Wednesday, April 14, 2021

மாரி செல்வராஜின் (கர்ணனின்) களவாணித்தனம்

கெட்டிக்காரன் புளூகு ரொம்ப நாள் தாங்காது என்று சொலவடை உண்டு. அதற்கு உதாரணம் தான் மாரி செல்வராஜ்.

கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் சொல்ல முயன்ற கதை என்ன ஊருக்கு பஸ் வர வேண்டும். வெவ்வெறு ஊர்களுக்குச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். அதை செயல்படுத்த விடாமல் ஆதிக்கம் செலுத்தும் சாதிக்காரர்கள் தடுக்கிறார்கள். ஆதை மீறி அதை எந்த வழியில் அதை அடைந்தார்கள் என்பதே.

பரியேறும் பெருமாள் படம் வெளி வந்திருந்த நேரம். அதை சிலாகித்து பேசிய தூத்துக்குடி / நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நண்பரிடம் அந்த படம் பேசும் சமரசம் எல்லாம் உண்மையில் சாத்தியமில்லை என்று சொன்னதும், என்ன அருமையாக படம் எடுத்திருக்கிறார் அதை சாத்தியமில்லை என்று எப்படி சொல்லாம் என்று கடும் விவாதம் நடந்தது. உண்மையைச் சொல்லுங்கள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தப் பெண் அதுவும் வசதியான வீட்டுப் பெண்ணுக்கு மிக நன்றாகவே தெரியும் எந்த சாதிப் பையனிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்று. அவர்கள் கையில் கட்டியிருக்கும் நிறக் கயிறுகளே அதற்கு சாட்சி. நீங்கள் நிறக் கயிறுகளைக் கடந்து வந்தது உண்டா இல்லையா என்றும். உதாரணமாக அப்போது நடக்கவிருந்த சாதி மறுப்புத் திருமணமும், அதனால் நடந்த ஒரு கொலையயும் சொன்னேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நல்ல உத்தியோகத்திலிருக்கும் பையனுக்கும், மிகவும் பிற்ப்படுத்தப் பட்ட பெண்ணிற்கும் காதல். வீட்டில் ஒத்துக் கொண்டார்கள். நிச்சயதார்த்ததிற்கு கொஞ்ச நாள் முன் பையன் கொல்லப்படுகிறார். கொன்றது பள்ளியில் படிக்கும் அந்த பெண்ணின் தம்பி. கொன்று விட்டு பள்ளிக்கும் சென்று விட்டார். பிறகு விசாரணையில் சிக்கியவர்களில் மூவர் மைனர். பிற்ப்படுத்தப் பட்ட (அதாவது பெண்ணை விட மேல் சாதியில் (அர்சாங்கத்தின் அடுக்கின்படி) பிறந்தவருக்கே இது தான் நிலை. இதில் பெண்ணின் அப்பா வந்து நீயும் என் பொண்ணை விரும்புகிறாயா என்று பரியனிடம் கேட்பாராம். இதெல்லாம் நடக்கக் கூடியதா. அப்படியே நடந்தாலும் மாரி செல்வராஜின் கனவில் உருவான நெல்லையில் தான் நடக்க முடியும்.நிறைவேறாத காதல்களை எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் அந்த பெண்கள் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்தார் என்று எழுதுவார்கள் என்று சொன்னவுடன் உங்களுக்கு எல்லாம் ஒடுக்கப்பட்டவர் எடுத்த இந்த படம் எல்லாம் புரியாது. அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவனையே அப்படி விமர்சனம் செய்தவர் தானே நீங்கள் என்றார்.

(மாரி செல்வராஜை நிறைய பேருக்கு இன்றைக்குத் தான் தெரியும். அவரை எனக்கு காட்சி ப்ளாக்ஸ்பாட்டில் எழுதிய போதே தெரியும். 2010ம் ஆண்டு கூகிள் பஸ்ஸில் ஒரு விவாத்தத்தின் போது ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்ப்பார்கள் என்று சொல்லியிருக்கிறேன்.


2011லில் அவர் எழுதிய இது இன்னொரு புதன் கிழமை அவ்வளவு தான் (அந்த கதையின் சாரம்சம் என்ன தெரியமா. ஓடுக்கப்பட்ட சாதி குடுப்பத்துடன் பழகும் மேல் சாதிப் பையன். இந்த கதையில் ஒடுக்கப்பட்ட சாதி - சக்கிலியன், மேல்சாதி - பள்ளன். அந்த குடும்பத்துப் பெண்ணை இணைத்து அவதூறு பேசியதற்கு அவன் தற்கொலை செய்து கொள்வான். ஆகா இந்த சாதி அடுக்கின் நிலையை என்ன அழகாக சொல்லிவிட்டார் என்றும், மாரி செல்வராஜ் எல்லாம் சினிமா எடுத்தால் உண்மைக்கு பக்கத்தில் வந்து விடும் என்று சிலாகித்து தள்ளியிருக்கிறேன்.) என்று சிறுகதை தொடுப்பை எடுத்து கூகிள் ப்ளஸில் கொடுத்து "இந்த பையனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மூன்று சினிமாக்களை கொடுப்பார் என்றும், ராமிடம் நடந்த விவாதத்தின் போதும் மாரி செல்வராஜ் மாதிரி இயக்குனர்கள் உருவாக்குங்கள் என்றே சொல்லியிருக்கிறேன்.)

அந்த சிறுகதையில் நான் ஏமாந்தது போல நீங்கள் பரியேறும் பெருமாளில் ஏமாந்து இருக்கிறீர்கள் என்று அவரிடன் சொல்லி விட்டு விவாதத்தை முடித்து விட்டேன்.

கர்ணனிற்கு வருவோம். கொடியன் குளத்தை பொடியன் குளம் என்று மாற்ற தெரிந்த மாரி செல்வராஜிற்கு 1995லில் தான் கொடியங்குளம் கலவரம் நடந்தது என்று தெரியாதா ?. மிக நிச்சயமாய் தெரியும். பரியேறும் பெருமாளில் கலைஞர் படத்தின் மீது தாமிரபரணியில் இறந்தவர்கள் அஞ்சலி போஸ்டரை ஒட்டுவார் நாயகன். அந்த அளவிற்கு அறிவும் தெளிவும் உண்டு.

அவர் சொந்த ஊரான புளியங்குளத்தில் நடந்ததது தான் பஸ்ஸில் கல் எறிந்தது. செய்திங்கநல்லூர் காவல் நிலையத்தை தாக்கியதும் அவர் ஊர்க்காரர்கள் தான். காரணம் குடும்பனை அடித்து விட்டார்கள். என்ன தீர்வு கண்டார்கள் தெரியுமா. காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன் ஊர்பெரியவர்களிடன் சொல்ல வேண்டும். அவர்களே பிரச்சனை செய்தவர்களை ஒப்படைப்பார்கள். ஒத்து வரவில்லை என்றால் காவல் துறை ஊருக்குள் வரும்.

கொடியன் குளம் கலவரத்திற்கு காரணம் என்ன?. பஸ்ஸில் நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் நடந்த மோதல் சாதிக் கலவரமாக பற்றி எரிய தொடங்கியது. ஆதிக்கம் செலுத்தும் தேவர் சாதியில் உயிர் இழப்பும், பள்ளர்களுக்குப் பொருள் இழப்பும் எற்பட்டது. கொடியன் குளத்தின் வசதியும், ஊர் பாதுகாப்புக்குப் போடப்பட்ட கூட்டமும் இவர்கள் தான் பக்கத்து கிராமங்களுக்கு வெப்பன் சப்ளையர்கள் (நிதியுதவி) என்று கைக்காட்டப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடந்தி அந்த கிராமமே சூரையாடப்பட்டது. இது நடந்ததது ஜெ.ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில்.

கர்ணன் படத்தின் ஆரம்பத்தில் நட்ட நடுசாலையில் ஒரு பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார். அதை பார்க்காதது போல எல்லா வண்டியும் கடந்து செல்லும். அது மிகவும் மிகைப்படுத்தப் பட்ட காட்சி. தமிழ் நாட்டில் மனிதாபிமானம் எக்காலத்திலும் செத்து விடாது. யாராவது காப்பாற்றுவர்கள் என்பதே உண்மை. அதன் மீது சாணி அடிக்க வைக்கப்பட்ட காட்சி தான் அது.

பொடியன் குளம் யானை வைத்து (சொந்தமாக என்றே நினைக்கிறேன். அழகம் பெருமாள் மற்றும் காவல்த்துறை ஆய்வாளர் பேசும் வசனம்) திருவிழா நடத்தும் அளவிற்கு வசதியானது தான். பொது மக்களுக்குத் தொந்தரவு செய்வது நடுசாலையில் ஆட்டம் போடுவது. கர்ணன் ஊர்க்காரர்களை யாரும் நிமிர்ந்து விட கூடாது என்று பஸ் வசதி செய்து தராமலில்லை. அவர்கள் திமிர்ப் பிடித்தவர்கள் என்றே சொல்வார்கள். திமிருடன் மக்கள் போக்குவரத்திற்கு எல்லா தொல்லையும் தருபவர்கள் கேட்டால் தொங்கலில் விடத் தான் செய்வார்கள். காவல்த்துறை அவர்கள் வைக்கும் பஸ் நிறுத்தப் போர்டை உடைப்பார்கள். அடுத்து இவர்களுக்காக பேருந்தை நிறுத்தினால் ஊருக்கு ஊர், காட்டிற்கு காடு போர்டு வைப்பார்கள். திருநெல்வேலி - திருச்செந்தூர் இந்த வழித்தடம் முழுவதுமே அப்படித்தான். இந்த வழியில் கால்வாய் என்று ஒரு ஊர் இருக்கிறது. இவர்கள் சொல்லும் ஆதிக்கச் சாதியினரும், பிற்படுத்தப்பட்டோரும் உள்ள ஊர். அந்த ஊருக்கும் பேருந்து வசதி அப்படித்தான். கலுங்கில் (மெயின் ரோட்டில் உள்ள நிறுத்தம்) அல்லது இன்னொரு ஊரிலிருக்கும் பேருந்து நிலையம் இறங்கி ஊருக்குள் மூன்று மைல் தூரம் நடப்பார்கள்.

பொடியன் குளம் ஊர்க்காரர்கள் டிராக்டரில் போய் மணியாச்சி காவல் நிலையத்தை அடிப்பார்கள். அடிப்பட்டவர்களை டிராக்டரில் எடுத்து வருவார்கள். அந்த ஊரிலிருக்கும் யாரோ ஒருவரின் வண்டி தான அது. ஊர் வாளையே கர்ணனிடம் கொடுக்கும் மக்கள், காவல் நிலையத்திற்கு போக டிராக்டர் தரும் ஊர்ர்க்காரர்கள், ஊரிலிருந்து முதல் முறையாக வெளிவேலைக்காக நடக்கும் (ராணுவம், விமானப்படை) தேர்விற்கு காத்திருக்கும் கர்ணனிற்காக அந்த வண்டியையோ, சைக்கிளையோ தர மாட்டார்களா என்ன? இதுவும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கப்பட வலிந்து வைக்கப்பட்ட காட்சி.

கர்ணன் நாம் பேருந்தில் ஏறினால் முன்னேறி விடுவோம் என்று தடுக்கிறார்கள் என ஊர்ப் பெரியவர்களிடம் கூறுவார். வாய்ப்புக் கிடைக்க முயற்சிபவர்கள் நடந்து கூட செல்வார்கள், விடுதியில் தங்குவார்கள். ஒரே முயற்சியில் விட்டு விடுவார்களா என்ன. மாரி செல்வராஜ் எத்தனை வருடம் போராடி இயக்குனராகியிருக்கிறார். இயக்குனர் ஆகவில்லை என்றால் காரணம் பக்கத்து ஊரிலிருக்கும் ஆதிக்கச் செலுத்தும் சாதிக்காரர்கள் என்று சொல்வாரா?

கர்ணனிற்கு மற்றவர்கள் தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள் என்று அரைகுறை புரிதல் உள்ளதோ அதே போல மாரி செல்வராஜிற்கும் உள்ளது அதுவே. ஏன் திரைத்துறையில் ஆதிக்கச் சாதியில் உள்ளவர்கள் யாராவது ஓடுக்கப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்று தடுக்கிறார்களா என்ன?

மாரி செல்வராஜ் எடுக்க முயற்சித்த நிகழ்வு மாஞ்சோலை பணியாளர்களின் போராட்டமும், தாமிரபரணி படுகொலையும் தானாகயிருக்கும். அதை எடுத்திருந்தால் கொடியங்குளம் தாக்குதல், கர்ணனின் குதிரை, வாள் என்று கதாநாயகப் பிம்பத்தை விதைக்க முடியாதே. உண்மையை வேறு சொல்ல வேண்டும்.

அவரே தாமிரபரணி படுகொலையையும் பதியட்டும். தேதியோடு குறிப்பிடட்டும். பிரச்சனையில்லை. ஒடுக்கப்பட்டோர்களின் பிரதிநிதியாக உருவான துரோகிகளையும் அவர் தோலுரித்து காட்டுவார் என்ற நம்பிக்கை யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்கு தான் நம்பிக்கை போய் விட்டது. 97ம் ஆண்டு முன்பகுதிலிருந்து 90களின் பிற்பகுதிலிருந்து என்று களவாணித்தனம் செய்ததிலிருந்தே தெரிகிறது அவர் நேர்மையும், அறமும்.

கர்ணன், துரியோதனன், அபிமன்பு (பாண்டர்கள் தரப்பு) இவர்கள் எல்லாம் போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்கள். ஒருவருக்கும் பாண்டவர்களின் பெயர்களை வைக்கவில்லை என்று சில குறியீடு கண்டுப்பிடிக்கும் அறிவுச்சுடர்கள் சொல்லலாம். திரௌபதி கர்ணனின் காதலியின் பெயர். கண்ணபிரான் வில்லனின் பெயர். நல்ல வேளை காவல்த்துறையின் தாக்குதலின் போது திரௌபதி தாவணியை கண்ண்பிரான் இழுத்தார். என்று காட்சி வைக்கவில்லை. வைத்திருந்தால் வாச்சாத்தி சம்பவத்தையும் திமுக ஆட்சியின் மீது இழுத்து விட்டிருக்கலாம். வாச்சாத்தி சம்பவம் நடந்த்து 90களின் முற்பகுதியில் என்பதால் விட்டு விட்டாரா அல்லது 92ன் பிற்பகுதியில் நடந்ததால் விட்டு விட்டாரா என்று தெரியவில்லை. பொடியன் குளத்தின் பெண்களின் கற்பை காப்பாற்றி விட்டார் கண்ணபிரான் மன்னிக்கவும் மாரி செல்வராஜ்.

மற்றவர்கள் எல்லாம் பேருந்து (வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைத்தக் காரணத்திற்காக ) வேண்டாம் என்று போராடினார்களாம். மற்றவர்கள் தாக்கிய பேருந்து அரசிற்கு சொந்தமானது. இவர்கள் மட்டும் தான் வேண்டும் என்று போராடினார்களாம். இவர்கள் உடைத்தது தனியாருக்கு சொந்தமானது. காவல்துறை உயரதிகாரியை கொன்று விட்டு கர்ணன் நெற்றியில் மட்டும் தழும்போடு புது மாப்பிள்ளை கணக்காக வந்து இறங்குவாராம். அது நடைமுறையில் சாத்தியமா.

ஏன் மாரி செல்வராஜை இந்த ப்டத்திற்காக இவ்வளவு விமர்சிக்க வேண்டுமா என்றால் ஆமாம். காரணம் விஷபுரத்தைச் சேர்ந்த கருத்துக் கணிப்பு நடத்தும் வெண்முரசு கொட்டும் சேவர்கள்கள் எல்லாம் இது 1997லில் நடந்தது என்று நிறுவத் தொடங்கி விட்டார்கள். அனிதா டிவிட்டரில் அதிமுகவிற்கு ஆதரவாக வீடியோவில் பேசுகிறார். நாளையே ஒருவர் வந்து பொள்ளாச்சி சம்பவமும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் 2021லில் பிற்பகுதியில் நடந்தது என்று படம் எடுப்பார்கள். திமுகவினரும், நடுநிலைகளும் (நேர்மையான) போய் முட்டுக் கொடுத்துக் கொண்டிக்க முடியாது.

மாரி செல்வராஜ் களவாணித்தனத்திற்கு காரணம் தாமிரபரணி படுகொலையும், நீல சங்கிகளின் நட்பு மட்டுமே கிடையாது. ராமின் கொள்கைகளுமே தான் காரணம். ராம் முத்துக்குமார் இறந்து சமயம் எப்படி களமாடினார் என்று என்னுடைய ப்ளாக்ஸ்பாட்டிலேயே தேடி எடுத்துக் கொள்ளலாம்.

பிற்சேர்க்கை : எனக்கு 1995 என்று போடுவது பெரிய விஷயம் கிடையாது, பயமும் கிடையாது என்று சொல்கிறார் (கவனிக்க விகடன் பேட்டி). அவருக்கு பெரிய விஷயமாகவும், பயமும் இல்லாமல் இருக்கலாம். அறமும், நேர்மையும் தானில்லை. படைப்பாளிகளிடம் குறியீடுப் பற்றி அல்லது சில கேள்விகளை கேட்கக் கூடாதாம். அது பயங்கர வன்முறையாம். ஒரு திரைப்பட இயக்குனருக்கே சில கேள்விகளை கேட்கும் போது வன்முறையாக தெரியது ஒரு நாட்டை ஆள்பவர்களுக்கும் கேள்வி கேட்பது வன்முறையாக தெரியும். அப்படி வன்முறையாக தெரிந்த்தால் தான் நடந்தது கொடியங்குளம் கலவரம் என்று சொன்னால் மாரி செல்வராஜ் ஏற்றுக் கொள்வாரா. நீங்கள் படைக்கும் படைப்பு தவறாகயிருந்தால் கேள்வி கேட்போம். அது வன்முறை என்று சொல்லி நீங்கள் தப்பித்து விட முடியாது. இதுவே எல்லோருக்கும் பொருந்தும்.

0 comments: