படி இருக்கிறாய் என்று வந்தேன்..இது தான் கடைசி..என்னை தொல்லை பண்ணாதே..ப்ளீஸ்..இனிமே என்ன பாக்க வராதே.." அழுதவளை அணைத்து கைகளை சற்றே மேய விட்டேன்."ஆடைகளை அவிழ்க்காமல் என்ன வேண்டுமானாலும் செய்.." சொன்னதும் அசிங்கத்தை மிதித்தவனாய் அவள் நிர்வாண முகத்தில் கை வைத்து தள்ளினேன்.

எல்லாம் முடிந்திருந்த காலம்.அவ்வளவு நெருக்கம்.ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது.ஒருநாள் அப்பா,அம்மா,நாய்க்குட்டி கதை.அழுத்தி கேட்டேன்."நான் காதலிக்க தான் லாயக்காம்..கல்யாணத்திற்கு இல்லையாம்.." எங்கே கை வைத்தேன் என்று தெரியவில்லை.கோபத்தில் கண் மண் தெரியவில்லை.

அவள் இருக்கும் போதே ஏமாற்றத்தில் கையை அறுத்து கொண்டேன்."செத்து தொலை..ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்.." என்று கத்தினாள்.முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..

வேகமாக பைக் ஓட்டி லாரியில் மோதி இரத்தமிழந்து சில பல எலும்புகள் உடைந்து ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தேன்.வந்தவள் நிறைய அழுதாள்.எனக்காக ஒருத்தி அழும் போது சந்தோஷமாகயிருந்தது."வீணை அறுந்த உணர்வு.." என்றாள்.இன்னொரு முறை இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.எந்திரிக்க முடியவில்லை பின் எங்கிருந்து இறக்க முடியாமல் மடங்கினேன்.

பிழைத்தால் அவளை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.வீணை,அறுந்த தந்தி,பாரதி,கண்ணம்மா,தே..முத்தம்.ஐட்டம், ஸ்கார்ப் என்று கண்டபடி நினைவு ஓடி அறுந்து விடும் போலிருந்தது.

நாலாவது நாள் கல்யாணப் பத்திரிக்கை வைத்து கருணை கொலை செய்தாள்.வேறு வீணை கிடைத்து விட்டது போலும் நினைத்தவுடன் மயங்கி போனேன்.

பிழைத்தால் அவளை கொன்ற கதை சொல்கிறேன்

மயக்கத்தில் இருந்த மீண்டால் புது வீணை எப்படியிருந்தது என்று சொல்லவும்.

பின் குறிப்பு : இப்படி ஆன நான் அப்ப எப்படி இருந்தேன் பாருங்கள்.

நானும் ஒரு ரவுடி தான் என்று ஒத்துக் கொள்வீர்கள் தானே.இந்த கதையைப் படிக்காமல் போன ஃபாலோயரை நினைத்து வருத்தம் அடைகிறேன்.

ஜெகநாதனுக்கும்,கென்னுக்கும்,அபய் தியோலுக்கும்,அனுராக் காஷ்யப்பிற்கும் சமர்ப்பிக்கிறேன்.

9 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா ஒரு சுஜாதாவை படித்த அனுபவம் வந்தது ....நீ வீரன் தான்

லோகு said...

கதை அட்டகாசம்னா..
இதை இதை இதைதான் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்.

மோனி said...

அற்புதம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியவில்லை..
ஆகவே
அற்புதமோ அற்புதம் ...

Nathanjagk said...

காரணம் கூட மெலிதாகயிருக்கும்;
ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது;
"செத்து தொலை.. .... " முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..
முதலிய வரிகளை மிகவும் ரசித்தேன்.
​நையாண்டித்தனமான டிஸ்கிதான் என்னவோ மாதிரியிருக்கு!
ம்.. பரவாயில்ல. மொக்கையிலிருந்துதானே இலக்கியம் பிறக்குது!
இந்த அரவிந்த் தரிசனம் புதுசு.. பிரமிப்பாவும் இருக்கு!

கதை எழுதும்​போது நாம தர்மகர்த்தாவா நினைச்சு எழுதக்கூடாது.. எழுதறவன் கதைகர்த்தா.. கதையை சுவாரஸியமாக்க யாரை ​வேண்டுமானாலும் எதை ​வேண்டுமானாலும் போட்டுத்தாக்கணும்.

ஒரு கதையில் வருகிற மிக மோசமான வில்லன் யார் தெரியுமா? கதாசிரியன்தான்!

இதை இங்கு​சொல்லக் காரணம்.. அரவிந்த் கதைகள் சிலவற்றில் தன்னிலை சார்ந்த, சுயபச்சாதாபம் கூடிய வரிகளாய் ​தென்படுது அதுக்குதான்.

உங்களுக்கு தெரியாததில்ல. ஆல் தி ​பெஸ்ட்!

Baski.. said...

கலக்கிட்டீங்க அரவிந்த்....

♥Manny♥ said...

Nice story theme...Best wishes to you..Expecting a lot from you like this...

மணிஜி said...

அலைபாயுதே உத்தி தெரியுது!! நல்லாயிருக்கு.

Unknown said...

ஹ்ம்ம்... ரெண்டாவது தடவ படிக்கும் போது தான் புரிஞ்சது ...,

Ken said...

"ஜெகநாதனுக்கும்,கென்னுக்கும்,அபய் தியோலுக்கும்,அனுராக் காஷ்யப்பிற்கும் சமர்ப்பிக்கிறேன். "

நீங்க ஏற்கனவே பெரிய ரவுடிதானே , எனக்கும் சமர்ப்பணம் எல்லாம் பண்ணி என்னமோ போங்க :) நன்றி

கதை நல்லாயிருக்கு :)